Showing posts with label சிந்திப்போம். Show all posts
Showing posts with label சிந்திப்போம். Show all posts

Saturday, July 19, 2014

MH 17 விமானம் சுடப்பட்ட மர்மம் : அமெரிக்கா - ரஷ்யா சண்டையாகிக்கொண்டிருக்கிறது.


மலேசியவிமானம் MH 17 சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் பெரிய அண்ணன்களான அமெரிக்க, ரஷ்ய சண்டையாக மாறிக்கொண்டிருக்கிறது. 

33,000ம் அடி உயரத்தில் பறக்கிற விமானத்தை சுட்டு வீழ்த்த வேண்டுமானால் வலிமையுள்ள ஏவுகணை வேண்டும். அதை துல்லியமாக இயக்க நன்றாக பயிற்சி பெற்றவர்கள் வேண்டும். அப்படிப்பட்ட ஏவுகணையும், இயக்கும் பயிற்சியும் உக்ரைன் நாட்டுக் கிளர்ச்சியாளர்களுக்கு இருக்க வாய்ப்பு உண்டு. 

உக்ரைன் நாட்டுக் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா தொடர்ந்து பயிற்சியும் ஆதரவும் கொடுத்துவருகிறார்கள். ஏவுகணை கிளர்ச்சியாளர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியிலிருந்துதான்  ஏவப்பட்டுள்ளது. எனவே ஏவுகணை இயக்கப்பட்ட விதத்தையும், ஏவப்பட்ட பகுதியையும் கவனிக்கும்போது எல்லா சந்தேகங்களும் உக்ரைன் கிளர்ச்சியாளர்களை நோக்கி குவிகிறது. 

விமானத்தை சுட்டு வீழ்த்த உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா உதவி செய்துள்ளது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா நேரடியாகவே குற்றம் சுமத்துகிறார்.  

சமீபகாலமாக ரஷ்யா மீண்டும் தலையெடுக்க முயல்வதும், அமெரிக்கா எரிச்சலுடன் கவனிப்பதும் நடந்துகொண்டே இருக்கிறது. எனவே அமெரிக்காவின்  இந்தக் குற்றச்சாட்டு உண்மையா? பொய்யா? என்பதை கணிப்பது கடினம்.

உக்ரைன் அதிபர் படு கோபத்தில் இருக்கிறார். மது குடித்த கொரில்லாக்களால் இதைச் செய்ய முடியாது. நிச்சயம் ரஷ்யாவின் ஆதரவுடன் கிளர்ச்சியாளர்கள்தான் இதைச் செய்திருப்பார்கள் என்கிறார் காட்டமாக.

விமானம் வீழ்ந்து கிடக்கும் பகுதி தற்போது கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பயணிகளின் உடல்களை அவர்கள் தான் கண்டுபிடித்து சேகரித்து வருகிறார்கள். இதனை கண்காணிக்க யாரையும் அவர்கள் அனுமதிக்கவில்லை. தைரியமாக நெருங்கிய பத்திரிகையாளர்களை வானத்தை நோக்கி சுட்டு விரட்டியடித்திருக்கிறார்கள். அப்பாவி பயணிகளின் உடல்கள் கொடுமையான வெப்பத்தில் கிடக்கின்றன. எனவே அவற்றை விரைவில் குலைந்து போகாமல் தடுக்க நாங்கள் பத்திரப்படுத்தி வருகிறோம் என்கிறார்கள். ஆனால் அவர்கள் தடயங்களை அழிக்கிறார்கள் என்று ஒபாமாவும், உக்ரைன் அதிபரும் குற்றம்சாட்டுகிறார்கள். சர்வ தேச மனித உரிமை ஆர்வலர்களை ஒரு குறிப்பிட்ட எல்லை வரை அனுமதித்துவிட்டு, அந்தப் பகுதி மக்கள் எவருடனும் பேசக்கூடாது எனச் சொல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

பிளாக் பாக்ஸை காணோம் என்கிறது உக்ரைன். விபத்து நடந்த முதல் சில மணி நேரங்களிலிருந்தே ரஷ்யாவை குற்றம் சொல்ல ஆரம்பித்துவிட்டது அமெரிக்கா. ஒபாமாவே நேரடியாக ரஷ்யாதான் காரணம் என்கிறார். இது உக்ரைன் உள்நாட்டுப்பிரச்சனை அல்ல. இதில் உலக நாடுகளின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளது. எனவே மற்ற நாடுகளும் இதில் தலையிட்டு விசாரிக்க வேண்டும் என்று உக்ரைன் பிரச்சனையை வழக்கம்போல தனது ஸ்டைலில் சர்வதேசப் பிரச்சனையாக்க அமெரிக்கா முயல்கிறது. ரஷ்யாவோ அசரமாட்டேன்கிறது. இன்னும் விசாரணையே துவங்கவில்லை. அதற்குள் ஏன் தீர்ப்பு தருகிறீர்கள் என்று அமெரிக்காவின் மேல் பாய்கிறது. உக்ரைன் உள்நாட்டுக் கிளர்ச்சியாளர்களுக்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்பே இல்லை என்று நற்சான்றிதழ் தருகிறது. இப்படி மாறி மாறி அமெரிக்காவும், ரஷ்யாவும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டு அப்பாவி மக்களையும், நாடுகளையும் பலிகொடுக்கிறார்களோ என எனக்குத் தோன்றுகிறது.


ஆனால் முக்கியமான சில கேள்விகள் இருக்கின்றன. உக்ரைன் நாட்டு கிளர்ச்சியாளர்கள் மலேசிய விமானத்தை ஏன் சுட்டு வீழ்த்தவேண்டும்? அதனால் அவர்களுக்கு கிடைக்கும் அரசியல் ஆதாயம் என்ன? ரஷ்யாவின் உத்தரவை ஏற்று இந்த தாக்குதலில் ஈடுபட்டார்கன் எனச் சொல்வது உண்மையாக இருந்தால், ரஷ்யாவிற்கு இதனால் என்ன இலாபம் என்பது தெளிவாகத்தெரியவேண்டும்.

இந்தக் கேள்விகளுக்கு ரஷ்யா வாய் திறக்கப்போவதில்லை. ஆனால்  அமெரிக்காவோ, உக்ரைன் அதிபரோ பதில் சொல்வார்கள் என்றால், மர்ம முடிச்சுகள் அவிழக்கூடும்.

Tuesday, February 15, 2011

அந்த இளைஞர்களுக்கு சல்யூட்!






கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன். நான் அப்போதுதான் கல்லூரி முடித்து கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம் துவங்கியிருந்த நேரம். உதவும் கரங்கள் வித்யாகரை சந்தித்தேன்.

”நீங்கள் வாரா வாரம் இங்கிருப்போருக்கு கம்ப்யூட்டர் பயிற்சி தர முன் வந்திருப்பது நல்ல விஷயம். ஆனால், உங்களால் இதை தொடர்ந்து செய்ய முடியும் என்ற உத்திரவாதம் தந்தால் மட்டுமே, நான் உங்கள் உதவியை ஏற்பேன்”, என்றார். அவர் குரலில் இருந்த மெல்லிய கடுமை என்னை கோபம் கொள்ள வைத்தது. உதவி செய்ய வந்திருக்கிற ஒருவனை, உன்னால் தொடர்ந்து செய்ய முடியுமா? என்று கேட்பது என்ன நியாயம் என்று மனதிற்குள் புகைந்த கேள்விகளுடன் விடைபெற்று விட்டேன்.

கடந்த ஞாயிறன்று கிட்டத்தட்ட இதே கேள்வியை இயக்குனர் சேரன் கேட்டார் அல்லது தன்னைத் தானே கேட்டுக் கொண்டார். யுத்தம் செய் திரைபடத்திற்க்காக, சென்னை ஐநாக்ஸ் தியேட்டரில் ஒரு சிறப்புக் காட்சியை ஏற்பாடு செய்து, அதில் கிடைத்த தொகையை கொரட்டூரில் உள்ள ஒரு குழந்தைகள் விடுதிக்கு அளித்துவிட்டு காரில் சன்னமான வேகத்துடன் திரும்பிக் கொண்டிருந்தோம். உடன் சகோதரன் அன்பு மற்றும் தங்கை கயல்.

”பணம் கொடுத்தோம், அவர்களும் வாங்கிக் கொண்டார்கள். இது ஒன்று அல்லது இரண்டு வாரத்திற்கு அக் குழந்தைகள் சாப்பிட உதவும். அதற்குப் பின் என்ன? இந்த தொகையை கொடுத்ததுடன் நம் பங்களிப்பு முடிந்துவிட்டதா? ஒரே ஒரு நாள் பணம் கொடுப்பதின் மூலம், அக் குழந்தைகளின் எதிர்காலத்தை நம்மால் வளமாக்க முடியுமா?” என்றார்.

கிட்டத்தட்ட வித்யாகர் கேட்ட கேள்வி. ”ஒரே ஒரு நாள் வந்து கம்ப்யூட்டர் பயிற்சி தந்தால் போதுமா?” நியாயமான கேள்வி. ஒரு கல்லூரி மாணவனாக கோபத்துடன் எதிர்கொண்டு, பின் அனுபவத்தில் புரிந்து கொண்ட கேள்வி. உதவி செய்தல் என்பது வெறும் நல்ல குணமாக மட்டும் இருத்தல் போதாது. தொடர்ந்து செய்யக் கூடிய ஒரு குறைந்தபட்ச திட்டமாவது இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த உதவி முழுமை பெறும்.

காட்சி முடிந்ததும் வீட்டுக்குத் திரும்புகிற சினிமா இரசிகனின் மனநிலை இது போன்ற சமூக சேவைகளுக்கு ஒத்து வராது. எவ்வளவுதான் நல்லவராக இருந்தாலும், தொடர்ந்து அர்ப்பணிக்கின்ற ஒரு குறுகிய கால திட்டமாவது இருக்க வேண்டும்.

இரத்த தானம், பள்ளிகளில் குப்பை தொட்டி வழங்குவது, மெடிக்கல் கேம்ப் என்று சின்னச் சின்னதாக நற்பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், எதையும் தொடர்ச்சியாகச் செய்யவில்லை என்பது என்னைப் பொறுத்தவரை உண்மை. ஒரு செடிக்கு ஒரே ஒரு நாள் நீரூற்றிவிட்டு மறுநாள் அது கருகினால் அதற்கு நான் பொறுப்பில்லை என்று விலகிக் கொள்கிற மனப்பான்மை, ஒரே ஒரு நாள் உதவி செய்துவிட்டு விலகிக் கொள்வதிலும் உள்ளது.

சேரன் மனதிலும் இதே எண்ணம் நிச்சயம் தோன்றியிருக்க வேண்டும். நாங்கள் தொகையை வழங்கச் சென்ற நேரத்தில் அங்கு ஒரு பெண் உட்பட சில இளம் கம்ப்யூட்டர் வல்லுனர்களை பார்த்தோம். ஒவ்வொரும் TCS, Ford போன்ற நிறுவனங்களில் கைநிறைய சம்பாதிப்பவர்கள். கல்லூரியில் படித்த காலத்தில் இருந்து, தற்போது பணிக்கு வந்துவிட்ட நிலையிலும் தொடர்ச்சியாக சமூக நலப் பணியில் ஈடுபட்டிருப்பதாகச் சொன்னார்கள். குறிபபாக நாங்கள் சென்றிருந்து குழந்தைகள் விடுதிக்கு, ஒரு வருடத்திற்கும் மேல் வருகை தந்து குழந்தைகளின் கல்வி மற்றும் மற்ற திறன்களை வளர்க்க உதவி செய்து கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.

”இளைஞர்களாகிய நீங்கள் எந்த எதிர்பார்ப்பும் இன்றி வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை தருகிறது. என்னுடைய வருகையை விட, உங்கள் வருகை அர்த்தமுள்ளது”, என சேரன் அவர்களை பாராட்டினார்.

நாங்கள் சில ரோஜாக்களுக்கு ஒரு நாள் தண்ணீர் வார்த்துவிட்டு வந்துவிட்டோம். அந்த இளைஞர்கள் அவற்றை தினம் தினம் பாதுகாக்கிறார்கள். அவர்களே இந்தியாவின் ”புதிய தலைமுறை”


Monday, February 14, 2011

இதுதான் காதல் என்பதா?


நான் ஓய்வெடுக்கப் போவது என் வீட்டு காலிங் பெல்லிற்கு எப்படியோ தெரிந்துவிடும். இன்றும் அப்படித்தான். எழுந்து வர்றீயா இல்லையா என்பது போல தொடர் டிர்ர்ர்ரிங்.. கடுப்புடன் மாடியிலிருந்து எட்டிப் பார்த்தபோது ஒரு இளம்பெண்ணும் ஆணும்.

”சார் ஒரு நிமிஷம்” என்றாள் அவள்.
 ”எனக்கு எதுவும் வேண்டாம்மா”, என்று ஒரே வாக்கியத்தில் அவளை துரத்தப் பார்த்தேன்.
”சார். . . நான் சென்சஸ் எடுக்க வந்திருக்கேன்”, என்றாள். பட்டென என் மூடு மாறியது. படி இறங்கி வந்தேன்.

”ஓ . . . மன்னிக்கணும். நான் யாரோ சேல்ஸ் கேர்ள் என நினைத்துவிட்டேன்”
”பரவாயில்ல சார்.. ஒரு சேர் கொடுங்க சார்”, அவளிடம் பல நாள் பழகிய பெண்ணைப் போல, புன்னகை கலந்த இயல்பு.

சேரை எடுத்துப் போட்டு விட்டு, ”தண்ணீர் வேண்டுமா?” என்றேன்.
”வேண்டாம் சார். ஆனால் வேணுமான்னு கேட்டதுக்கு ரொம்ப நன்றி சார்”, இம்முறை அந்த ஆண் பேசினார். அவரது குரலும் என்னை உடனே நண்பனாகு என்றது. என்னை அறியாமல் ஒரு புன்னகை பிறக்க, அவர் அப்பெண்ணிடமிருந்து சில தாள்களை வாங்கிக் கொண்டு, ”நான் எதிர் வீட்டுக்குப் போய் வேலையை முடிக்கறேன்”, என்றபடி சென்றுவிட்டார்.
 
”சார் உங்க பேரு”, என்றாள் அப் பெண்.
சொன்னேன்.
”பிறந்த தேதி” , என்றாள்.
சொன்னேன்.
தொடர்ந்து அவள் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டே இருந்தேன்.
”அவ்வளவுதான் சார். இந்த இடத்துல உங்க பேர் எழுதி கையெழுத்துப் போடுங்க”, என்று கூறியபோது, அந்த ஆண் உள்ளே நுழைந்தார். கையில் தண்ணீர் பாட்டில்.

”இவங்க வெளியில தண்ணி குடிக்க மாட்டாங்க சார், அதான் கடையில போய் வாங்கிட்டு வந்தேன்”, என்றவர் அந்தப் பெண்ணைப் பார்த்து ”இந்த பிஸ்கெட்டையும் கொஞ்சம் சாப்பிட்டா தெம்பா இருக்கும்”, என்றார்.
உடன் வேலைசெய்யும் பெண்ணின் மேல் இவ்வளவு கரிசனமா? என்ற எண்ணம் எழுந்த போதே,
”சார் இவங்க என் கணவர்”, என்றாள் அப்பெண்.
எனக்குள் பட்டென ஒரு ஆச்சரியம் பூத்தது.

”நீங்க ரெண்டு பேருமே டீச்சர்ஸா?”
”இல்ல சார். நான் மட்டும்தான் டீச்சர். பாரதி வித்யாலயாவில ஒர்க் பண்றேன். இவரு ஆட்டோ ஓட்டறார்.”
”பாவம் சார் இது. தினம் 7 மணிக்கெல்லாம் சென்சஸ் எடுக்க கிளம்பிடுது. சரியா சாப்பிடறது கூட இல்ல. வெயில்ல சுத்துது. நாலு நாளா பாக்கறதுக்கே மனசு கேட்கல சார். அதான் இன்னைக்கு ஆட்டோ ஓட்டறத விட்டுட்டு, நானும் கூடவே வந்துட்டேன்.”
”கூடவே நீங்களே சென்சஸ் எடுக்கறதெல்லாம் இருக்கட்டும். ஆனா அதுக்கு பணம் கிடைக்காதே, ஆட்டோ வருமானமும் போயிடுமே”
”அட போனா போகுது சார். பணம் யாருக்கு சார் வேணும். என்னை நம்பி வந்த பொண்ணு, என் முன்னாடி கஷ்டப் படாம இருந்தால், எனக்கு அதுவே போதும். பாருங்க வெயில்ல சுத்தி எவ்வளவு கருத்துடுச்சு”, குரலில் அப்படியொரு வாஞ்சை!
அதைக் கேட்ட அடுத்த வினாடி மளுக்கென்று ஒரு விசும்பல். அந்தப் பெண்ணின் கண்களில் ஈரம்.
”ஏய்.. நீ ஏம்மா அழற?”, என்றபடி அவர் அவளை அணைத்துக் கொள்ள, அவரின் கண்களில் இருந்தும் அடங்கமாட்டாமல் கண்ணீர் பெருக்கெடுத்தது.
உலகமே காதலர் தினத்தை வாழ்த்து அட்டைகளிலும், அர்த்தமற்ற சேட்டைகளிலும் கொண்டாடிக் கொண்டிருக்க, இங்கே இரு அன்பான ஜீவன்கள் காதலர் தினத்துக்கு அர்த்தம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

”அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!”
 என் கண்களிலும் ஈரம் கோர்க்கிறதோ...! இருக்கட்டும்!
அனைவருக்கும் இந்த தம்பதியினரின் சார்பாக, காதலர் தின வாழ்த்துகள்!

புகைப்படம் - ஜெயராஜ் பாண்டியன்.

Thursday, November 11, 2010

ராஜாவை கை கழுவினால், காங்கிரசுக்கு ஆதரவு - ஜெவின் ஓப்பன் பல்டி!

ராஜாக்களும், ராணிக்களும் முழுவீச்சில் களமிறங்க ஆரம்பித்துவிட்டார்கள். இனி இந்திய அரசியலில் எல்லா கூத்துகளும் நடக்கும். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடிபடும் தொகையைக் கேட்டால் தலையை சுற்றுகிறது. அதை விட தலை சுற்றல் ஜெயலலிதாவின் காங்கிரஸ் ஆதரவு பேட்டி

நேற்று இரவு வரை காங்கிரசை திட்டிக் கொண்டிருந்தார் ஜெ. அதை நம்பி அதிமுக எம்பி மைத்ரேயனும் காலையில் ஆங்கில டிவிக்களில் காங்கிரசை வசைபாடிக் கொண்டிருந்தார். திடுமென மதியம் ஜெ TIMES NOW சேனலில் தரிசனம் தந்தார்.  என்னிடம் 18 எம்பிக்கள் இருக்கிறார்கள். எனவே ராஜாவை கை கழுவினால் தி.மு.க ஆதரவை விலக்கி விடும் என்று காங்கிரஸ் அஞ்ச வேண்டாம். நான் காங்கிரசின் ஆட்சி கவிழாமல் இருக்க நாடு முழுக்க பல கட்சிகளிடம் பேசி மெஜாரிட்டிக்குத் தேவையான 18 எம்.பிக்களை திரட்டி ஆதரவு தருகிறேன் என்று பரபரப்பான பல்டி அடித்தார்.


இந்த டிவி பேட்டியே ஒரு TIMES NOW சேனலின் டிராமா போல இருந்தது. அதாவது ஜெ தனது பதில்களை எழுதி வைத்து வாசித்தார். இடையிடைய திறமையாக நடித்து தனது கேள்விகளை எடிட்டிங்கில் ஒட்டிக் கொண்டார், பேட்டி கண்ட அர்னாப். இது எனது கணிப்பு.

மீண்டும் அந்த பேட்டி ஒளிபரப்பானால் கவனித்துப் பாருங்கள். ஜெயலலிதா நேர்பார்வை பார்க்காமல் அடிக்கடி காமிராவிற்கு கீழ் இருக்கும் பிராம்ப்டரை பார்த்து படிப்பது தெரியும். ஆக திமுகவிற்கு எதிராக, ஜெயலலிதாவிற்கு ஆதரவாக ஒரு ஆங்கில சேனல் களம் இறங்கிவிட்டது. பேட்டி என்ற பெயரில் ஒரு ஒத்திகை பார்க்கப்பட்ட பேச்சை ஒளிபரப்பியுள்ளது. எப்பவுமே ஜெவிற்கு ஆங்கில சேனல்களில் மவுசு அதிகம். அதிலும் TIMES NOW சேனல் ஜெவிற்கு ஸ்பெஷல் கவரேஜ் தரும். சென்ற பாராளுமன்ற தேர்தலின் போது அவரை குயின் என்று வர்ணித்து மகிழ்ந்தது.

காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்று ஜெயலலிதாவிற்கு கவலையாக இருக்கிறதாம். அதனால்தான் இந்த ஆதரவாம். அட..அட... ஜெவிற்கு காங்சிரசின் மேல் ஏன் இந்த திடீர் பாசம்? வேறென்ன தமிழகத்தில் கோட்டையை பிடிக்க காங்கிரஸ் தேவை. அதற்க்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார் அவர்.

இந்திய அரசியலில் இதெல்லாம் சகஜம். நாளையே ஜெவும், சோனியாவும் கைகுலுக்கி போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தாலும் எனக்கு நிச்சயமாக ஆச்சரியமாக இருக்காது.

ஈழப் பிரச்சனையில் தனக்கு எதிராக கருத்துகள் உருவானாலும், விடாப் பிடியாக கருணாநிதி ஏன் காங்கிரஸ் திண்ணையை விட்டு இறங்காமல் இருந்தார் என்று இப்போது புரிகிறதா? ஜெவும் அதே திண்ணைக்குதான்  தொடர்ந்து குறிவைத்துக் கொண்டிருக்கிறார். வலியப் போய் ஒரு டிவி பேட்டி வழியாக காங்கிரசுக்கு ஆதரவு தருகிறேன் என்று ஜெ சொல்லியிருப்பதுதான் உண்மையான தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் முகம். ஈழப் பிரச்சனையில் ஜெ, கருணாநிதி, வை.கோ உட்பட எவருக்கும் உண்மையில் அக்கறை கிடையாது. தமிழகத்தில் ஆட்சியில் பிடிப்பதுதான் அவர்களுடைய உண்மையான இலட்சியம்.

இப்போதாவது ஈழ சகோதர சகோதரிகள் இந்த உண்மையை புரிந்து கொண்டு, தமிழக அரசியல்வாதிகளை நம்பாதிருக்க பழக வேண்டும்!

Saturday, October 9, 2010

வோறொரு டிவியில் நியுஸ் பார்த்து, தங்கள் டிவியில் நியுஸ் வாசிக்கும் சேனல்கள்!

மீடியாக்களின் நெகடிவ் பிரசாரங்களை தவிடு பொடியாக்கிய இந்திய விளையாட்டு வீரர்கள்.
காமன் வெல்த் போட்டிகளில், நேற்று(அக்டோபர் 8) நம்ம சாய்னா, மலேசியாவின் வோங் மியு சூவை எதிர்த்து 24-26, 21-17 21-14 என்ற கணக்கில் செம த்ரில்லிங் மாட்ச் ஒன்றை ஜெயித்தார். இந்தியாவில் இறகுப் பந்து போட்டியை பிரபலப் படுத்திய பிரகாஷ் படுகோன், அவருடைய மகளும் சினிமா நடிகையுமான தீபிகா படுகோன் உட்பட பிரபலங்கள் காலரியில் உட்கார்ந்திருக்க, இரசிகர்கள் உற்சாகமாகிவிட்டார்கள்.சாய்னா! சாய்னா! என்று அவர்கள் கோரஸாக கிரிக்கெட் வீரர் அல்லாத ஒருவருக்காக குரல் கொடுத்தது, பார்க்கவே பரவசமாக இருந்தது.

அடுத்துதான் நம்ம சூரப்புலி மீடியாக்களின் காமெடி ஆரம்பித்தது. NDTV HINDU மற்றும் SUN NEWS சானல்கள் சாய்னா தங்கம் வென்றுவிட்டதாகவும், இந்தியா மொத்தம் 21 தங்கம் வென்றுவிட்டதாகவும்  ஃப்ளாஸ் நியுஸ் போட ஆரம்பித்துவிட்டன. சாய்னா அடுத்த சுற்றுக்குதான் தகுதி பெற்றுள்ளார் என்பதை அவர்கள் உணர ஒரு மணி நேரம் பிடித்தது.

எதையும் சரிபார்க்காமல், மற்றொரு டிவியை பார்த்தே, தங்கள் டிவியில் நியுஸ் வாசிக்கும் இவர்கள்தான் காமன்வெல்த் போட்டியை குறை சொல்லி பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். காமன்வெல்த் போட்டியில் குறைகள் நிச்சயம் உண்டு. ஆனால் அவற்றை மட்டுமே உயர்த்திப் பிடிக்கும் மீடியாக்களின் இலட்சணம் இதுதான்.

அவர்களை விட்டுத் தள்ளுங்கள். எத்தனையோ இடர்பாடுகள் இருந்தாலும், குறைகள் இருந்தாலும் உற்சாகம் குறையாமல், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, வெற்றி வாகை சூடும் இளைஞர்கள்தான் இந்தியாவின் எதிர்காலம். காமன்வெல்த் போட்டிகளில் எங்கே சாக்கடை ஒழுகுகிறது என்பதை தேடிக் கொண்டிருக்கும் காமெடி மீடியாக்களை ஒதுக்கிவிட்டு, வியர்வை சிந்தி பதக்கங்களை வெல்லும் இளைஞர்களை கொண்டாடுவோம்.

Monday, August 30, 2010

டாய் கடவுளே ...

தர்மபுரியில் பஸ் எரிக்கப்பட்டு 3 மாணவிகள் கொல்லப்பட்ட வழக்கில், 3 அ.தி.மு.கவினருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுவிட்டது.

இந்த வழக்கில் சாட்சியங்கள் எல்லாம் பின் வாங்கினார்கள். பார்க்கவே இல்லை என்றார்கள். ஃபைல்கள் காணாமல் போயின. மறைமுகமாக மிரட்டினார்கள். வாய்தா..வாய்தா..வாய்தா என்று இழுத்தடித்தார்கள். இரக்கமின்றி செயல்பட்ட அ.தி.மு.வினருக்கு சாதகமாக வழக்கு திருத்தப்பட்டது.

ஆனால் எல்லோரும் கைவிட்டாலும், பின் வாங்கினாலும், அரசியலும், அரசாங்கமும், நியாயங்களும், தர்மங்களும் எதிராக இருந்தாலும், வீராசாமி என்ற ஒரு தனி நபர் மட்டும் தொடர்ந்து போராடினார்.

அவர், அஞ்சவில்லை, அயரவில்லை, சலிக்கவில்லை, விட்டுக் கொடுக்கவில்லை. இந்த சம்பவத்தால் மனைவி மனநிலை பாதிக்கபட்டாலும், கண்ணீருக்கிடையில் கள்ளத்தனங்களை வென்றார்.

அவர்...
அந்த பஸ்ஸில் எரிந்து போன மாணவி கோகிலவாணியின் தந்தை வீராசாமி! அவருக்கு என் வணக்கங்கள்!

காலம் கடந்தாலும், சட்டம் வென்றது, நியாயம் வென்றது, தர்மம் வென்றது என்று இந்த சமூகம் மார் தட்டிக் கொண்டாலும், அநியாயமாக பறிபோன உயிர்களுக்கும், அதை நினைத்தே அழுது கொண்டிருக்கும் உயிர்களுக்கும், யார் என்ன ஆறுதல் சொல்ல முடியும்.

டாய் கடவுளே ... எனக்கு உன்னை பிடிக்கவில்லை!

Friday, June 11, 2010

நீங்கள் ஆன்லைன் பிரபலமா?

‘நண்பராக ஏற்றுக் கொள்ளச் சொல்லி எனக்கு எக்கச்சக்கமான  அழைப்புகள் வருகின்றன. அவற்றை ஏற்பதா? நிராகரிப்பதா? தயவு செய்து எனக்கு ஆலோசனை சொல்லுங்களேன்‘

நீங்கள் ஃபேஸ்புக், டிவிட்டர் அல்லது ஆர்குட் மெம்பரா? ஆம் என்றால் இதுபோன்ற  பெருமை கலந்த புலம்பல்களை அடிக்கடி பார்த்திருப்பீர்கள்.

பொதுவாக நாம் அனைவருமே நம் மேல் ஒரு ஸ்பாட் லைட் விழுவதை விரும்புபவர்கள். வீடு, பள்ளி, கல்லூரி, அலுவலகம் என எங்கு சென்றாலும் நம்மை மற்றவர்கள் கவனிப்பதை வெளியில் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டாவது விரும்புவோம். ஆனால் பிரபலங்களுக்கு கிடைக்கின்ற அந்த கவன ஈர்ப்பு, சாமானியர்களான நமக்கு கிடைப்பதில்லை.

ஆனால் ஆன்லைன் தளங்களில் மெம்பரான சில நாட்களிலேயே அடடா... நாமே ஒரு வி.ஐ.பிதான் என்ற எண்ணம் எழுகிறது. சதா யாராவது வந்து ஹலோ சொல்கிறார்கள். ஆண்களும், பெண்களும் சர்வசாதாரணமாக நண்பராகிறார்கள். குட்மார்னிங் சொன்னால் கூட, என்மேல் உனக்கு இவ்வளவு பாசமா என்று உருகுகிறார்கள். நாமே நிராகரித்த நமது கவிதைகளை  விழுந்து விழுந்து இரகிக்கிறார்கள். அடடா... நீ இவ்வளவு அழகா என்று கசங்கிய உடையில் எடுத்த போட்டோவை புகழ்கிறார்கள். காலையில் எல்.கே.ஜி படிக்கும் சுட்டியிடம் எரிந்து விழுந்தது தெரியாமல், சே... உன்னைப் போல அன்பான மனிதனை இது வரை சந்தித்ததே இல்லை என்று ஆரத் தழுவுகிறார்கள்.

இது சிலரை ஒரு மாயையில் தள்ளிவிடுகிறதாக நான் நினைக்கிறேன். நம்மை யாராவது கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள். நாம் ஒரு பிரபலம். நமது ஹலோவுக்காக ஒரு நண்பர்கள் கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறது என்ற பெருமை கலந்த பிரமை ஏற்பட்டுவிடுகிறது. அதன் பிரதிபலிப்புதான் அந்த வாசகம்.


‘நண்பராக ஏற்றுக் கொள்ளச் சொல்லி எனக்கு எக்கச்சக்கமான  அழைப்புகள் வருகின்றன. அவற்றை ஏற்பதா? நிராகரிப்பதா? தயவு செய்து எனக்கு ஆலோசனை சொல்லுங்களேன்‘

உற்றுக் கவனித்தால் எக்கச்சக்கமான அழைப்புகள் என்பதில் ஒரு தற்பெருமையும், நான் பிரபலம் என்கிற எண்ணமும் ஒளிந்திருப்பதை கவனிக்கலாம். அழைப்புகளை ஏற்பதா? நிராகரிப்பதா? என்பதில் இந்த ஆன்லைன் பிரபல்யம் நிரந்தரம் என்ற நம்பிக்கை இருப்பதையும் கவனிக்கலாம்.

தற்போது நான் ஆர்குட்டில் அமைதியாகி, டிவிட்டரில் அவ்வப்போது எட்டிப்பார்த்து, ஃபேஸ்புக்கில் அதிகமாக உலவிக் கொண்டிருக்கின்றேன். என்னுடைய அனுபவத்தில் சொல்வதாக இருந்தால் ஆன்லைன் பிரபலம் என்பதும், நம்மை அனைவரும் கவனிக்கிறார்கள் என்பதும் வெறும் பிரமை. ஒரு மாதம் ஆன்லைன் பக்கம் போகாமல் இருந்து பாருங்கள். ஒரு வாரத்திற்கு எங்கே காணோம் என்று வருகிற மெசேஜ்கள் குறைந்து, இனிமே அவன் வரமாட்டான்யா என்று இரண்டாவது வாரத்தில் மறைந்து போவதை கவனிக்கலாம்.

நான் சொல்ல வருவதின் சுருக்கம் இதுதான். ஆன்லைன் நட்பு பலப்பட வேண்டுமென்றால் நிஜத்திலும் சந்தித்து பழகுங்கள். ஆன்லைனிலேயே தொடரும் நட்புகள் ஒரு log offல் முடிந்து போய்விடும். இன்றைய ஸ்பெஷல் என்று ஹோட்டல் வாசல்களில் எழுதி வைப்பார்கள். அதைப் போல தற்காலிகமானதுதான் ஆன்லைன் அழைப்புகளும். அவற்றை ஏற்பதாலும், நிராகரிப்பதாலும் எண்ணிக்கை மாற்றம் ஏற்படுமே தவிர, எண்ணங்களோ, வாழ்க்கையோ மாறப் போவதில்லை.

Friday, May 14, 2010

+2 ரிசல்ட் - பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள்

இன்று(May 14) ஆவலும் பதட்டமும் நிறைந்த நாள். இன்று பிளஸ் டூ ரிசலட். நேற்றைய இரவிலிருந்தே தூக்கத்தை தொலைத்திருக்கும் பல பெற்றோர்கள் இதை வாசிக்கக் கூடும். உங்களுக்கு சில வார்த்தைகள்.

  • இன்றைய நாள் வழக்கம் போல காலை காபியுடன் துவங்கட்டும்.
  • ரிசல்ட், ரிசல்ட் என்று பிள்ளையாரையும், பிள்ளைகளையும் டென்ஷன் ஆக்கவேண்டாம்.
  • 10 நிமிடம் கழித்து பொறுமையாகப் பார்த்தாலும் அதே ரிசல்ட்தான். எல்லோருக்கும் போனைப் போட்டு, எஸ். எம். அனுப்பி, பிரவுசிங் சென்டர் வாசல்களில் வியர்ப்பது தேவையற்ற மன அழுத்தம் தரும்.
  • இந்த வருடம் ”கணக்கு” பாடத்தின் கேள்விகள் அளவுக்கு அதிகமாக கடினமாக இருந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி உள்ளன. எனவே அதில் மதிப்பெண்கள் குறைய வாய்ப்பு இருக்கிறது.
  • ரிசல்ட் எப்படி இருந்தாலும் அதுதான் உங்கள் பிள்ளைகளின் (தற்போதைய) பெஸ்ட். நீங்கள் கோபிப்பதால் மார்க் ஷீட்டுகளில் மதிப்பெண்கள் உயராது. எனவே ஸ்வீட் எடுங்கள், கொண்டாடுங்கள்.
  • எல்லா பக்கத்து வீட்டு, எதிர் வீட்டு பிள்ளைகளும் நமது பிள்ளைகளை விட அதிக மார்க் வாங்கிவிட்டது போல ஒரு பிரமை தரும் நாள் இது. அதற்கு இடம் தர வேண்டாம்.
இன்றைய பரிட்சை முடிவுகள், இன்றைய பரிட்சையின் முடிவுகள் தானே தவிர, நாளைய வாழ்க்கைக்கான தீர்ப்புகள் அல்ல. இதை நீங்களும் உணருங்கள். உங்கள் அன்புச் செல்லங்களுக்கும் சொல்லுங்கள்.

பின் குறிப்பு - 
ரிசல்ட் எதிர் மறையாக இருந்தால் பிள்ளைகளுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும். அம்மாதிரி சமயங்களில் அவர்களை கடிந்து கொள்ளவே கூடாது. உங்கள் பிள்ளைகளின் மேல் அக்கறையும், அன்பும் அதிகரிக்க வேண்டிய நேரமிது. உதவிக்கு சிநேகா - 24640050 போன்ற தொண்டு நிறுவனங்களை அணுகுங்கள்.

Tuesday, April 13, 2010

லெப்டுல இருந்து ரைட்.. ரைட்டுல இருந்து லெப்ட் எப்படி வேணும்னா படி!


RACECAR
LEVEL
DEED
ROTOR
CIVIC
POP
MADAM
EYE
NUN
RADAR
TOOT

இந்த ஆங்கில வார்த்தைகளில் ஒரு சுவாரசியமான விசித்திரம் உள்ளது.
இந்த வார்த்தைகளை இடமிருந்து வலம், வலமிருந்து இடம் என எப்படி வேண்டுமானாலும் வாசிக்கலாம். அப்படி வாசிக்க முடிந்தால் அந்த வார்த்தைகளை பாலிண்ட்ரோம்-Palindrome என்பார்கள்.

தமிழில் இதை முயற்சி செய்து பார்க்கலாமமே என்று தோன்றியது. சில மணி நேர மூளை கசக்கல்களுக்குப் பிறகு சிக்கிய வார்த்தைகளை கீழே தந்திருக்கின்றேன்.

விகடகவி
பாப்பா
தேருவருதே
துவளுவது
தாளாதா
தந்த
கலைக
கலக
மேகமே
வாடவா
மாடமா
மாதமா
மானமா
மாயமா


இதில் விகடகவி மிகப் பிரபலமான தமிழ் பாலிண்ட்ரோம். சில கேள்வி வடிவிலேயே இருப்பதைக் கவனியுங்கள். தொடர்ச்சியாக எனக்கு அப்படிப்பட்ட வார்த்தைகள்தான் வந்தன. சிலவற்றை இங்கே தந்திருக்கின்றேன். நீங்களும் முயற்சி செய்து சில வார்த்தைகளை எழுதுங்கள்.

சந்திப் பிழையை மன்னிக்கலாம் என்றால் தாவபோவதா, கைபை என்பவையும் பாலிண்ட்ரோம்கள்தான்.

ஆங்கில பெயர்கள், அர்த்தமற்ற ஒலிகளை மறுக்க மாட்டீர்கள் என்றால் லில்லி, டால்டா, பைப்பை, கூக்கூ என்பவையும் பாலிண்ட்ரோம்தான்.

தமிழில் பாலிண்ட்ரோம் எழுதும் போது எழும் மிகப்பெரிய சிக்கல் மெய் எழுத்துக்கள்தான். அதை மீறி பாலிண்ட்ரோம் வார்த்தைகைளை தேடுவது ஜாலியான சவால்.

ஆச்சரியகரமாக சில பாலிண்ட்ரோம் வாக்கியங்களும் உருவாகின.

இரு வார்த்தை பாலிண்ட்ரோம்கள்
மாலா போலாமா?
யானை பூனையா?
காரு முருகா

மூன்று வார்த்தை பாலிண்ட்ரோம்கள்
கைதி மாயமா? திகை!
வாடவா பூ வாடவா?
துருவ மேகமே வருது
நீதிபதி பதி நீ
தாயே நீயே தா
யானை தந்தம் தந்தனையா?

நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட வார்த்தைகளுடன் பாலிண்ட்ரோம்கள்
மே மாதமா? கலக மாதமாமே?
தாவ போவதா, பாப்பா தாவ போவதா? ---- (சந்திப் பிழை?)
தேரு வருதே வேகமாகவே தேரு வருதே

அர்த்தங்கள் பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளாவிட்டால் . . .
சிவா வாழையா? யாழை வா வாசி
மில் டெலிபோன் போலி. டெல் மி!
சாரா, காமராசரா? மகாராசா!

இவை எனக்கு உதித்த பாலிண்ட்ரோம்கள். சவாலான இந்த வார்த்தை விளையாட்டில் நீங்கள் எத்தனை பாலிண்ட்ரோம் வார்த்தைகளை கொண்டு வருகிறீர்கள் என்று பார்க்கலாம்.

Wednesday, March 10, 2010

சுவாமி சரியானந்தா - நான் எப்பவுமே ரைட்டு

அந்த சாமியாரின் பெயர் சுவாமி சரியானந்தா. அவரிடம் எப்போதும் கூட்டம் அலைமோதும். அவர் சொன்னால் அது பலிக்கும். அவர் சொல்லி எதுவுமே நடக்காமல் போனதில்லை. அதனாலேயே அவருக்கு சுவாமி சரியானந்தா என்ற பெயர் வந்துவிட்டது. மேட்டுக்குப்பம் பக்தர்களிலிருந்து நியுஜெர்சி பக்தர்கள் வரை எல்லோருக்கும் அவர் ஒரு மகான். அவர் கேட்கும் தொகையை செலுத்திவிட்டு அருள்வாக்கு வாங்கிச் செல்வார்கள்.

”சாமி”
”உனக்கென்னம்மா தெரியவேண்டும்”
”எனக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா?”
”என்னைப் போலவே உனக்கொரு மாயக் கண்ணன் வந்து பிறப்பான் மகளே”
ஆயிரம் ரூபாய் தட்சணை வைத்துவிட்டு, பக்தை அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவுடன் அடுத்த பக்தர் பரவசத்துடன் நுழைகிறார்.

”சுவாமி”
”சொல் குழந்தாய்”
”எனக்கு வேலை கிடைக்குமா? கிடைக்காதா?”
”நிச்சயம் கிடைக்கும், மகிழ்ச்சியுடன் போ”
தட்டில் சில நூறுகளை வைத்துவிட்டு அவர் நகர அடுத்த பக்தர் வருகிறார்.

”குருஜி”
”எனக்கு இந்த டென்டர் கிடைக்குமா?”
”நமது ஆசிரமத்திற்கு 10 இலட்சம் கொடுத்தால் அந்த 100 கோடி டென்டர் உனக்குதான்?”
”இதை நான் எப்படி நம்புவது?”
”ஹா..ஹா..ஹா..சந்தேகப் பதரே.. என் மேலேயே சந்தேகமா... இருக்கட்டும்... சிஷ்யா?”
”சொல்லுங்கள் குருவே”
”டென்டர் கிடைக்கும் என்று நான் சொன்னதை அந்த நோட்டுப் புத்தகத்தில் எழுதிக்கொண்டு பத்து லட்சம் வாங்கியபின், இந்த சநதேகபுத்தி அற்பனை அனுப்பி வை”
”உத்தரவு குருவே”

தட்சணையை வாங்கி உண்டியலில் போட்டபடி ”டென்டர் கிடைக்காது” என்று நோட்டுப் புத்தகத்தில் சிஷய்ர் எழுதுகிறார். பிறகு . . .

”குருவே எனக்கொரு சந்தேகம்”
”கேள் சிஷ்யா”
”ஆண் பிறக்கும் என்று குறி சொல்கிறீர்கள். ஆனால் நோட்டுப் புத்தகத்தில் பெண் என்று எழுதச் சொல்கிறீர்கள். வேலை கிடைக்கும் என்று குறி சொல்கிறீர்கள். ஆனால் நோட்டுப் புத்தகத்தில் வேலை கிடைக்காது என்று எழுதச் சொல்கிறீர்கள். டென்டர் கிடைக்கும் என்று குறி சொல்கிறீர்கள். ஆனால் டென்டர் கிடைக்காது என்று நோட்டுப்புத்தகத்தில் எழுதச் சொல்கிறீர்கள். ஏன் இப்படி?”

”சிஷ்யா !!! இது இந்த முட்டாள் பக்தர்களை ஏமாற்றும் எளிய வழி. யாருக்காவது நான் சொன்னது நடக்காமல் போனால் உடனே என்னிடம் தான் மீண்டும் வருவார்கள். அப்போது இந்த நோட்டுப் புத்தகம்தான் நம்மை காப்பாற்றும்”
”எப்படி?”, என்று சிஷ்யர் கேட்க, அடுத்து ஒரு பெண் பக்தை உள்ளே வருகிறார். முகத்தில் பதற்றம், ஏமாற்றம்.

”சாமி..ஏன் என்னை கைவிட்டுட்டீங்க?”
”அழாமல் விஷயத்தை சொல் பக்தையே”
”எனக்கு ஆண் பிறக்கும் என்று சொன்னீர்கள். ஆனால் பெண் குழந்தை பிறந்துவிட்டதே”
”பக்தையே நீ தவறாகச் சொல்கிறாய். நான் சரியாகத்தான் சொன்னேன். சிஷ்யா அந்த நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் காட்டு”
”அட ஆம் குருவே, பெண் குழந்தைதான் பிறக்கும் என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அம்மா நீங்களும் பாருங்கள்”, என்று சிஷ்யர் நோட்டுப்புத்தகத்தை நீட்ட அந்தப் பெண் அதைப் படித்துவிட்டு கன்னத்தில் போட்டுக் கொள்கிறாள்.

”ஐயோ சாமி..நான் தான் உங்களை தப்பா நினைச்சுட்டேன். என்னை மன்னிச்சிடுங்க”, புலம்பிக் கொண்டே வெளியே சென்ற பின் குருஜி புன்னகைக்கிறார்.
”சிஷ்யா, இப்போது புரிகிறதா நான் ஏன் உன்னை மாற்றி எழுதச் சொல்கிறேன் என்று?”
”புரிகிறது குருவே..இந்த உலகில் உங்களை வெல்ல யாரும் இல்லை”

சுவாமி சரியானந்தா வாழ்க.. சுவாமி சரியானந்தா வாழ்க..
பக்தர்களின் வாழ்த்து கோஷம் டிவியில் லைவ்வாக 75 நாடுகளில் ஒலிக்கிறது.

Tuesday, March 9, 2010

ரஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரிஸ்க் சாப்பிடற மாதிரி

இரு வார்த்தைகளின் முதல் எழுத்து இடம் மாறி, வார்த்தைகள் அல்லது வாக்கியங்கள் அமைந்தால் ஸ்பூனரிசம் (Spoonerism) என்று பெயர்.

Come and wook out of the lindow என்பது ஒரு உதாரணம்.
இந்த வாக்கியத்தில், look - window ஆகிய இரு வார்த்தைகளிலும் முதல் எழுத்து இடம் மாறியிருப்பதை கவனியுங்கள்.

Reverend William Archibald Spooner அப்படின்னு ஒருத்தர் அந்தக் காலத்துல இந்த மாதிரி சொதப்புறதுல மன்னராம். அதனால இந்த வகை சொதப்பல்களுக்கு spoonerism என்று பெயர் வந்துவிட்டது.

இப்போ இன்னும் சில உதாரணங்கள்.
  • fighting a liar - lighting a fire
  • you hissed my mystery lecture - you missed my history lecture
  • cattle ships and bruisers - battle ships and cruisers
  • nosey little cook - cosy little nook
  • a blushing crow - a crushing blow
தமிழில் இந்த மாதிரி முயற்சிக்கலாமா என்று மூளையைக் கசக்கியதில் எனக்கு ஒன்றே ஒன்றுதான் தோன்றியது.

ரஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரிஸ்க் சாப்பிடற மாதிரி.

இத மாதிரி நீங்க தமிழ் ஸ்பூனரிசம் சொல்ல முடியுமா?

Wednesday, March 3, 2010

கதவைத் திறந்தால்? மீண்டும் ஒரு சாமியார் கதை!

இரு மாதங்களுக்கு முன் விவேகானந்தர் பாறை போயிருந்தேன். நான் விரும்புகிறபடி, ”எதற்கும் சித்தமான, புகழை விரும்பாத நூறு இளைஞர்களை எனக்குத் தாருங்கள், இந்த உலகத்தையே மாற்றிக் காட்டுகிறேன்”, என்று நம்பிக்கை கொடுத்தவருக்கு ஞானம் பிறந்த இடம். தியான மண்டபத்தில் உஸ் . . உஸ் .. என்று யாரோ ஒருவர் வாய் மேல் விரல் வைத்து அதட்டிக் கொண்டிருக்க, உள்ளே வருபவர்கள் ஒரு கணத்தில் அடங்கி இருளில் துழாவி தியானம் செய்ய அமர்கிறார்கள்.

அணைக்கப்படாத செல்போன் கூப்பாடுகளால் கவனம் குவிக்க முடியாமல், இந்த தியானம் எதை நோக்கி? என்ற கேள்வியுடன் நானும் அமர்ந்திருந்தேன். நான் பனகல் பார்க் ராமகிருஷ்ணா மிஷனில் பிளஸ் டு படித்தபோது அடிக்கடி இப்படி உட்கார வைப்பார்கள். அப்போதும் இதே கேள்விதான்.  இது போல பல தியானங்கள், ஆராதனைகள், அன்னதானங்கள் பங்கு பெற்றிருக்கின்றேன். எல்லாமே தனியார் அல்லது சாமியார் சம்பந்தப்பட்டவை. என்னை அழைத்துப் போன நண்பர்கள் எல்லோருமே ”இந்த சாமியார்தான் பெஸ்ட்” என்றார்கள். அதற்கு விளக்கங்களும் வைத்திருந்தார்கள்.

இந்த விளக்கங்களையும், சாமியார்களையும் எப்போதும் கேலி செய்கிற நண்பர் ஒருவருடன் இந்த ஞாயிற்றுக்கிழமை மெரினா பீச்சுக்கு சென்று கொண்டிருந்தேன். காரை செலுத்தியபடியே அவர் சுவாமி நித்யானந்தா பற்றி சிலாகிக்க ஆரம்பித்தார். எனக்கு ஆச்சரியம். ஆனால் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. நித்யானந்தா நிச்சயமாக ஏதோ சக்தி உடையவர். தூர இருந்து பார்க்கும்போது ஒல்லியான சரீரத்துடன் இருக்கும் அவர், அருகில் செல்லும்போது மிகப்பெரிய உருவாமாக காட்சியளித்தார் என்றார் பிரமிப்புடன்.

அவருடைய பிரமிப்பு இன்றைய சன் செய்திகளை பார்த்தவுடன் என்னாவகியிருக்கும் என்று யோசிக்கிறேன். எனது நண்பரைப் போலவே இலட்சக் கணக்கில் அவரை ஆராதிக்கும், நம்பும் மக்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே அதிர்ந்து போயிருப்பார்கள். குமுதம்  அவரை தொடர்ந்து புரமோட் செய்து வருகிறது. இந்த செய்திக்குப் பின் குமுதம் என்ன செய்யும் என்பதும் என்னால் யூகிக்க முடியாததாக இருக்கிறது. Zero degree சாரு திடீரென நித்யானந்தா பக்தராக மாறி வலையுலகில் கிட்டத்தட்ட நித்யானந்தா கொள்கை பரப்புச் செயலாளராகவே மாறி நடந்துவருகிறார். அவர் என்ன செய்யப்போகிறார் என்றும் யோசிக்கிறேன்.

ஒரு வருடத்திற்கு முன் என் தம்பி, நித்யானந்தாவின் நேரடி பார்வையில் நடைபெற்ற ஒரு வகுப்பிற்கு போய் வந்தார். முன் பின் அறிமுகம் இல்லாத ஆண், பெண்களை கட்டிப்பிடித்தபடி சில பயிற்சிகள் செய்யச் சொல்கிறாரகள். அவர் ஒரு ஃபிராட் என்றார். அவரைப் போலவே நித்யானந்தாவை சந்தேகித்து பரிகசித்தவர்கள் சிலர். அவர்கள் எல்லோரும் ”நான் அப்பவே சொன்னேன் பார்த்தியா?” என்று ஆனந்தப்படக் கூடும்.

இன்றைய சாமியார்கள் எனப்படுவர்கள் யார்?.தனது பலவீனத்தை முற்றிலும் மறைக்கத் தெரிந்தவர்களே சாமியார்களாக உலா வருகிறார்கள். அதனால்தான் உதறித்தள்ளாத வெறுமனே மறைத்து வைக்கப்பட்ட அவர்களுடைய பலவீனங்கள் ஏதோ ஒரு கட்டத்தில் எப்படியாவது வெளியாகிவிடுகின்றது. இன்றைய சன் செய்தி பரபரப்பும் அப்படிப்பட்ட ஒரு பலவீனத்தின் அம்பலம்தான்.

இந்த பலவீனத்தை மறைக்கத்தான் அந்த சாமியார்கள் தனி மனிதனாக நின்று போதிக்காமல், ஆசிரம், ஏ.சி, விமானம், பாதுகாவலர்கள், சிஷ்யர்கள் என்று ஒரு நிறுவனமாக மாறிப் போகின்றார்கள்.  எல்லாவற்றுக்கும் விலை வைக்கின்றார்கள். There is no free lunch என்பார்கள். இது ஏமாளி பக்தர்களுக்கு மட்டுமல்ல, ஏமாற்றும் சாமியார்களுக்கும் பொருந்தும். நித்யானந்தா கொடுத்த விலையை இன்று சன் டிவி காட்டிவிட்டது.


விவேகானந்தர் மறைந்து 70 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னமும் அவர் கேட்ட எதற்கும் சித்தமான, புகழை விரும்பாத நூறு இளைஞர்கள் உருவாகவில்லை. அவர்கள் உருவாகியிருந்தால் இந்த சாமியார்கள் உருவாகியிருக்க மாட்டார்கள்.

சன் டிவிக்கு ஒரு கண்டனம்
நித்யானந்தாவை அம்பலப்படுத்தியது நல்ல விஷயம்தான். ஆனால் உடனிருப்பது R என்ற பெயரில் ஆரம்பிக்கும் நடிகை என்று கூறி பல நடிகையர்களின் மேல் சந்தேகம் வர வைத்தது விஷமத்தனம்.

Sunday, February 21, 2010

அவர்

சென்ற வருடம் டிசம்பர் இறுதியில் நாகர்கோவிலுக்கு ஒரு இரயில் பயணம். அதிகாலை 3.30 மணிக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸின் தட தட தாலாட்டை மீறி செல்போன் என்னை எழுப்பியது.
”ஹலோ குட்மார்னிங்! சொல்லுங்க என்ன விஷயம்?” என்றது எதிர் முனைக் குரல்.
அழைத்தவர் அவர். (அவர் யார்?) அவர்தானே விஷயத்தை சொல்ல வேண்டும். ஏதாவது ராங்காலாக இருக்குமோ என்று யோசித்தபடி அப்பர் பர்த்தில் தூக்கம் கலைந்தேன்.

”ஹலோ நான் செல்வக்குமார் பேசறேன்”
"ஒரே சத்தமா இருக்கு. என்ன விஷயம் சொல்லுங்க?”
”நீங்கதான் சொல்லணும்”
”கொஞ்ச நேரத்துக்கு முன்னால நீங்கதான் என்னைக் கூப்பிட்டீங்க”
”நானா..?” என்று ஆச்சரியப்பட்ட வினாடியில், நடந்தது எனக்குப் புரிந்து போனது.
”அடடா..மன்னிக்கணும். நான் டிரெயின்ல இருக்கேன். தூக்கத்தில் புரண்டு படுக்கும்போது, எப்படியோ உங்க நம்பர் டயல் ஆகியிருக்கிறது”
”பரவால்ல, நானும் இப்பதான் ஒரு வேலையை முடிச்சிட்டு படுத்தேன்”, குரலில் கோபமில்லை, எரிச்சல் இல்லை, தூக்கம் கெட்டதே என்ற அலுப்பு இல்லை.
”சரி நீங்க சென்னைக்கு வந்தப்புறம் சந்திக்கலாம்” என்று மிக அமைதியாக, இயல்பாக பேசிய அந்த குரலுக்கு சொந்தக்காரரை இரண்டு மாதங்கள் ஆகியும் நேரில் சந்திக்க முடியவில்லை.

அவ்வப்போது Facebookல் வந்து ”நண்பா எப்படி இருக்கீங்க?” என்பார். பல முறை தேதி குறித்தும் அவரவர் வேலை பளு காரணமாக, அவரை சந்திக்க முடியாமலேயே இந்தப் பதிவில் அவரைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கின்றேன்.

ஏண்டா விடிய காலையில் 3 மணிக்கு போன் பண்ணி தூக்கத்தை கெடுத்த என்று நியாயமாக கோபம் வரக் கூடிய நிலையிலும், நிதானித்த அவரை எண்ணி வியக்கிறேன். அவரை இதுவரை சந்திக்கவே இல்லை. ஆனாலும் சின்னச் சின்ன கண்ணியமான facebook உரையாடல்கள் மூலம், எப்போதும் நினைவில் நிற்கும் நண்பர்களில் ஒருவராக அவர் இருக்கிறார்.

தன்னை ஆளத் தெரிந்தவர் தரணி ஆள்வார். விரைவில் அவர் தமிழ் மக்களின் மனதை வெல்வார்.

அவருடைய சிறந்த குணத்திற்கு மேலே நான் எழுதியிருப்பதே சாட்சி. அவருடைய திறமைக்கு சாட்சியாக விரைவில் ஒரு திரைப்படம் வெளியாக உள்ளது. அவர் இயக்கியுள்ள ”அவர் பெயர் தமிழரசி” இம்மாதம் திரைக்கு வருகிறது 

நல்ல குணம் படைத்த அவர், நிச்சயம் நல்ல திரைப்படத்தை தருவார்.
அவர் - இயக்குனர் மீரா கதிரவன்.

All the best Meera!

Wednesday, November 25, 2009

கோடம்பாக்கமும் ரேடியோவும் !!!



எண்பதுகளில் ஒலித்த விவிதபாரதியின் நேயர்விருப்பம் இப்போதும் ஒலிக்கிறதா? தெரியவில்லை. ஆனால் என் காதுகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது. இப்போது ஒரு பாடல் டாப் 10ல் இருந்தால் அந்தப் பாடல் ஹிட். அப்போது வேறு அளவுகோல். பாடலை விரும்பிக்கேட்டவர்களின் பெயர்களை வாசிக்க ஆரம்பித்தால்,  சிலநேரம் இரண்டு அல்லது  மூன்று நிமிடங்களுக்கு நீளும். அப்படி நீண்ண்ண்ண்ட லிஸ்ட் வாசித்தால் அந்தப் பாட்டு சூப்பர் ஹிட் என்று அர்த்தம்.

அப்போதெல்லாம் பொதுவாக படங்கள் வெளியான பின்புதான் பாடல்கள் ரேடியோவிற்கு வரும். தற்போது உல்டா. அன்றைய நேயர் விருப்பம், தேன்கிண்ணங்களை தவற விட்டால் அதற்கப்புறம் சாகுபடிகள், சமையல்கள், குழந்தைகள், செய்திகள் என்று அனைவருக்கும் அரை மணி ஒதுக்கப்பட்டு மறுநாள் காலைதான் மீண்டும் திரைகானம்.

இப்போது மாதிரி சந்துக்கு சந்து பொந்துக்கு பொந்து அப்போதெல்லாம் ரேடியோ கிடையாது. மர்ஃபி குழந்தை பொம்மை போட்ட ரேடியோவை ஊரிலேயே பெரிய வஸ்தாதுதான் வைத்திருப்பார். உலக உருண்டை வடியில் டிரான்ஸிஸ்டர் வைத்து ராஜேஷ் கண்ணா பாட்டு கேட்டார் என்பது அப்போதைய பரபரப்பு (பணக்காரச்) செய்தி. எனவே ரேடியோ கேட்பதே ஒரு நாடகம் பார்ப்பது போல கூட்டமாகத்தான் நடக்கும். அனைவரும் ரேடியோவைச் சுற்றி சமையல், சாப்பாடு, படிப்பு, தினத்தந்தி என்று எல்லாமே டைம் டேபிள் போட்டு நடக்கும். ஞாயிற்றுக் கிழமை ஒலிச்சித்திரம் கேட்பதற்கு ஒரு சின்ன ரேடியோவைச் சுற்றி குடித்தனக்காரர்கள் (30 பேர்) அனைவரும் உட்கார்ந்திருப்பார்கள்.

வீட்டில் ரேடியோ இல்லாதவர்கள் கார்பரேஷன் பார்க்கில் பாட்டு கேட்பார்கள். காசேதான் கடவுளடா படத்தில் இது போல ஒரு காட்சியை பார்க்கலாம். கையில் டிரான்சிஸ்டருடன் ஒருவர் நடந்தால் அது ஸ்டேட்டஸ் சிம்பல். பார்க்கையும் தவறவிட்டால், கல்யாணம், காது குத்து, மஞ்சள் நீராட்டு மற்றும் அரசியல் விழாக்களில் ரெக்கார்டு கேட்கலாம். ரெக்கார்டு போடுபவரின் பந்தா, இந்தக் கால வார்டு கவுன்சிலரை விட படு அலப்பரையாக இருக்கும்.

தம் மாரே தம், நேத்து ராத்திரி யம்மா, வாங்கோண்ணா, எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம், பச்சைக் கிளி முத்துச் சரம், காயா பழமா கொஞ்சம் தொட்டு பார்க்கட்டுமா, அடி என்னடி ராக்கம்மா . . . என்று பல்வேறு பாடல்களை சாகா வரம் பெற்ற பாடல்களாக்கியவர்கள் அந்த ரெக்கார்டு போட்ட பிஸ்தாக்களும், (ரேடியோ)வண்ணச் சுடரில் ஒலிக்க வைத்த அம்மணிகளும்தான்.

ஜி.டி.நாயுடுக்களின் மலிவு விலை கண்டுபிடிப்புகள் வந்தவுடன், ரேடியோ நரிக்குறவர்களின் கைக்குப்போய், வீட்டு ரேடியோக்களை டேப் ரெக்கார்டர்கள் ஓரம் கட்டின. சிங்கப்பூர் போய்விட்டு, லுங்கியும், டேப்ரெக்கார்டரும் வாங்காமல் வந்த தமிழ்நாட்டு டூரிஸ்டுகள் யாருமே கிடையாது. அதற்கப்புறம்தான் ஆடியோ கடைகள் வந்தன. ரெக்கார்டு போடுபவர்களை கேசட்டில் பாடல் பதிவு செய்பவர்கள் ஓவர் டேக் செய்தார்கள். பாடல்களின் லிஸ்டுடன் வரும் தாவணி பெண்களை அவர்கள் சைட் அடிக்கும் ஸ்டைல், தனியான ரொமான்ஸ் கதைகள். இளையராஜா இளைய நிலாவாக பொழிந்து இளைஞர்களை காதலர்களாக மாற்றிய காலம் அது. ப்ரியாவில் ஸ்டீரியோ ரெக்கார்டிங்கை ஆரம்பித்து வைத்தார் இளைஞர் ராஜா.


டேப் ரெக்கார்டுகள் எல்.பி ரெக்கார்டுகளை உடைத்து நொறுக்கிய அந்தக் காலக்கட்டத்தில், டீக்கடைகள் கூட பாட்டுக் கடைகளாக மாறின. விழித்துக் கொண்ட ரேடியோவும், டேப்ரெக்கார்டருடன் போட்டியிட்டு திரை இசைக்கு அதிக நேரத்தை ஒதுக்கியது.  வைரமுத்துவும், பாரதிராஜாவும் இளையராஜாவுடன் கைகோர்த்து நடிகர்களைத் தாண்டி பிரபலமானார்கள். இளையராஜாவுக்காகவே கதைகள் எழுதப்பட்டன.

மணிரத்தினத்தின் வருகைக்குப் பின், திரை இசையில் ஒரு புதிய மின்சாரம் பாய்ந்தது. ஆனால் திடீரென கரகாட்டக்காரன் என்ற ஜாக்பாட் ஹிட்டுக்கப்புறம், ராஜா ராசாவாக மாறிப்போனார். மைக்கேல் ஜாக்சன், ரஸ்புதின், ABBA, ஓசிபிசா என்று மேற்கத்திய இசை கடல்கடந்து இந்தியாவைத் தொட்ட நேரம். ராமராஜன், ராஜ்கிரண் படையெடுப்பில் திடீரென்று ராஜா டிராக் மாறினார். இளைஞர்கள் திடீரென தமக்கான இசை தமிழில் இல்லையென்று முடிவுகட்டி, ஆங்கிலப் பாடல்களில் கரையத் துவங்கினார்கள். (வீடீயோக்களின் ஆதிக்கம் துவங்கிய VHS காலம் அது). ரேடியோக்களில் ஆங்கிலப் பாடல்களுக்காக தனி நிகழ்ச்சிகள் அதிகமானதும் இந்தக் காலக் கட்டம்தான்.


அப்போதுதான் சின்னச் சின்ன ஆசை என்று ஒரு பாடல் வந்தது. ஏ.ஆர்.இரகுமான் என்ற சின்னப் பையன் வந்தான். இந்திய திரை இசையே அதற்கப்புறம் மாறிவிட்டது. ரேடியோக்களும், டேப் ரெக்கார்டர்களும் புத்துயிர் பெற்றன. சாடிலைட் சானல்கள் வந்தன. அவற்றின் துணையுடன் இரகுமானின் இசை கண்டம் விட்டு கண்டம் தாண்டியது. உலகத் தரம் என்ற தேவையை இரகுமான் ஏற்படுத்தியவுடன் பாடல்கள் கேட்பவர்கள் உட்பட அனைவரும் தரமான ஸ்டீரியோ செட்டுகளுக்கு மாறினார்கள்.


சன் டிவியின் ஆக்கிரமிப்பு துவங்கிய இந்தக் காலத்தில் வீட்டுக்குள் சினிமா என்கிற கான்செப்ட் 24 மணி நேர நான் ஸ்டாப் சினிமா என்பது தமிழர்களுக்கு பழகிவிட்டது. இதற்கு வளைந்து கொடுக்காத தூர்தர்ஷனும், ஆல் இந்தியா ரேடியோவும் பழைய பஞ்சாங்கமாக நினைக்கப்பட்டு ஒதுக்கப்பட்டன. ஒரே காரணம் 24 மணி நேர சினிமா.

டிவியிலும் ஒரு சிக்கல் எழுந்தது. வெரைட்டியின் தேவை அதிகரித்ததால் சினிமாவுக்கென்றும் இசைக்கென்றும் தனித்தனி சேனல்கள் வந்து விட்டன. ஆனாலும் நடக்கும்போதும், பயணிக்கும்போதும் பாட்டு கேட்க முடியவில்லை. உதயமானது FM. அரசு FM வழக்கம் போல தூங்கி வழிய சூரியன் FM வெறும் சினிமா பாடல்களை மட்டும் வழிய விட்டே மக்களை வசீகரித்தது. போட்டிக்கு மிர்சி, ஹலோ, ஆஹா என்று கிட்டத்தட்ட இன்று 10 FM சேனல்கள் இருக்கின்றன.

இன்று FM ரேடியோ என்பது ஒரு அட்வர்டைசிங் டூல். திரும்பும் திசையெல்லாம், நினைத்த நேரத்திலெல்லாம் பாடல்களை ஒலிக்கவிட்டு, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காதில் திணிக்கின்றன. திணிப்பது நடைபெறுவது தெரியாமலேயே நாம் அதை உள் வாங்குகிறோம். காரில், பஸ்ஸில், நடந்து என்று எப்படிச் சென்றாலும் ஏதோ ஒரு வழியாக FM நம் கூடவே வருகிறது.


சினிமாவால் FMஆ? FMஆல் சினிமாவா என்று பட்டி மன்றம் நடத்தலாம். அந்த அளவுக்கு இரண்டும பின்னிப் பிணைந்து விட்டன.

இன்று ipod(வாக் மேனின் புதுவடிவம்), Podcast மற்றும் YouTube ஆகியவை நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ளும், பகிர்ந்து கொள்ளும் ஆடியோ வீடியோ சானல்களாக பரிணமித்திருக்கின்றன்.

எதிர்காலத்தில் சினிமாவும் மாறும், சினிமா இசையும் மாறும், அவை நம்மை வந்து அடையும் முறையும் மாறும். அது எப்படி இருக்கும் என்பதை காலம்தான் கணிக்கும்.

Interactive Radio with Virtual DJ mix வரும் என்று நான் நினைக்கிறேன். இப்போது நாம் போனில் கேட்கிற பாடலை வர்ணனையாளர் கொஞ்சிக் கொண்டே ஒளி ஒலி பரப்புகிறார். எதிர்காலத்தில் நாமும் வர்ணனையாளரும் இணைந்து பிராட்கேஸ்ட் செய்யும் இரு வழி ரேடியோ வரும் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.


நான் தற்போது அவர் என்ற படத்தை இயக்கும் பணியில் இருக்கிறேன். பாடல்களை ஹிட்டாக்க FMஐத்தான் நம்பியிருக்கிறேன்.

Thursday, November 12, 2009

2012ல் கிளி ஜோசியமும் மாயன் காலண்டரும்



கிளி ஜோசியக்காரர்கள், குறி சொல்பவர்கள், குடுகுடுப்பாண்டிகள், கைரேகை பார்ப்போர், ஜாதகம் கணிப்போர், ஜோஸ்யம் சொல்பவர்கள் - இவர்களை எல்லாம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். இவற்றிற்கெல்லாம் நம்பிக்கை இருப்பது ஓர் அழகாக இருக்கிறது. - ஜெயகாந்தன்

திரு.ஜெயகாந்தன் அவர்கள் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்னால் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார். நான் இதை என்னுடைய கருத்தாகவும் ஏற்றுக்கொள்கிறேன். காரணம் என்ன என்பதையும் அவருடைய எழுத்தே விளக்கட்டும்.

”ஒரு நவீன சமுதாயத்தில் சைக்கியாட்ரிஸ்டுகளும், சைக்கோ தெரப்பிஸ்டுகளும் செய்கிற பணியை அவர்களை விடவும் இவர்கள் வெற்றிகரமாக ஒரு புராதான சமுதாயத்தில் செய்திருக்கிறார்கள், செய்கிறார்கள்.”

ஆமாம். ஒரு குடுகுடுப்பைக்காரன் நல்லகாலம் பொறக்குது, நல்லகாலம் பொறக்குது என்றுதான் நம்பிக்கை கொடுத்து எழுப்புகிறான். சாட்சாத் ராமனே தம்பதி சமேதரா வந்திருக்காரு. இனிமே குடும்பத்துல பிரச்சனையே இல்ல என்றுதான் கிளி ஜோசியக்காரன் நம்பிக்கை தருகிறான். அப்படியே கண்ணபரமாத்மா நட்சத்திரம், இனிமே அமோகம்தான் என்று ஜாதகம் கணிப்பவர் சொல்கிறார். இதைக் கேட்கும்போது துவண்டுபோயிருப்பவனின் தலை தானாக நிமிர்கிறது. புதிய நம்பிக்கை பிறந்து நடை சீராகிறது.

ஆனால் இன்று என்ன நடக்கிறது? மாயன் காலண்டர் என்கிற ஒரு சமாச்சாரத்தைச் சொல்லி உலகையே ஒரு கும்பல் மிரட்டிக் கொண்டிருக்கிறது. அந்தக் காலண்டரின் பிரகாரம் உலகம் 2012ல் அழிந்துவிடுமாம். இதுவரை எந்த டெலஸ்கோப்பிலும் சிக்காத, நிபிரு(Nibiru) என்கிற கோள் நமது பூமியின் மேல் மோதி பூமியே அழிந்துவிடுமாம். சுமேரியர்கள் காலத்திலேயே அந்தக் கோள் கண்டுபிடிக்கப்பட்டதாக மிரட்டல்பேர்வழிகள் சொல்லிக் கொண்டிருக்க, அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று ஆய்வாளர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் மக்களில் கணிசமான ஒரு பகுதியினர் இதை நம்பி பயப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.

அதனால்தான் எதற்கும் அசராத நாசா விண்வெளி மையம் கடந்த வாரத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. மாயன் பயமுறுத்தல்கள் விஸ்வரூபம் எடுப்பதை தடுக்கவே மாயா இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. ”மாயன் காலண்டரை நம்பாதீர்கள். மாயன்காலண்டர் சொல்வது போல நிபிரு என்ற ஒரு கோளே இல்லை” என்று அந்த அறிக்கை சொல்கிறது.

சந்தடிசாக்கில் சோனி நிறுவனம் கிராபிக்ஸ் உபயத்துடன், 2012 என்று படம் எடுத்து உலகம் அழிவதாக DTSல் மிரட்டி பணம் சம்பாதித்துக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது.  சென்னையிலும் நாளை ரிலீஸ்.

ஆன்லைன் நைஜீரியன் லாட்டரி, ஆன்லைன் செக்ஸ் வீடியோக்களைப் போல, இந்த 2012 மாயன் சமாச்சாரமும் ஒரு ஆன்லைன் மோசடி வியாபாரம்தான். சந்தேகம் இருந்தால் இது தொடர்பான பல இணைய தளங்களைப் பாருங்கள். உலகம் அழியும்போது தப்பித்துக்கொள்ள வழி சொல்லித்தருகிறார்களாம். உலகமே அழிந்த பின்னும் நீங்கள் அழியாமலிருக்க, சில டாலர்களை தட்சணையாகத் தாருங்கள் என்று சில தளங்கள் அழைக்கின்றன. ஏமாறாதீர்கள்!

அதோ குடுகுடுப்பைக்காரன் வருகிறான்! 2012ல் இருந்து நல்ல காலம் பொறக்குது! நல்ல காலம் பொறக்குது!

Thursday, May 28, 2009

ஜாலியான அட்வைஸ் கதை - 1

விடிந்தால் பரிட்சை. ஆனால் விடிய விடிய ஐ.பி.எல் பார்த்ததில் படிக்க முடியவில்லை. நேரத்தை வீணடித்த நண்பர்கள் நால்வரும் ஒரு திட்டம் போட்டார்கள். அதன்படி பரிட்சை நாளன்று, நால்வரும் சட்டையை அழுக்காக்கிக் கொண்டார்கள். கால்களில் சேற்றை வாரி நனைத்துக் கொண்டார்கள்.

பின்னர் அதே கோலத்துடன் தங்கள் பேராசிரியரை சந்தித்தார்கள்.
”சார், நேற்று இரவு ஒரு திருமணத்திற்கு காரில் சென்றிருந்தோம். ஆனால் திரும்பி வரும்போது, நடு இரவில் ஆளில்லாத ஒரு இடத்தில் டயர் வெடித்து கார் நின்று விட்டது. பரிட்சை இருப்பதால் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்று தள்ளிக் கொண்டே வந்துவிட்டோம். அதனால்தான் இந்தக் கோலத்தில் இருக்கிறோம்” என்றார்கள்.

அவர்களின் நிலையைப் பார்த்து ஏமாந்த பேராசிரியர் ”உங்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. அதனால் மூன்று நாட்கள் கழித்து உங்களுக்கு மட்டும் தனியாக தேர்வை வைத்துக் கொள்ளலாம்” என்றார்.

சரியாக மூன்றாவது நாள் அவர்கள் மீண்டும் பேராசிரியரை சந்தித்தார்கள். நீங்கள் ஸ்பெஷல் கேஸ் என்பதால் நால்வரும் தனித்தனி அறைகளில்தான் தேர்வெழுத வேண்டும் என்றார். அதன்படி நண்பர்கள் நால்வரும் தனித் தனி அறைகளில் அமர வைக்கப்பட்டார்கள். கேள்வித் தாள்களும் விநியோகிக்கப்பட்டன. இரண்டே இரண்டு கேள்விகள் தான்.

முதல் கேள்வி
உன் பெயர் என்ன ? ( 2 மதிப் பெண்கள்)

இரண்டாவது கேள்வி
அன்றைய இரவு காரின் எந்த டயர் வெடித்தது? (98 மதிப் பெண்கள்)
1. இடது முன் டயர்
2. இடது பின் டயர்
3. வலது முன் டயர்
4. வலது பின் டயர்

ஜாலி அட்வைஸ்
கூட்டு சேர்ந்து பொய் சொல்லுங்கள். ஆனால் தனியாக மாட்டாதீர்கள்

(இமெயிலில் வந்த கதை)

Friday, January 9, 2009

சத்யம் என்கிற பொய் மெய்யானது எப்படி? ஒரு அலசல்

கோடிகளில் படிக்கும்போது தலை சுற்றுகிறது. இப்படி கூட நடக்க முடியமா என்று மனம் மலைக்கிறது. இது பொய்யா மெய்யா என்று குழப்பம் வருகிறது. அதனால் நமது சக பதிவர்களின் பதிவுகளின் 'அச்சச்சோக்கள்', தினமும் ஷேர் மார்க்கெட் பற்றி அலட்டும் நண்பர்களின் 'I know that'கள், பத்திரிகைகளின் 'கோடிகள் மாயம்' அலறல்கள், தொலைக் காட்சி செய்திகளில் பங்கேற்ற வல்லுனர்களின் 'It won't affect Indian Corporate Sector'கள் இவற்றைப் பார்த்து நான் புரிந்துகொண்டது என்னவென்றால் . . .

சத்யம் என்கிற பொய் மெய்யானது எப்படி?
நீங்கள் ஒரு கம்பெனி வைத்திருக்கிறீர்கள். வங்கியில் நயா பைசா இல்லை. ஆனால் ஒரு இலட்சம் இருப்பதாக கதை விடுகிறீர்கள். இன்னும் ஒரு இலட்சம் இருந்தால் பத்து இலட்சம் ஆக்கிவிடலாம் என்று மற்றவர்களை நம்ப வைக்கிறீர்கள். அவர்களும் ஒரு இலட்சம் தருகிறார்கள். உங்களைப் பொறுத்தவரையில் கம்பெனிக்கு முதல் ஒரு இலட்சம் வந்துவிட்டது. ஆனால் முதலீடு செய்த மற்றவர்களைப் பொறுத்தவரையில், ஏற்கனவே நீங்கள் (பொய்யாகச் சொன்ன) ஒரு இலட்சம், இவர்களுடைய ஒரு இலட்சம் இரண்டையும் சேர்த்து தற்போது கம்பெனியில் இரண்டு இலட்சம் உள்ளது.

ஆக கையிலிருக்கும் ஒரு இலட்சத்தை இரண்டு இலட்சமாக உலகத்துக்கு அறிவிக்கிறீர்கள். இதைப் பார்த்து மேலும் பலர் உங்கள் கம்பெனியில் முதலீடு செய்கிறார்கள். நீங்களும் வழக்கம் போல 5 இலட்சம் வந்தால் அதை 10 இலட்சம் என்றீர்கள். 20 இலட்சம் வந்தால் அதை 40 இலட்சம் என்றீர்கள். முதலீடு செய்தவர்கள் உங்களை சந்தேகப் படவில்லை. ஏனென்றால் நீங்கள் காண்பித்தது இலாபக் கணக்கு. உங்களை முதலீட்டாளர்கள் மட்டுமல்ல, ஷேர் மார்கெட்டும் நம்புகிறது. அரசாங்கமும் நம்புகிறது. வெளிநாட்டு நிறுவனங்களும் நம்புகின்றன. அல்லது அவர்களை நம்ப வைக்க நீங்கள் ஒரு 'இலாப நாடகம்' ஆடிக் கொண்டே இருக்கிறீர்கள்.

ஒரு கட்டத்தில் கம்பெனியின் வங்கியிருப்பு 5400 கோடி ரூபாயாகிறது. நீங்கள் 8000ம் கோடி ரூபாய் என்று அறிவித்தால் உங்கள் கம்பெனி என்ன ஆகும். இந்தியாவின் நான்காவது பெரிய ஐ.டி நிறுவனமாகும். சத்யம் நிறுவனம் அப்படித்தான் பொய்க் கணக்குகளால் விசுவரூபமெடுத்தது. இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி திறமையாக வழிநடத்தியவர் திருவாளர் ராமலிங்க ராஜீ. அவருடைய சரித்திரம் 'சத்யம் என்ற பெயரில் பொய்யை மெய்யாக்கிய சரித்திரம்'.

சத்யம் பொய்யென அம்பலமாது எப்படி?
Wine-Women-Wealth இந்த மூன்றும் அதிகமாகிவிட்டால் எப்பேர்பட்ட கொம்பனுக்கும் நிலை தடுமாறிவிடும். ராமலிங்க ராஜீ முதல் இரண்டு 'W'க்களில் எப்படி எனத் தெரியாது. ஆனால் மூன்றாவது 'W'வில் ஆள் படு வீக். குறிப்பாக நிலத்தை வளைத்துப்போட்டு மேல் விலைக்கு விற்பதில் பயங்கர கில்லாடி. இதெற்கென்றே ஒரு மெகா ரியல் எஸ்டேட் நிறுவனத்தை ஆரம்பித்தார். இன்றைக்கு ஆந்திராவிலுள்ள மிக முக்கியமான நிலங்களும், நில ஆவணங்கள் எல்லாம் இவருடைய குடும்பத்தாரின் பெயரில் உள்ளது. நிறுவனத்தின் பெயர் என்ன தெரியுமா? MAYTAS. SATYAM இந்த பெயரை அப்படியே ஒவ்வொரு எழுத்தாக பின்னோக்கி எழுதினால் அதுதான் MAYTAS. விதியின் விளையாட்டைப் பாருங்கள். தெரிந்தோ தெரியாமலோ சத்யம் ரிவர்ஸ் கியரில் பயணிக்க MAYTAS நிறுவனம்தான் காரணம்.

MAYTAS நிறுவனத்திற்கு பணம் எங்கிருந்து வந்தது?
திருவாளர் ராஜீ, நினைத்தபோதெல்லாம் தப்பான இலாப கணக்கு காட்டி பங்குச் சந்தையில் சத்யம் நிறுவனத்தின் விலை உயரும்படி பார்த்துக் கொண்டார். காரணம் SATYAM நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள் ராஜீவிடமும் அவருடைய குடும்பத்தாரிடமும் இருந்தன. அதனால் அவருக்கும், அவருடைய குடும்பத்துக்கும் கொள்ளை இலாபம். இலாபத்தை என்ன செய்வது? MAYTAS நிறுவனத்தில் முதலீடு செய்தார். MAYTAS நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக ஆந்திராவிலிருந்த நிலங்களை எல்லாம் வளைக்கத் தொடங்கியது.

SATYAM - MAYTAS பொய்யும் மெய்யும்
ஒரு புறம் பொய் பணத்தால் நிமிர்ந்து நிற்கும் SATYAM.
மறுபுறம் பொய்பணத்தால் சம்பாதித்த மெய் பணத்தால் நிமிர்ந்து நிற்கும் MAYTAS.
ராமலிங்க ராஜீ ஆந்திர மக்களின் கனவு நாயகாக உயர்ந்தார். கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் வளையத்திற்குள் வந்தார். பொய் மூட்டையான சத்யம் நிறுவனத்தின் செல்வாக்கை வைத்து பில் கிளிண்டனை இந்தியாவிற்கு அழைத்து வந்தார். அப்போதைய லேப்டாப் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நெருங்கிய நண்பரானார். கேட்கவே ஆளில்லை. SATYAM செல்வாக்கை தந்தது. MAYTAS நிலங்களைக் குவித்தது.

ஆட்சி மாற்றம் - சத்யத்திற்கு வந்த சோதனை
ஆட்சி மாறியது. சந்திரபாபு நாயுடுவிற்குப் பதில் ராஜசேகர ரெட்டி வந்தார். இந்திய அரசியல் வழக்கப்படி, முந்தைய அரசின் செல்வாக்கான நபர்கள் எல்லாம் தற்போதைய அரசின் சந்தேக வலைக்குள் வந்தார். முதலில் சிக்கியவர் ராமலிங்க ராஜீ. ஆனால் நீண்ட காலம் அவரை ஒதுக்க முடியவில்லை. சத்யம் ஏற்படுத்திய ஒளிவட்டமும், MAYTAS நிறுவனத்தின் பண வட்டமும் தற்போதைய முதல்வரையும் மசிய வைத்தது. வலையை விரித்தவரே வலையில் வீழ்ந்தார். மீண்டும் அரசுக்கு நெருக்கமானார் ராஜீ.

நக்ஸலைட்டுகள் வழியாக முதல் புகைச்சல்
ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய வளர்ச்சி பற்றிய சந்தேகங்கள் புகைய ஆரம்பித்தன. முதலில் பகிரங்கமாக எதிர்த்தவர்கள் ஆந்திர நக்ஸலைட்டுகள். பணத்தால் ஏழை நிலங்களை வளைக்கிறார் என்று போராடினார்கள். ஆனால் கொடி பிடித்தவர்கள் நக்ஸலைட்டுகள் என்பதால் மக்களின் கவனம் பெறவில்லை. பணக்கார மீடியாக்களும் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டன.

மெட்ரோ ரயில் வடிவில் அடுத்த புகைச்சல்
அடுத்து வந்தது மெட்ரோ ரயில் புராஜக்ட். இந்த புராஜக்டுக்கு ஆலோசகராக திரு. Sridhar நியமிக்கப்பட்டார். Sridhar கடந்த ஆண்டின் 'மிகச் சிறந்த இந்தியராக' என்.டி.டிவியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மெட்ரோ ரயிலை தனி மனிதனாக போராடி டெல்லி மக்களுக்கு பெற்றுத் தந்த சாதனையாளர், நேர்மையாளர், அரசியல் மற்றும் பண சூழ்ச்சிகளுக்கு வளைந்து கொடுக்காதவர். ஆனால் அவரை வளைக்க நினைத்தார் ராஜீ. காரணம் மெட்ரோ ரயிலுக்கு தேவையான நிலங்களை வைத்திருந்தவர் ராஜீ, அதாவது அவருடைய நிறுவனமான MAYTAS. சாதா நிலங்களை விலை உயர்த்தி மெட்ரோ ரயில் திட்டத்திற்காக வாங்குமாறு திரு. Sridharஐ நிர்பந்தித்தார். அவர் இந்த ஊழலுக்கு உடன்பட மறுத்து கண்டனக்குரல் எழுப்பினார். எப்போதுமே நேர்மையின் குரல் அமுக்கப்படும். அதன்படியே ராஜீவைக் கண்டிக்க வேண்டிய அரசு திரு. Sridhar அவர்களை தேவையில்லை என திருப்பி அனுப்பியது. வழக்கம்போல பணக்கார மீடியாக்கள் இதையும் கண்டு கொள்ளவில்லை. எல்லாம் பணம் செய்யும் மாயம்.

கிளைமாக்ஸ்க்கு முந்தைய காட்சிகள் - உஷாரான ராஜீ
கொஞ்சம் கொஞ்சமாக புகைய ஆரம்பித்ததும் ராஜீ உஷாரானார். இங்கேதான் அவருடைய கிரிமினல் மூளை உச்சத்திற்கு வந்தது. அவருடைய முன்னேற்பாட்டின்படி மீண்டும் பொய்யான தகவல்களை வைத்து சத்யம் ஷேர் மார்கெட்டில் எகிறியது. அப்போது பெரும்பாலான ஷேர்களை வைத்திருந்த ராஜீவும், அவருடைய குடும்பத்தாரும், அவருடைய பணக்கார கிரிமினல் நண்பர்களும் தங்களுடைய ஷேர்களை விற்று பெரும் பணம் பார்த்தார்கள். அதாவது சத்யம் நிறுவனத்தின் மதிப்பு 8000ம் கோடி ரூபாயாக உயர்த்திக் காட்டப்பட்டபோது, சத்யம் நிறுவனத்தில் அவருக்கிருந்த பங்குகள் வெறும் 5% மட்டுமே. அதாவது இனிமேல் சத்யம் திவால் ஆனால் கூட ராஜீவிற்கும் அவருடைய குடும்பத்திற்கும் நயா பைசா கூட கையை விட்டுப் போகாது. நம்மைப் போன்ற அப்பாவிகளுக்குத்தான் பட்டை நாமம்.

ரியல் எஸ்டேட் வீழ்ச்சி - பொய்யின் முதல் வீழ்ச்சி
அமெரிக்க பொருளாதாரம் சரிந்தவுடன், அமைஞ்ச கரையில் நிலங்களின் விலை குறைந்தது. ஆந்திராவில் குறையாமலிருக்குமா? அங்கேயும் மளமளவென விலை சரிய ஆரம்பித்தது. கிளைமாக்ஸில் வில்லன் எதிர்பாராமல் ஏமாறுவது போல, ராஜீ எதிர்பாராத இந்த சரிவு அவருடைய ரியல் எஸ்டேட் பொக்கிஷமான MAYTAS நிறுவனத்தை பாதித்தது. என்ன செய்வது என யோசித்தார். அவருடைய கிரிமினல் மூளை மீண்டும் அபாரமாக வேலை செய்தது.

ஒரே கல்லில் பல மாங்காய் - MAYTAS, SATYAM-மாக மாற முயற்சித்தபோது
ஒரு புறம் 5400 கோடி ரூபாய் மதிப்புள்ள சத்யம் 8000 கோடி ரூபாயாக பொய் விசுவரூபம்.
மறு புறம் 7000 கோடி ரூபாய் மதிப்புள்ள MAYTAS அதளபாதாளத்தில் விழப் போகும் அபாயம்.
சத்யத்தில் பணமில்லை, ஆனால் இருப்பதாக கணக்கு. MAYTASல் பணம் உண்டு, ஆனால் ரியல் எஸ்டேட் வீழ்ச்சியால் கரைந்து கொண்டிருக்கிறது. தடுப்பது எப்படி? அப்போது உதயமான ஐடியாதான் SATYAM நிறுவனத்தின் (இல்லாத) பணத்தால் MAYTASஐ வாங்குவது.

அப்படி வாங்கிவிட்டால் சத்யம் நிறுவனத்திலிருந்து 7000ம் கோடி ரூபாய் அவருடைய குடும்பத்தினருக்கு வந்துவிடும். அதெப்படி...சத்யத்தில் இருப்பதே 5400 கோடி ரூபாய்தானே? பிறகெப்படி ஏழாயிரம் கோடி கிடைக்கும்? மீதி 1600 கோடிக்கு எங்கே போவது? நாமாக இருந்தால் இப்படித்தான் கவலைப்படுவோம். ஆனால் ராமலிங்க ராஜீவிற்கு இது ஒரே கல்லில் பல மாங்காய்கள். அக்கவுண்ட்சில் ஒரே ஒரு வரி எழுதுவது மூலம் 7000ம் கோடி ரூபாய் SATYAM நிறுவனத்திலிருந்து அவருடைய மனைவிக்கும் மக்களுக்கும் வந்துவிடும். ஆக MAYTAS நிறுவனம் Safe. இது முதல் மாங்காய்.

உண்மையில் கைமாறியது வெறும்(?) 5400 கோடி ரூபாய்தான். மீதி 1600 கோடி ரூபாய் பற்றி ராஜீ வாய் திறக்கமாட்டார். ஏனென்றால் இப்படி கை மாறியதன் மூலம் சத்யம் நிறுவனத்தில் 7000 கோடி ரூபாய் இருந்ததாக கணக்கில் வந்துவிடும். அதாவது இத்தனை நாள் வெளியில் சொல்லாமல் காப்பாற்றி வந்த பொய் உண்மையாகிவிடும். இதனால் SATYAM நிறுவனம் Safe. இது இரண்டாவது மாங்காய்.

எந்த பிரச்சனை வந்தாலும் உலகப் பொருளாதார பிரச்சனையால் ரியல் எஸ்டேட் அவுட், ஐ.டியும் அவுட். அதனால் சத்யம் நிறுவனமும் அவுட் என்று ஒற்றை வரியில் சொல்லி எஸ்கேப் ஆகிவிடலாம் . இது மூன்றாவது மாங்காய்.

புகைச்சல் கொளுந்துவிட்டு எரிந்த கதை - உலக வங்கி தடை மற்றும் போர்டு மெம்பர்கள் ராஜினாமா
சுருட்டுவதையெல்லாம் சுருட்டிக்கொண்டு, பட்சி பறக்கப் பார்க்கிறது என்று சிலர் மோப்பம் பிடித்துவிட்டார்கள். சில போர்டு மெம்பர்களுக்கு இது துளியும் பிடிக்கவில்லை. விஷயம் போர்டுக்கு வெளியே கசிந்தது. ரியல் எஸ்டேட் பிசினஸ் சரிந்து கொண்டிருக்கும் வேளையில் எதற்காக MAYTASஐ வாங்கி நஷ்டப் படவேண்டும் என்று பங்குதாரர்கள் எதிர்ப்பை காட்டினார்கள். இது ராமலிங்க ராஜீவிற்கு வந்த முதல் தோல்வி.

இதே வேளையில் உலக வங்கி சுதாரித்துக் கொண்டது. இல்லாத இருப்பைக் காட்டி உலக வங்கியிடமிருந்து சத்யம் நிறுவனம் பல சலுகைகளை அனுபவித்து வந்திருப்பதாக குற்றம் சுமத்தி அடுத்த 8 வருடங்களுக்கு தடை விதித்தது.

கிளைமாக்ஸ் - பொய்யை மெய்யாக்க நினைத்தபோது . . .
உலக வங்கியே தடை விதித்த போதும் ராஜீ தளரவில்லை. நான் நேர்மையாளன், என்னை சந்தேகப் படாதீர்கள் என்று தைரிய முகம் காட்டினார். உலக வங்கியை எதிர்த்து நோட்டீஸ் விட்டார். ஆந்திர மாநில அரசு அவருக்கு ஆதரவளித்தது. எனவே மீண்டும் இரு கம்பெனிகளையும் எதிர்ப்புகளையம் மீறி இணைக்க முயற்சித்தார். ஆனால் விஷயம் திடீரென பெரிதாகி தெருக்கோடி வரைக்கும் வந்தவுடன், இணைப்பு இல்லை என்று பின்வாங்கினார். இந்த நெருக்கடியில் சத்யம் நிறுவனத்தின் கணக்குகள் அலசப்பட்டன. ஊதிப் பெருசாக்கப்பட்ட ஊழல் விசுவரூபமெடுத்து. 5400 கோடி ரூபாய் 8000 கோடி ரூபாயாக போலியாக உயர்த்திக் காட்டப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது.

சத்யம் நிறுவனத்தின் ஆபீஸ் பியூன் முதல் பிசினஸ் பார்ட்னர்கள் வரை திடீரென ஒன்று திரண்டு நெருக்கடி தர ஆரம்பித்ததும், "ஆமாம்.. நான் தவறு செய்துவிட்டேன்" என்று ராஜீ குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

சத்யம் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு என்ன? பூஜ்யம்.
5040 கோடி ரூபாயை 7000 கோடி ரூபாயாக உயர்த்திக் காட்டினேன் என்று சொல்லி குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டு அவர் தலை மறைவாகிவிட்டார்.
ஆனால் அவர் சொல்லாமல் விட்டது என்ன தெரியுமா? சத்யம் நிறுவனத்திற்கு இருக்கும் 1000 கோடி ரூபாய் கடன். பிரச்சனை முற்றியவுடன் 140 ரூபாய்க்க விற்ற சத்யம் நிறுவனப் பங்கு பல்டி அடித்து 30 ரூபாய்க்கு வந்து விட்டது.

அதாவது சுருக்கமாகச் சொன்னால் சத்யம் நிறுவனம் இன்று ஒரு பூஜ்யம்.

யார் குற்றவாளி?
முதல் குற்றவாளி திருவாளர் ராமலிங்க ராஜீ.
அடுத்தது அவருக்குத் (கணக்கை திரித்து எழுத) துணைபோன ஆடிட்டர் கும்பல்கள்.
தப்பு செய்ய தைரியம் கொடுத்து, துணைபோன அரசியல்வாதிகள், அரசுகள்
எந்தக் கேள்வியும் கேட்காத வங்கிகள்.

கடைசியாக . . .
நமது சமூகம்தான் . . . நாம்தான் . . . குற்றவாளி. '50 பைசா சில்லறை இல்ல, இறங்கும்போது வாங்கிக்கோ' என்று சொல்கிற கண்டக்டரை சட்டையைப்பிடித்து மிரட்டுகிறது சமூகம். அதே சமயம் மினிமம் பேலன்ஸ் இல்ல, அதனால 500 ரூபாய் பிடிச்சிட்டோம் என்று சொல்கிற வங்கிக்கு இதே சமூகம் சலாம் போடுகிறது. பணக்காரனும், அதிகாரத்தில் இருப்பவனும் செய்வதெல்லாம் சரி. ஒரு வேளை அது தவறென்றாலும் அதை தட்டிக்கேட்க பயம். இது தான் இன்றைய நிலை.

இது மாறினால் சத்யம் சத்யமாகவே இருக்கும். இல்லையென்றால் சத்யம் SATYAMஆகத்தான் வலம் வரும்.

Monday, December 22, 2008

அபினவ் - கமாண்டோக்கள் - ஒரு SMS

ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் தங்க பதக்கம் வாங்கிய அபினவிற்கு (abhinav bindra) 6 கோடி ரூபாய் பரிசு அறிவித்தது அரசாங்கம்..
இத்தனைக்கும் அவர் ஏற்கனவே பணக்காரர்..

ஆனால் மும்பை தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான எங்கள் பாதுகாப்பு படை வீரர்களுக்கு 5 லட்சம்.. பாதுகாப்புக்கு படை வீரர்களின் மதிப்பு அவ்வளவு தானா?

பாதுகாப்பு படை வீரரின் உயிரின் மதிப்பு 5 இலட்சம்.. ஆனால் ஒலிம்பிக் தங்கத்தின் மதிப்பு 6 கோடியா???....

மேலே காணப்படும் இந்த வரிகள், கடந்த சில வாரங்களாக எஸ்.எம்.எஸ், வலைப்பூ, இமெயில் என பல உருவங்களில் உலவிக்கொண்டிருக்கிறது.

இந்த இடத்தில் நான் இதே கேள்வியை உங்களை நோக்கி கேட்க விரும்புகிறேன்.
  • ஏ.சியில் சுகமாக அமர்ந்து கொண்டு வேலை செய்யும் உங்களில் பல பேருக்கு, இறந்து போன அந்த வீரர்களை விட மாதச் சம்பளம் அதிகம். யார் உசத்தி? நீங்களா? இறந்து போன அந்த வீரர்களா? 
  • யாருக்கு சொகுசு தேவை? உங்களுக்கா? எப்போதும் மரணத்தின் விளிம்பில் நிற்கும் அந்த வீரர்களுக்கா?


என்ன செய்வது மை டியர் பிரண்ட்ஸ். தாஜ், டிரைடண்ட் போன்ற ஸ்டார் ஹோட்டலில் வடை சுடுபவருக்கு, எல்லையில் துப்பாக்கி சுடுகின்ற ஜவானை விட சம்பளம் அதிகம்தான். அதே போல இந்த எஸ்.எம்.எஸ்ஸை முதன் முதலில் எழுதியவருக்கும், இதை பரப்பிய பலருக்கும், இதை எழுதிக்கொண்டிருக்கின்ற எனக்கும் கிடைக்கின்ற மாதச் சம்பளம் நமது பாதுகாப்பு படை வீரர்களின் மாதச் சம்பளத்தை விட நிச்சயம் அதிகம்தான். இதை நான் ஒப்புக்கொள்கிறேன். வாசிக்கின்ற நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?

அந்த வீரர்களைவிட கிட்டத் தட்ட நாம் எல்லோரும் அதிக மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை என்றைக்காவது நாம் உணர்ந்திருக்கிறோமா?

எல்லையில் காவல் சாமிகளாக வெயிலிலும், மழையிலும், பனியிலும் உயிரை உருக்கிக் கொண்டிருக்கும் அந்த ஜவான்களை விட, நாளை முதல் உங்களுக்கு சம்பளம் கம்மியாகத்தான் தருவேன் என்று அரசாங்கமோ, உங்கள் நிறுவனமோ சொன்னால் தியாக மனப்பான்மையுடன் ஒப்புக்கொள்வீர்களா?

ஒன்று மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும் நண்பர்களே. யாரை வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். கேலி பேசலாம். ஆனால் அதே கேள்வி நம்மை நோக்கித் திரும்பும்போது, நம்முடைய பதில் என்ன?

என்னைப் பொறுத்தவரையில், எல்லாவற்றையும் பணத்தால் அளந்து பார்க்கிற பழக்கம் ஒழிய வேண்டும். பணம் என்பது இடைவெளியை நிரப்புகிற பாலம் அல்ல. மேலும் பெரிதாக்குகிற கோடாலி. பணம் எப்போதுமே சரியான அளவுகோல் அல்ல.

மனிதர்களை பணத்தால் அலங்கரிக்காதீர்கள். நல்ல மனதால் தொடுங்கள் போதும்.

Friday, December 5, 2008

பணக்காரருக்கு கொடுத்தால் அது subsidy. ஏழைக்கு கொடுத்தால் அது இலவசம்

சென்ற மாதத்தில் ஒருநாள்! சென்னை புரசைவாக்கம்! வழக்கம் போல காருக்குள் அமர்ந்து கொண்டு நாங்கள் டிராபிக்கில் வியர்த்துக்கொண்டிருந்தோம். சைக்கிள்காரர்கள் திரும்பிப் பார்க்காமல் குறுக்கே பாய்ந்து லாரி மற்றும் மாநகரப் பேருந்துகளின் பிரேக்குகளுக்கு டெஸ்ட் வைத்துக் கொண்டிருந்தார்கள். மோட்டர் பைக்கர்கள் காதுக்கும், தோள் பட்டைக்கும் இடையில் மொபைல் போனை பதுக்கி, யாரிடமோ இன்னும் ஐந்து நிமிடங்களில் வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டு சிவப்பு சிக்னல்களைத் தாண்டினார்கள். ஷேர் ஆட்டோவில், பிதுங்கி வழிந்த லேட் ஆபீசர்களுக்குப் பயந்து நாங்கள் பயணம் செய்த கார் இடது பக்கம் ஒதுங்க, எதிரில் மிரண்டு போன மாடு ஒன்று வலது பக்கம் சாலைக்குள் பாய்ந்து மொத்த டிராபிக்கையும் நிறுத்தியது.

பிரேக்கையும், ஹாரனையும் ஒரே அமுக்காக அமுக்கிய நண்பர், "சை! இப்பவே இப்படி இருக்கிறது. இன்னும் ஒரு லட்ச ரூபாய்க்கு கார் வந்திடுச்சின்னா அவ்வளவுதான்" என்றார்.
"ஏன்?", இது நான்.
"ஏன்னா? இப்பவே பாருங்க ரோடுல இடமில்ல. டாடா நேனோ காரை கொண்டு வந்துட்டான்னா, அவனவன் ஒரு லோனை போட்டிருவானுங்க. எல்லாம் ஆளுக்கொரு காரை வச்சுக்கிட்டு தெருவை அடைச்சுக்குவானுங்க"
"அதுதான் நிறைய பிரிட்ஜ், சப்-வேல்லாம் கட்டுறாங்களே?"
"எத்தனை கட்டுனாலும், ஒரு லட்ச ரூபா கார் வந்தா நாஸ்திதான். அதனால் ரோடு ஃபிரியா இருக்கணும்னா, இந்த ஒரு லட்ச ரூபா கார் வரக் கூடாது. இவனுங்க கார் வாங்க கூடாது"
"நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா?"
"என்னது?"
"ஒரு லட்ச ரூபா கார் வரட்டும்"
"ம்.."
"அவனுங்க பஸ்ல, பைக்ல போறத நிறுத்திட்டு கார் வாங்கட்டும்"
"ம்.."
"இதே தெருவுல கன்னா பின்னான்னு என்ஜாய் பண்ணி ஓட்டட்டும். "
"ரோட்டுல இடமிருக்காது அண்ணே!"
"அதுக்குதான் நான் இப்ப ஐடியா சொல்றேன் தம்பி! நாமளும், அவனுங்களும் ஆளுக்கொரு கார்ல போனாதான இடமிருக்காது. இனிமே அவனுங்க மட்டும் கார் ஓட்டட்டும். நாம கார்ல போறத விட்டுட்டு பஸ்லயும், பைக்லயும் போகலாம். ஓகேவா?"

என் நண்பர் பதில் சொல்லவில்லை. பதிலுக்குப் பதிலாக கோபமாக ஆக்ஸிலேட்டரை அழுத்தி சரக்கென வேகமெடுத்தார். இந்தியாவின் தற்போதைய ஸோ கால்டு பணக்காரர்கள் என் நண்பரின் ஜெராக்ஸ் காப்பிகள்தான். இந்தியாவின் சந்தோஷங்கள், வளர்ச்சிகள், செல்வாக்குகள் எல்லாம் தங்களுக்கு மட்டும்தான் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களை விட பண அந்தஸ்தில் கீழாக இருப்பவர்களுக்கு இவற்றில் எந்தப் பங்கும் இல்லை என்று கூசாமல் சொல்கிறார்கள்.

இவர்கள் அரசாங்கத்திடம் உதவி கேட்டால் அதற்குப் பெயர் 'Subsidy'. ஏழைகள் கேட்டால் 'இலவசம்' என்று ஒரு விளக்கம் வைத்திருக்கிறார்கள்.
இவர்கள் 'மும்பை தாஜ் ஹோட்டலில்' தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டால் மொத்த இந்தியாவையும் பொங்கியெழுந்து போராடச் சொல்கிறார்கள். மற்றவர்கள் 'சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷனில்' பாதிக்கப்பட்டால் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றக் கூட மறக்கிறார்கள்.

எப்போதுமே தங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் இந்த சிந்தனைதான் 'தீவிரவாதத்தின் முகம்'. இந்த தீவிரவாத முகங்கள் இந்தியா முழுவதும் நிறைய உள்ளன.

Friday, November 28, 2008

இந்திய அரசியல்வாதிகளுக்கு ஒரு வேண்டுகோள்!!!

"We request Advani and other politicians not to come to Mumbai at this moment. We don't want our security forces run behind them to safe guard them. We need them for our Mumbai"

என்று எழுத்தாளர் ஷோபா டே NDTV 24x7 சேனலில் குமுறிக் கொண்டிருந்தார்.

ஒரு புறம் தீவிரவாதிகளின் பிடியில் ஓபராய், தாஜ் ஹோட்டல்கள் பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது, இன்னொரு புறம் மும்பை தூசு தட்டி எழுந்து நிற்க ஆரம்பித்துக் கொண்டிருந்தது. உயிரை துச்சமாக மதித்து தைரியமாக கூடி நின்ற மக்கள் மேலும் மேலும் வந்து இறங்கிய இராணுவத்தினரையும், போலீசாரையும், கமாண்டோக்களையும் கைதட்டி உற்சாகமாக வரவேற்றார்கள். "பாரத் மாதா கி ஜே", "வந்தே மாதரம்" என்ற கோஷங்கள் துப்பாக்கி சத்தங்களை மீறி ஒலித்தன.

அதே நேரத்தில் (நேற்று) அத்வானி அங்கு வந்து சென்றார். அவரைத் தொடர்ந்து (இன்று) மோடி வந்திறங்கிச் சென்றார். இன்னும் பல அரசியல்வாதிகள் வந்து செல்லக் கூடும். அவர்கள் வருவது ஓட்டுக்காகவா? அரசாங்கத்தை திட்டவா? இக்கட்டான நேரத்தில் மக்களை சந்திக்கும் அக்கறையா? என்ற விவாதத்தில் இறங்க வேண்டாம். அது தற்போதைய தேவையும் அல்ல.

ஒவ்வொரு துப்பாக்கியும், ஒவ்வொரு பாதுகாவலரும், ஒவ்வொரு பாதுகாப்பு நடவடிக்கையும் மும்பையை ஊடுருவியிருக்கும் தீவிரவாதிகளை குறி வைத்து இயங்கும்போது, இந்த அரசியல் வி.ஐ.பிக்களின் வருகை நிச்சயம் ஒரு தடங்கல்தான். இந்த அரசியல்வாதிகளைத் தொடரும் கார்களும், கைத்தடிகளும், இந்த நேரத்தில் மிகப்பெரிய கவனச் சிதறல்தான்.

ஒவ்வொரு நொடியும் நாட்டின் பாதுகாப்புக்கு தேவைப்படும்போது, இந்த அரசியல் வி.ஐ.பிக்களின் பாதுகாப்புக்காக சில நிமிடங்களாவது அந்த பாதுகாப்பு திசை திரும்புகிறது. எனவே அவர்களுடைய வருகை இந்த தருணத்தில் தேவையற்றது.

எனவே 'இந்திய அரசியல்வாதிகளுக்கு ஒரு வேண்டுகோள்!!! தயவு செய்து சில நாட்களுக்கு மும்பை பக்கம் வராதீர்கள். நாட்டின் காவலர்களுக்கு தற்போது மக்களை காப்பதே முக்கியம். உங்களைக் காப்பது அல்ல."

ஷோபா டே இதைத்தான் சொன்னார். நான் வழி மொழிகிறேன்.