Saturday, June 23, 2018

காலத்தின் தேவை கிராமங்கள்தான் - எட்டு வழிச்சாலைகள் அல்ல

எல்லா விவாதங்களும் மோடி ஆதரவு (அ) மோடி எதிர்ப்பு என்கிற கண்ணாடியை மாட்டிக் கொண்டு எதிர்கொள்ளப்படுகிறது. தொலைக்காட்சி விவாதங்கள் முதல் சமூக வலைத்தளங்கள் வரை இந்த கண்ணாடிதான் உண்மைகளை திரிக்கிறது.
ஆனால் இந்தியாவும், அதனுடைய ஆன்மாவான கிராமங்களும், விவசாய வாழ்க்கை முறையும், எளிய மக்களும் மோடிக்கு முன்பும் இருந்தார்கள், மோடிக்குப் பின்பும் இருப்பார்கள்.
எனவே தற்போது மோடிக்குப் பதில் மகாத்மா காந்தியே இந்தியப் பிரதமராக இருந்தாலும், எட்டு வழிச்சாலைகள் திணிக்கப்படும்போது நான் எனது சந்தேகங்களைக் கேட்பேன், அதுகுறித்து விமர்சனங்களை எழுப்புவேன்.
என்னைப் பொறுத்தவரையில் விவசாயமும், இயற்கை வளங்களும் பாதுகாக்கப்படும் திட்டங்கள் தான் காலத்தின் தேவை. வளர்ச்சி என்கிற பெயரில் கான்க்ரீட் காடுகளை உருவாக்குவதை விட இருக்கிற காடுகளை பாதுகாப்பதும் வளர்ப்பதும்தான் உடனடித் தேவை. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகின் வல்லரசு என்று மார்தட்டிக் கொள்ளும் மற்ற நாடுகளுக்கும் பொருந்தும்.
இந்தியா இயல்பாகவே பசுமையான விவசாய நாடு. அதை அமெரிக்கா போல சாலைகளும், கட்டிடங்களும் நிறைந்த நரகமாக மாற்றிவிட்டு, பிறகு மொட்டை மாடியில் பயிர் செய்கிறேன் என்பதும், பூமியிலிருந்து தப்பித்துப் போய் செவ்வாய் கிரகத்தில் குடியமர்வேன் என்பதும் அபத்தம்.
அமீபா முதல் மனிதன் வரை வாழ்க்கை என்பது சுத்தமான நீரிலும், நிலத்திலும், மாசுபடாத காற்றிலும் ஆகாயத்திலும்தான் இருக்கிறது. கான்க்ரீட்டுகளில் அல்ல.
நம் குழந்தைகளின் எதிர்கால வாழ்வு வளமாக இருக்க வேண்டுமென்றால், இந்தியாவின் ஆன்மாவான கிராமங்களும், விவசாயமும் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கான திட்டங்கள் எந்த அரசாங்கத்திடம் இருந்தாலும் சொல்லுங்கள். காவல் துறையின் அதட்டல்கள் இல்லாமல் மக்களே இரு கரம் கூப்பி வரவேற்பார்கள்.

No comments: