Friday, November 28, 2008

இந்திய அரசியல்வாதிகளுக்கு ஒரு வேண்டுகோள்!!!

"We request Advani and other politicians not to come to Mumbai at this moment. We don't want our security forces run behind them to safe guard them. We need them for our Mumbai"

என்று எழுத்தாளர் ஷோபா டே NDTV 24x7 சேனலில் குமுறிக் கொண்டிருந்தார்.

ஒரு புறம் தீவிரவாதிகளின் பிடியில் ஓபராய், தாஜ் ஹோட்டல்கள் பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது, இன்னொரு புறம் மும்பை தூசு தட்டி எழுந்து நிற்க ஆரம்பித்துக் கொண்டிருந்தது. உயிரை துச்சமாக மதித்து தைரியமாக கூடி நின்ற மக்கள் மேலும் மேலும் வந்து இறங்கிய இராணுவத்தினரையும், போலீசாரையும், கமாண்டோக்களையும் கைதட்டி உற்சாகமாக வரவேற்றார்கள். "பாரத் மாதா கி ஜே", "வந்தே மாதரம்" என்ற கோஷங்கள் துப்பாக்கி சத்தங்களை மீறி ஒலித்தன.

அதே நேரத்தில் (நேற்று) அத்வானி அங்கு வந்து சென்றார். அவரைத் தொடர்ந்து (இன்று) மோடி வந்திறங்கிச் சென்றார். இன்னும் பல அரசியல்வாதிகள் வந்து செல்லக் கூடும். அவர்கள் வருவது ஓட்டுக்காகவா? அரசாங்கத்தை திட்டவா? இக்கட்டான நேரத்தில் மக்களை சந்திக்கும் அக்கறையா? என்ற விவாதத்தில் இறங்க வேண்டாம். அது தற்போதைய தேவையும் அல்ல.

ஒவ்வொரு துப்பாக்கியும், ஒவ்வொரு பாதுகாவலரும், ஒவ்வொரு பாதுகாப்பு நடவடிக்கையும் மும்பையை ஊடுருவியிருக்கும் தீவிரவாதிகளை குறி வைத்து இயங்கும்போது, இந்த அரசியல் வி.ஐ.பிக்களின் வருகை நிச்சயம் ஒரு தடங்கல்தான். இந்த அரசியல்வாதிகளைத் தொடரும் கார்களும், கைத்தடிகளும், இந்த நேரத்தில் மிகப்பெரிய கவனச் சிதறல்தான்.

ஒவ்வொரு நொடியும் நாட்டின் பாதுகாப்புக்கு தேவைப்படும்போது, இந்த அரசியல் வி.ஐ.பிக்களின் பாதுகாப்புக்காக சில நிமிடங்களாவது அந்த பாதுகாப்பு திசை திரும்புகிறது. எனவே அவர்களுடைய வருகை இந்த தருணத்தில் தேவையற்றது.

எனவே 'இந்திய அரசியல்வாதிகளுக்கு ஒரு வேண்டுகோள்!!! தயவு செய்து சில நாட்களுக்கு மும்பை பக்கம் வராதீர்கள். நாட்டின் காவலர்களுக்கு தற்போது மக்களை காப்பதே முக்கியம். உங்களைக் காப்பது அல்ல."

ஷோபா டே இதைத்தான் சொன்னார். நான் வழி மொழிகிறேன்.

1 comment:

புலோலியான் said...

இந்தியா தன் அயலுறவுக் கொள்கைகளில் தீவிர மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். தற்போதுள்ள கொள்கைகள் ஒரு நயா பைசா பிரயோசனம் இல்லாதது.

பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் ஏற்கனவே எதிரிகள். அந்த நாடுகளுடனான உறவுகளைச் சீர் செய்வது கடினம். ஆனால் இலங்கை விவகாரத்தில் இந்தியக் கொள்கைகள் மிகக் கேவலம். இலங்கை அரசின் நண்பர்கள் சீனா மற்றும் பாகிஸ்தான். இந்த உண்மையை வைத்துக்கொண்டே இந்தியாவை மிரட்டுகிறது சுண்டைக்காய் இலங்கை. அதன் மிரட்டலுக்குப் பயந்து இந்தியாவும் ஓடோடி ராடார், ஆயுதங்கள், பண உதவி மற்றும் ஆயுதப்பயிற்சி முதலானவற்றை வழங்குகிறது.

ஆனால் இலங்கை அரசோ பாகிஸ்தானின் பொருளாரதாரத்தை நிமிர்த்தும் வகையில் அவர்களிடமிருந்தே ஆயுதங்களை வாங்குகிறது. கிட்டத்தட்ட 10 பில்லியன் இந்திய ரூபாய்கள் மதிப்பிலான ஆயுதங்கள் பாகிஸ்தானிடமிருந்து இலங்கையால் இந்த வருடம் வாங்கப்பட்டுள்ளன. இந்தப்பணத்தின் ஒரு பகுதி இலங்கையால் இந்தியாவிடம் இருந்து பெறப்பட்டது. இவ்வாறு இலங்கை பாகிஸ்தானின் பொருளாதாரத்துக்கு இந்தியப் பணத்தின்மூலம் உதவி செய்ய, பாகிஸ்தானோ பயங்கர வாதிகளைப் பயிற்றுவித்து இந்தியாவுக்கு அனுப்புகிறது. இது எவ்வளவு மடத்தனம்.?

இந்தியாவின் தெற்கு எல்லை பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் தனித்தமிழீழம் தோற்றுவிக்கப்பட வேண்டும். ஈழத்தமிழர் தமது தொப்புள்கொடி உறவுகளாம் தமிழகத் தமிழர்கள் வாழும் இந்தியாவுக்குப் பாதகமாகச் செயல்பட மாட்டார்கள். அவர்களின் போராட்டம் இதுவரை பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளிடம் சோரம் போன‌தில்லை. இதுவே அவர்களின் இந்திய சார்பு நிலைக்குச் சிறந்த எடுத்திக்காட்டு.