Monday, December 21, 2009

திருவெம்பாவை - திருப்பள்ளி எழுச்சி - 4,5

வாழ்க வளமுடன்!
தமிழின் அமுத வரி எடுத்தேன் ..
திருவெம்பாவை சொல்ல...

இந்த வரிகளை எழுதித்தந்தவள் ஃபேஸ்புக் தங்கை அமுதா. திருவெம்பாவை பற்றி எழுதும்போது,  நமீதாக்களை பற்றிக் குறிப்பிடாமல் பக்தியோடு எழுதுங்கள், என்று செல்லமாக அதட்டி மேற்கண்ட வரிகளைக் கொடுத்தாள். அதிலிருந்து நான் தொடரவேண்டுமாம். 3 நாட்கள் ஆகிவிட்டது. அடுத்த எழுத்து கூட வரமாட்டேன்கிறது.

வெள்ளத்தில் ஏற்படும் சுழி, மெதுவாகத் துவங்கி, துரிதமாக பெருகி, படு குழியாக மாறி, எதையும் உள்ளுக்குள்ளே ஆழ்த்திவிடும். அந்தச் சுழி போன்ற மயக்கத்தில், (நமீதாக்களையும், தமன்னாக்களையும் இரசித்துக்கொண்டு) செல்லும் திசை தெரியாது (ஜொள்ளின்)ஆழத்தில் சிக்கும் (என்னைப் போன்ற ஜீவராசிகளின்) உயிர்களை உணர்வூட்டி, தட்டி எழுப்பி, "கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே" (சாமி கும்பிடும்போது, சினிமா நடிகை எதுக்குடா ராஸ்கல்) என்ற பொன்னான வாசகத்தால் கைதூக்கி விடுவதுதான் திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும்.

ஸ்ஸ்ஸ் அப்பா, உருப்படியா ஒரு வரி எழுதலாம்னு பார்த்தா இப்பவே கண்ணைக் கட்டுதே . . .

மார்கழி மாதத்தில் நான் மட்டும்தான் 8 மணி போர்வைக்குள் பதுங்குகிறேன் என்று நினைக்காதீர்கள். அந்தக்காலத்திலேயே இறைவனை வழிபடவேண்டிய சில பெண்களே சுணக்கமாகத்தான் இருந்திருக்கிறார்கள். இப்பாடல்களில் வரும் பெண்கள் உய்யும் வகை உய்ந்த அடியார்கள்.(உய் உய்னு சுத்த தமிழ்ல கலக்கறனா?) அந்தப் பெண்கள் என்ன செய்கிறார்கள் ? ஒன்று கூடுகிறார்கள். ஆதியும் அந்தமும் இல்லாதவன், அருட்பெருஞ் சோதி, சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்து ஈசன், அத்தன், ஆனந்தன், அமுதன், விண்ணுக்கு ஒரு மருந்து, வேத விழுப்பொருள், சிவன், முன்னைப் பழம், தீயாடும் கூத்தன் என்று பலவாறு இறைவனைக் குறித்துப் பாடி நீராடுகிறார்கள். பிறகு இந்தப் பேரின்பப் பெருவழிக்கு வராது விடுபட்டுப் போன (என்னைப் போல பெட்ஷீட்டுக்குள் அலாரத்தை அணைத்துவிட்டு அரைமயகத்திலிருக்கும்) அக்கம்பக்கத்திலுள்ள தம் எல்லாத் தோழிகளின் துயில் மயக்கத்தைத் தெளிவிக்கிறார்கள்(என் மனைவி எனக்கு காபி தருவது போல), அவரையும் கண்ணுக்கினிய கருணைக் கடலான சிவபெருமானை (மார்கழி மாசத்துலயாவது சாமியைக் கும்பிடுங்க என்று என் வீட்டில் அர்ச்சிப்பது போல) பாடத் தேற்றுகின்றனர்.

திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகர், இறை மணக்க, தமிழ் மணக்க, உளம் மணக்க திருவண்ணாமலை தரிசனத்தின்போது எழுதியபாடல்கள்.
 நாம் உய்யும் நெறியை உறுதியாகப் பற்றவேண்டும். அதே நேரத்தில் "எம்பிரான் மூலபண்டாரம் வழங்குகின்றான்; வந்து முந்துமினே !" என அறைகூவி அழைத்தும், அறியாதவருடைய இல்லங்களுக்கே சென்று (தங்கை அமுதா என்னை, அண்ணா நீ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இன்பமாக இம்சிப்பதைப்போல) அவர் வாழ்வையும் அண்ணாமலையாரின் அருள் ஒளி நிறைந்ததாக ஆக்க வேண்டும்.

பெருமானின் திருவருளால் அழியாத இன்பம் பெற்ற நம் ஆன்றொர்கள் செய்தது அது; நாமும் செய்யத் தக்கதும் வேண்டுவதும் அதுவே.

"அரன் நாமமே சூழ்க வையகமுந் துயர் தீர்கவே"

(ஹையா... எழுதி முடிச்சுட்ட்ட்ட்ட்டேன். மைடியர் தங்கை அமுதா . . . எப்ப்பூடி? இந்த சேட்டைக்காரனும் பக்தி கலந்து எழுதுவேன்ல . .)

இனி  திருவெம்பாவை


இங்கே சொடுக்கி டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

 "அது பழச்சுவையென, அமுதென, அறிதற்கு
      அரிதென, எளிதென", அமரும் அறியார்,
"இது அவன் திருவுரு; இவன் அவன்" எனவே;
      எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில் திருஉத்தர கோச
      மங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா !
எது எமைப் பணிகொளுமாறு அது கேட்போம்;
      எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே !

    "அந்தப் பரம்பொருள் பழத்தின் சுவைபோல இனியது,
அமுதம் போன்றது, அறிந்து கொள்வதற்கு அரியது, எளியது" என
அறிவால் உறுதி பெற தேவர்களுக்கும் இயலவில்லை !
(அப்படிப்பட்ட தாங்கள்) "இதுவே அந்தப் பரம்பொருளின் திருவுருவம்.
இவர் தான் அந்தப் பரம்பொருள்." என்று (கூறத்தக்க எளியமுறையில்) எங்களை ஆண்டுகொண்டு இங்கே எழுந்தருளியுள்ளீர் !
தேன் மிகுகின்ற சோலைகள் உள்ள திருஉத்தரகோச மங்கையில் வீற்றிருப்பவனே !
திருப்பெருந்துறைக்கு அரசே ! எது எங்களைப் பணி கொள்ளும் வகை ? அதன்படியே நடப்போம் !
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

ஆறு - வழி.

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்;
      மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார் !
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
      பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே !
செந்தழல் புரை திருமேனியுங் காட்டித்
      திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்;
      ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !

முன்னரே இருக்கும் துவக்கமும், இடைனிலையும், இறுதியும் ஆனவரே !
உம்மை மும்மூர்த்திகளும் அறியவில்லை. பிறகு வேறு யார் தான் அறிய முடியும் ?!
(பூமியாகிய) பந்தினை விரலில் அணிந்தவளும் (உமை), நீயும், உன்
அடியார்களின் (பலகாலமாக அன்பு செய்துவந்த) பழைமை வாய்ந்த
(மனத்து) இல்லங்கள்தோறும் எழுந்தருளுகின்ற பரமனே !
சிவந்த நெருப்புப் போன்ற அழகிய மேனியும் காட்டி,
திருப்பெருந்துறையில் கோயிலும் காட்டி, அந்தணனாக அமரும் கோலமும்
காட்டி என்னை ஆண்டாய் ! விரும்பி உண்ணும் அமுதம் போன்றவனே !
பள்ளி எழுந்தருள்க !

மூவர் - பிரமன், விஷ்ணு, உருத்திரன்; குடில் - இல்லம்; தழல் - தீ; புரை - போன்ற.

இன்னும் ஒரு திருவெம்பாவை



இங்கே சொடுக்கி டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
      விழுப்பொருளே ! உன தொழுப்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே !
      வண் திருப்பெருந்துறையாய் ! வழியடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே !
      கடலமுதே ! கரும்பே ! விரும்படியார்
எண்ணகத்தாய் ! உலகுக்கு உயிரானாய் !
      எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே !

விண்ணுலகில் உள்ள தேவர்கள் அணுகக் கூட முடியாத மேன்மையான பொருளே !
உமக்கு அடிமை பூண்ட அடியார்களாகிய நாங்கள், இந்த மண்ணுலகில் வந்து
வாழ வழிவகை செய்தவனே ! அழகு மிகுந்த திருப்பெருந்துறையுடையவனே !
வழியடியார்களாகிய எங்கள் கண்ணினுள் நின்று ஆனந்தம் தருகின்ற தேனே !
கடலிலிருந்து தோன்றிய அமுதமாகத் தோன்றுபவனே ! கரும்பே ! விரும்பித்
தொழும் அடியவர்களின் எண்ணத்தில் நிறைந்தவனே ! உலகுக்கு உயிரானவனே !
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

நண்ணுதல் - நெருங்குதல்; விழு - மேன்மை; தொழுப்பு (தொழும்பு) -
அடிமைப்பணி; வண் - அழகிய; களி - மகிழ்ச்சி.

"புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம்
      போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறு" என்று நோக்கித்
      திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்
      படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் !
      ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !

"இந்த மண்ணுலகம் சிவபெருமான் வழியாக உய்யக் கொள்கின்றது
(சிறந்த இடம்). அப்படிப்பட்ட இப்பூவுலகில் பிறவாமல் நாம் நாட்களை வீணாகக்
கழித்துக்கொண்டிருக்கிறோம்." என்று திருமால் விருப்பப்பட்டுப் பிறக்குமாறும்,
பிரமன் ஆசைப்படுமாறும், திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் பெருமானே,  
உம்முடைய மிக மலர்ந்த மெய்க் கருணையுடன் நீங்கள்,
இவ்வுலகில் வந்து எம்மை ஆட்கொள்ள வல்லவர் ! அத்தகைய விருப்பம் தரும்
அமுதமே ! பள்ளி எழுந்தருள்க !

புவனி - பூமி; மலரவன் - பிரமன்; அவனி - உலகம்.

3 comments:

Thenammai Lakshmanan said...

நல்ல முயற்சி செல்வா பாராட்டுக்கள் தொடர்ந்து தருவதற்கு

Thenammai Lakshmanan said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் செல்வா

அன்புடன் மலிக்கா said...

நல்லதொரு முயற்ச்சி வாழத்துக்கள். தொடந்து தொடருங்கள்.


http://niroodai.blogspot.com/