Monday, July 28, 2014

சதுரங்க வேட்டை - க்ரைம் டெமோ

எப்படி ஏமாந்தேன்னு தெரியல என புலம்புபவர்களுக்கும், எப்படி ஏமாற்றலாம் என யோசிப்பவர்களுக்கும் ஒரு படம்.

கதை, திரைக்கதை என எதுவுமே புதிதல்ல. ஒரு திருடன் ஒரு காதலியால் மனம் திருந்துவதும், திருந்தியபின் மீண்டும் திருட நேர்வதும் மிகப் பழைய ஸ்க்ரிப்ட். ஆனால் அவன் எப்படித் திருடுகிறான், எதைத் திருடுகிறான் என்பதை விவரிக்கும் காட்சிகள் புதுசு.

நூதன திருடர்களை கைது செய்ததும், சம்பவ இடத்தில் வைத்து எப்படி இதை திருடினாய் செய்து காட்டு என போலீஸ் ஒரு டெமோ செஷன் வைக்கும். இந்தப் படம் முழுக்க அப்படிப்பட்ட டெமோக்கள் நிறைந்திருக்கிறது. இந்த செஷன்களுக்கு இடையில் திருடன், கோஷ்டி, எதிர்கோஷ்டி, காதலி, திருந்துதல், திருந்தியபின் சூது கவ்வுதல், அதிலிருந்து மீளுதல் என சில காட்சிகளை சொருகிவிட்டார்கள்.

வீரியம் தரும் மண்ணுள்ளிப் பாம்பு, கோடீஸ்வரனாக்கும் ஈமு கோழி, ஆள் சேர்த்தாலே பணக்காரனாக்கும் எம்.எல்.எம், ஆடித்தள்ளுபடியில் பாதி விலைத் தங்கம், நாட்டுக்கே ராஜாவாக்கும் ரைஸ் புல்லிங். இவை எல்லாம் தொடர்ச்சியாக மக்களை ஏமாளியாக்கிக்கொண்டிருக்கும் கவர்ச்சிகரமான க்ரைம்கள். ஏமாற்று எனத் தெரிந்தும் காலம் காலமாக மக்களை கவருகின்ற பணத்தாசை போதை இவை.

ரஜினி உச்சம் தொட்டபோது ஒரு ”Angry youngman" வெளிப்பட்டான். சாதாரண மக்கள் தட்டிக்கேட்க முடியாத அடாவடி அடக்குமுறைகளை ஒரு சாதாரண இளைஞன் தட்டிக்கேட்டான், ஜெயித்தான் என்பது ஃபார்முலாவாக இருந்தது. இப்போதைய டிரண்ட் அப்படியே வுல்டா. அநியாயத்தைக் கண்டு பொங்குவதில்லை. அவனே அந்த அநியாயத்தை செய்கிறான். ஹீரோவே சாமர்த்தியமான திருடனாக இருக்கிறான். நன்றாக வாழ திருடுவதும், ஏமாற்றுவதும் தவறில்லை என்கிறான். தவறு செய்ய அஞ்சும் மக்கள், தன் சார்பாக ஹீரோ திருடுவதையும், ஏமாற்றுவதையும் இரசிக்கிறார்கள். அவன் திருடி ஜெயிப்பது பிடிக்கிறது. அவனை கொண்டாடுகிறார்கள்.

கல்வி, மருத்துவம், ஆன்மிகம் என எல்லாவற்றிலும் பணம்... பணம்... பணம். பணம்தான் எல்லாம் என்ற காலகட்டத்துக்கு வந்துவிட்டோம். இந்த காலகட்டத்தில் சூது நிறைந்த தலைவர்களும், அவர்களுடைய குண்டர்களும்தான் வசதியாக இருக்கிறார்கள். அவர்கள்தான் நாட்டை ஆளுகிறார்கள் என்பதால், அவர்கள் செய்கிற தவறை நாமும் செய்தால்தான் என்ன என்ற ஏக்கமும், செய்வதற்குரிய பயமும் மக்கள் அனைவரிடமும் உள்ளது.

மக்கள் இரசிகர்களாக படம் பார்க்க வரும்போது அவர்களுடைய பயத்திற்கும், ஏக்கத்திற்கும் ஒரு வடிகாலாக இன்றைய படங்கள் இருக்கின்றன. சூதுகவ்வுமில் துவங்கி சதுரங்க வேட்டை இந்த குணக்கேட்டை புரமோட் செய்யும் படங்கள்தான்.

இடைவேளை வரை சுமார்தான்.. ஆனா ரைஸ்புல்லிங்னு ஒண்ணு இருக்காமே. அதை காமிக்கிற சீன் சூப்பரா இருக்காம் என்று மக்கள் பாப்கார்ன் க்யூக்களில் பேசிக்கொள்கிறார்கள். படத்தின் ஹீரோ ரைஸ்புல்லிங் டெமோதான். நடராஜின் ஒவ்வொரு அசைவிலும் 80களில் அவ்வப்போது தலைகாட்டிய ஆர்ப்பாட்டமில்லாத ரஜினி அமர்ந்திருக்கிறார். குரலும் தோற்றமும் ஒத்துழைக்கிறது. நாயகி இஷாரா பொருத்தமான தேர்வு. கலகலப்பு படத்திற்குப் பின் இளவரசு இதில் கச்சிதமான காமெடி. ரைஸ்புல்லிங் ஏமாற்றை படமாக்கியதில் மட்டும் இயக்குநர் விநோத் குறிப்பிடும்படியாக செய்திருக்கிறார்.

படத்தை தொய்வில்லாமல் உணரவைப்பது திரைக்கதை அல்ல. வசனமும், ஒவ்வொரு க்ரைமுக்கும் முன் வரும் டைட்டில்கார்டும்தான்.

ஃபேஸ்புக், கூகுள் பள்ஸ் மற்றும் டிவிட்டரில் வசிக்கும் சென்னைவாசிகளுக்கு படம் மிகவும் பிடித்திருக்கிறது. நானும் அங்கே வசிப்பவன்தான் என்றாலும் என்னால் இதை நல்ல படம் என்று ஒப்புக்கொள்ள முடியவில்லை. இது நல்ல படம் என்று சொல்லப்படுகிற ஹிட் படம் அவ்வளவுதான்.

படத்தில் காண்பிக்கப்படாத க்ரைம் ஒன்று இருக்கிறது.  ரைஸ்புல்லிங்கை விட மோசமான க்ரைம் அது. அதன் பெயர் ரெவ்யூ ஸ்கோரிங். ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைகள் இந்த க்ரைமில் கில்லாடிகளாக இருக்கிறார்கள்.  தங்களுக்கு வேண்டியவர்களின் படமாக இருந்தால் இஷ்டத்துக்கு மார்க்குகளை அள்ளி வீசி, சம்பந்தப்பட்டவர்களின் பேட்டிகளால் பக்கத்தை நிரப்பி ஏதோ காவியம் ஒன்று ரிலீஸ் ஆகிவிட்டது போல இரசிகர்களை நம்ப வைக்கிறார்கள்.

அடுத்த க்ரைம் படத்தில் இந்த போலி விமர்சகர்களை யாராவது அம்பலமாக்கினால் வரவேற்பேன்.

No comments: