Sunday, November 16, 2008

சூர்யாயிரம் : திரை விமர்சனம்

'காக்க காக்க'வை சேரன் இயக்கியிருந்தால் எப்படி இருக்கும்? சூர்யா ஹீரோயினாகி, ஜோதிகா ஹீரோவாகியிருப்பார். ஆட்டோகிராபை கெளதம் இயக்கியிருந்தால் எப்படி இருக்கும்? சேரன் காதல் தோல்வியில் கஞ்சா அடித்து, டெரரிஸ்ட் ஆகி இன்னொரு காதல் செய்திருப்பார்.

இது கிண்டல் கிடையாது, என்னடா இது, நல்ல முயற்சி, ஆனா . . இப்படி இருக்கேன்னு ஒரு ஆதங்கம்.

சேரனின் தவமாய் தவமிருந்தின் பாதிப்பு வாரணம் ஆயிரத்தில் இருக்கக்கூடும் என்று கெளதம் சில மாதங்களுக்கு முன்பு ஏதோ ஒரு பத்திரிகை பேட்டியில் கூறியிருந்தார். அவர் சொன்னது போல பாதிப்பு இருக்கிறது, ஆனால் பாதிதான் இருக்கிறது. மீதியை காக்க காக்க கமாண்டோக்களும், வேட்டையாடு விளையாடு டெரரிஸ்டுகளும், டிரக் அடிக்டுகளும் ஆக்கிரமித்துவிட்டார்கள்.

அமெரிக்காவுக்கு எம்.எஸ் படிக்கப் போகும் மேக்னாவை, ஒரு இரயில் பயணத்தில் பார்த்தவுடன் காதலிக்கிற சூர்யா, அமெரிக்காவிற்கே சென்று காதலில் ஜெயிக்கிறார். ஆனால் அமெரிக்காவிலேயே ஏதோ ஒரு குண்டு வெடிப்பில் மேக்னா இறந்துவிட, இந்தியா திரும்பும் சூர்யா சோகத்தை மறக்க Drug addictஆக மாறி, பின்னர் திருந்தி இந்திய இராணுவத்தில் சேர்கிறார். சேர்ந்த கையோடு பள்ளிக்காலத்தில் கூட படித்த பிரியாவை மணக்கிறார்.

இவருடைய இந்த முடிவுகளுக்கும், வெற்றி(?)களுக்கும் காரணம் தன்னுடைய அப்பாதான் என்று படத்தின் முதல் காட்சியிலிருந்து கடைசி ஃபிரேம் வரைக்கும் சூர்யா சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஆனால் அந்த உறவின் ஆழத்தைச் சொல்ல ஒரே ஒரு காட்சி கூட படத்தில் இல்லை.

படத்தின் ஆரம்ப டைட்டில் முடிந்தமே சூர்யாவின் ஆதிக்கம் கொடி கட்ட ஆரம்பித்துவிடுகிறது. எழுபதுகளின் பள்ளி மாணவனாக சூர்யா. எண்பதுகளின்
காதலனாக சூர்யா, 90களின் தகப்பனாக சூர்யா, 2000த்தின் இளைஞனாக சூர்யா, என வயதின் பல பரிமாணங்களை இளமை, முதுமை - காதல், கவர்ச்சி - துள்ளல்,மோதல் - பயம்,வீரம் என பல சுவைகளுடன் வெளிக்காட்டியிருக்கிறார். எனக்குத் தெரிந்து எந்த ஒரு நடிகனுக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததில்லை. சூர்யாவைப் போல உணர்ந்து மெனக்கெட்டு நடித்ததுமில்லை.

ஆனால் அழுத்தமான காட்சிகள் இல்லாததால், அர்த்தமில்லாத கவிதையை வாசிப்பது போல இருக்கிறது.

சிம்ரன் அடுத்த கட்டத்துக்கு வந்துவிட்டார். காதலியாக, மனைவியாக, அம்மாவாக, கணவனை இழந்து கொண்டிருப்பவளாக வெகு இயல்பு.

மேக்னா நாயுடு, சிரிக்கிறார். . . சிரிக்கிறார் . . சிரித்துக்கொண்டே இருக்கிறார். முதலில் இந்தியாவில், அப்புறம் அமெரிக்காவில். டிரெயினில் அவரைக் கண்டதும் சூர்யாவின் கண்டதும் காதல் ஒரு ஸ்வீட் எபிசோட்.

பக்கத்துவீட்டு ப்ரியாவாக வரும் ரம்யாவுக்கு பெரிதாக வாய்ப்பில்லை.

ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் ஏற்கனவே டாப் 10ல் கலக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் பிண்ணனி இசையில் ஏமாற்றமே.

சூர்யாதான் கமலின் வாரிசு என்பதையும், கெளதம் மேனனுக்கு - Gangsters, Drugs, Encounter இவற்றைத் தவிர வேறு எதையும் அழுத்தமாகச் சொல்ல முடியாது என்பதையும் நிரூபித்திருக்கிற படம்.

No comments: