Saturday, July 9, 2022

பொன்னியின் செல்வன் திரைப்படம் எப்படி இருக்கும்?

பொன்னியின் செல்வன் எப்படி இருக்கும்?

எதிர்காலத்தில் தமிழ்மண் சார்ந்த பல வரலாறுகளை படமாக்கத் துணிவும், உற்சாகமும் தரும் துவக்கமாக இருக்கும். டீசர் மற்றும் அதைத் தொடர்ந்து வெளியான டிரோல் மற்றும் ரியாக்சன் வீடியோக்களை பார்த்தபின் எனக்கு இதுதான் தோன்றியது.
டீசர் வெளியான வினாடியிலிருந்து தற்போது வரை பொன்னியின் செல்வன் தான் டிரெண்டிங். எதிர்பார்த்தபடியே டிரோல்கள் ஊர்வலம் வருகின்றன. என்னுடைய குந்தவையை காணோம், நந்தினியை ஏற்க முடியாது என வகைவகையான டிரோல்கள்.
அதே நேரத்தில் நிறைய டீசர் ஆடியன்ஸ் ரியாக்சன் வீடியோக்கள் பார்த்தேன். அதில் பேசியவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள். அவர்கள் அப்படியே நேர்மாறாக உற்சாகமாக இருக்கிறார்கள். வழக்கமாக என் தலைவன், உன் உயிர் என்று நடிகர்களைக் கொண்டாடும் அவர்கள், முற்றிலும் புதிய இரசிகர்களாக வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், என் மொழி... அதை பிரமாண்டமாக பேசும் பொன்னியின் செல்வன் என்று கூறினார்கள். நான்கைந்து பேர் டீசர் வெளியாவதற்கு முன் தொடர்ந்து பொன்னியின் செல்வன் பாட்கேஸ்ட் கேட்டு கதையை புரிந்து கொண்டதாகவும் கூறினார்கள்.
மணிரத்னம் இந்த இளைஞர்களை ஏற்கனவே கவர்ந்துவிட்டார் என்றுதான் கூற வேண்டும். அடுத்தடுத்த டிரெய்லர் மற்றும் டீசர்கள் இந்த இரசிகர் வட்டத்தை நிச்சயம் பெரிதாக்கும் என்றுதான் நினைக்கிறேன்.
ஆனால் என் மண், என் கலாச்சாரம் என் பொன்னியின் செல்வன் என்கிற ஈர்ப்பு மற்ற மொழிகளில் எப்படி எடுபடும் எனத் தெரியவில்லை.
ஒன்று மட்டும் நிச்சயம்... விக்ரம் படம் ஏற்படுத்தியிருக்கும் பாக்ஸ் ஆபீஸ் அதிர்வுகளால் இரசிகர்கள் தியேட்டருக்கு திரும்ப வரத் தயார் மன நிலையில் இருக்கிறார்கள். அவர்களை பொன்னியின் செல்வன் படம் மீண்டும் தியேட்டருக்கு குடும்பம் குடும்பமாக வரவேற்கும் என்று நான் நம்புகிறேன்.

No comments: