Saturday, March 17, 2012

செல்வா ஸ்பீக்கிங் - 01


பொரி சாப்பிட்டுக் கொண்டே இதை எழுத ஆரம்பிக்கிறேன். எத்தனையோ கொறியல்கள் இருக்க, பொறியை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்பதை பின் வரும் பாராக்கள் ஏதாவதில் சொல்கிறேன்...

முதலில் ஸ்டாட்டர்... 
சில வீடுகளில் முன்பசிக்கு இதைச் சாப்பிடுங்க.. அதுக்குள்ள விருந்து தயாராகிடும் என்று உட்கார வைப்பார்கள். அதே போல நட்சத்திர ஓட்டல்களில் மெயின் சாப்பாட்டுக்கு முன் ஸ்டாட்டர்கள் தருகிறார்கள். நான் பொதுவாக வறுத்த மஞ்சூரியன் மற்றும் வெஜ் ரோல்களை விரும்பிச் சாப்பிடுவேன். பில் கொடுப்பது நீங்கள் எனத் தெரிந்துவிட்டால், ஸ்டாட்டர்களின் பட்டியல் நீளும். ஆனால் அதற்கப்புறம் ஃபிரைடு ரைசுடன் உணவை முடித்துக் கொள்வேன், உங்க பர்ஸின் கனம் அதிகம் குறையாமல் பார்த்துக் கொள்வேன். அதனால் தயங்காமல் என்னை விருந்துக்கு அழைக்கலாம்.

பிலேட்டட் மகளிர் தின வாழ்த்துகள்!
எதற்காக இதைச் சொல்ல வந்தேன் என்பதால் கடந்த மாதம் பொன்னேரியில் ஒரு விழாவுக்குப் போயிருந்தேன். சிறப்பு விருந்தினர் என்பதால் சாப்பிட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்று, நண்பர்கள் ஒரே அடம். நித்யகல்யாணி என்றொரு ஓட்டல். கல கலவென்று கூட்டம். அங்கு உணவை விட பரிமாறுபவர்கள்தான் ஸ்பெஷல்! ஆர்டர் எடுப்பது, டேபிள் துடைப்பது, இலை எடுப்பது, பரிமாறுவது, பில் போடுபவர்கள் என அனைவருமே பெண்கள். மகளிர் தினத்தை தாண்டி வராமலிருந்திருந்தால், அவர்களின் ஃபோட்டோ போட்டு ஸ்பெஷல் கவரேஜ் செய்திருப்பேன். அவர்கள் அனைவரும் அன்னையராக இருந்தால், அன்னையர் தினம் ஸ்பெஷலில் அவர்களை குறிப்பிடுவேன் என்று இன் ரூ அவுட் எடிட்டோரியலுக்கு இப்போதே சொல்லி வைக்கிறேன். சாப்பாடு நல்லா இருந்துதா சார் என்றாள் அந்தப் பெண். நல்லா இருந்துச்சும்மா. . . ஆனா நான் கேட்டது ஃபிரைட் ரைஸ், நீ தந்தது கர்ட் ரைஸ் என்றேன். அச்சச்சோ மாத்தியிருக்கலாமே சார்! மாத்திக் கேட்டேனே . . . ஆனா நீ தந்தது மிக்ஸ்டு ரைஸ் என்றேன். மன்னிச்சிருங்க சார் என்றாள். வெள்ளந்தியாக பேசிக் கொண்டே, தலை குனிந்த அந்தப் பெண்ணின் மேல் எனக்கு கோபம் வரவில்லை. அழுத்தும் பணப் பற்றாக் குறையை சமாளிக்க, குழந்தைகளின் எதிர்காலத்துக்காக, ஓட்டலில் வந்து சிரமப்படும் நித்யகல்யாணி ஓட்டல் பெண்களுக்கு பிலேட்டட் மகளிர் தின வாழ்த்துகள்!

பிலேட்டட் என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழ் மாற்று என்ன? சரியான விடை சொல்வோருக்கு அட்வான்ஸ்டு வாழத்துகள்!

ஜிமெயிலுக்கு ஒரு விண்ணப்ப மெயில்
நேற்று இரவு, ஜிமெயிலுக்குள் நுழைந்த போது, ராஜஸ்தான் பாலைவன வெயிலில் நுழைந்தது போல ஆகிவிட்டது. உங்ககிட்ட ஒரே பிரச்சனை, கடைசி நிமிஷத்துலதான் ஆர்டிகிளை எழுதித் தருவீங்க என்று என் பத்திரிகை ஆசிரிய நண்பர்கள் கோபிப்பார்கள். தாமதத்துக்கு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம் இருக்கும். இன்றைய காரணம் ஜி-மெயில். இந்தக் கட்டுரையை ஜி-மெயில் டிராஃப்டில் டைப் அடித்துக் கொண்டே வந்தேன். நள்ளிரவு தூக்கக் கலக்கத்தில் ஏதோ ஒரு கீயை விரல்கள் அமுக்கிவிட, 3 நாட்களாக தொடர்ந்து அடித்து வைத்திருந்த கட்டுரை நொடியில் னுசயகவல் இருந்து காணாமல் போய்விட்டது. அதற்குப்பின் விடிய விடிய கூகுள் தேடல். எத்தனை தேடியும் னுசயகவல் இருந்து டெலிட் ஆகிவிட்டால் அதை அன்டெலிட் செய்ய வழியே கிடைக்கவில்லை. அப்படி ஒரு வசதியே ஜிமெயிலில் கிடையாதாம். அபத்தம். குப்பை ஸ்மாம் மெயில்களை எல்லாம், ஒரு டப்பாவுக்குள் போட்டு ஊற வைக்கிறது. ஆனால் டிராஃப்டில் இருப்பவற்றை ஒரு பட்டன் அழுத்தலில் தொலைத்துவிடுகிறது.

யுவர் ஆனர்
டிராஃப்ட்டில் உள்ள மெயில்களை டெலிட் செய்யும்போது, ஒரு முறைக்கு பல முறை உறுதி செய்த பின்தான் டெலிட் செய்ய வேண்டும் என்று ஜிமெயிலுக்கு ஆணையிடும்படி கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிட்டால் ஏதாவது ஒரு இ.பி.கோ சட்டத்தின்படி தொடர்ந்து அவர்களுக்கு ஒரு இலட்சம் ஸ்பாம்மெயில்களை ஜிமெயிலுக்கு அனுப்பி தண்டனை தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இந்த வழக்கால் இன் ரூ அவுட் சென்னை பதிப்பகத்தார், தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், என்னிடமிருந்து ஆர்டிகிள் தாமதாகவோ, லேட்டாகவோ வேறு ஏதோ ஒரு ஆகவோதான் வரும். எனவே கபர்தார்!

இந்த வரியுடன் பவர் கட்... இரண்டு மணி நேரம் கழித்துதான் தொடர்வேன். தொடரும் முன் பழைய சாதமும், மிளகாய் வத்தலும் சாப்பிட்ட பின்தான் வருவேன். கட்டுரையின் முதல் பாராவில் பொறியைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். எதற்காக என்று யோசித்துக் கொண்டு நீங்களும் இரண்டு மணி நேரம் கழித்து இக் கட்டுரையை தொடரலாம்.


டேப்ளாய்ட் நிகழ்ச்சிகள்
உடம்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் புகைபிடிக்கக் கூடாது டாஸ்மாக் போகக் கூடாது கன்னா பின்னா தீனி கூடாது என்பது அறிவுரை. நமக்கு இந்த அறிவுரை பிடிக்கும். மீறக் கூடாது என்று தோன்றும். ஆனால் அதை மீறிக் கொண்டே இருப்போம். இந்த சுய அத்து மீறலுக்கு தீனி போடுவதுதான் டேப்ளாய்ட் நிகழ்ச்சிகள். கை நிறைய பணம் புரண்டு எப்படி பொழுதைப் போக்குவது எனத் தெரியாமல் எழுபதுகளில் அமெரிக்கர்கள் திணறிக் கொண்டிருந்தபோது அவர்களை டெலிவிஷன் பெட்டிகளின் முன் கட்டிப்போட உதித்தவைதான் டேப்ளாய்ட் நிகழ்ச்சிகள்.

மனிதனுக்கு பரபரப்பு பிடிக்கும். அதுவும் பக்கத்து வீட்டின் பரபரப்பு என்றால் நமக்கு இன்னும் சுவாரசியம். பக்கத்துவீட்டுக்காரனின் தனியறை சமாச்சாரமாயிற்றே என்று ஒதுங்க மாட்டோம். ஜன்னல் வழியாகக்கசியும் அவர்கள் வீட்டு மோதலையும் காதலையும் இரகசியமாக ஒட்டுக் கேட்போம். மனசாட்சி வேண்டாம் எனச் சொன்னாலும் ஒட்டுக்கேட்கும் ஆசை பக்கத்துவீட்டு ஜன்னலை விட்டு நகராது. ஏன் இப்படி இரகசியமாக கஷ்டப்படறீங்க. எல்லாரும் எங்க ஸ்டுடியோவுக்கு வாங்க. உங்க பக்கத்து வீட்டு, எதிர் வீட்டு பிரச்சனைகளையெல்லாம் பகிரங்கமாக கைதட்டி விசில் அடித்து வேடிக்கை பாருங்கள் என்று நிகழ்ச்சி பண்ண ஆரம்பித்தார்கள். கள்ள உறவுகளும் விரிசல் உறவுகளும் மேடை ஏறினர். கணவன், மனைவி அப்பா மகன் மகள் காதலன் காதலி என சகட்டு மேனிக்கு எல்லோரையும் மேடை ஏற்றி பப்ளிக்காக சண்டை போட வைத்தார்கள். வேடிக்கை பார்த்த கூட்டம் சுற்றி அமர்ந்து விசில் அடித்து கை தட்டி ஆரவாரம் செய்தது. நிகழ்ச்சி செம ஹிட்.

ஜெர்ரி ஸ்ப்ரிங்கர் என்றொருவர் இதில் சமர்த்தர். குடும்பங்களை உறவுகளை மோதவிடுகிறார். அவர்கள் அமைதியாக இருந்தாலும் எதையாவது பேசி தூண்டி விடுகிறார். சம்பந்தப்பட்டவர்கள் கைகலப்பில் ஈடுபடும் அளவுக்கு தூண்டிவிடுகிறார். அடித்துக் கொள்ளும் இரகசியக் காதலிகள் மனைவிகள் கணவன்களை இரத்தம் வராமல் தடுத்து காப்பாற்ற பயில்வான்களுடன்தான் காமிரா முன்னால் தோன்றுகிறார். அதனால் இவருடைய நிகழச்சி பயங்கர பிரபலம்.

நம்ம ஊர் நீயா? நானா? இந்த வகைதான் ஆனால் மிக மென்மையான டேப்ளாய்ட் நிகழ்ச்சி. அவ்வப்போது அமெரிக்கத்தனம் எட்டிப்பார்த்தாலும், பொதுவாக அடக்கி வாசிக்கிற நிகழ்ச்சி! அரட்டை அரங்கங்களின் கண்ணீர் கதறல்கள் இதிலேயே இன்னொரு வகை. ஊன்றிக் கவனித்தால் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற ரியாலிட்டி ஷோக்களில் சுவாரசியம் கூட்டுவதற்காக அவ்வப்போது ஒரு குடும்பத்தை கண்ணீர் விட வைக்கும் அபத்தங்களை அத்து மீறல்களை நாம் அடையாளம் காணலாம். வடநாட்டில் ஹிந்திக்காரர்கள் கொஞ்சம் தைரியமாக பிக்-பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பாதி டேப்ளாய்ட் நிகழ்ச்சிக்காரர்களாக புரொமஷன் பெற்றுவிட்டார்கள்.

நூற்று சொச்சம் சேனல்கள் இருந்தாலும் எஃப் எம் சேனல்கள் இருந்தாலும் ஐ-பாட் முழுக்க பாடல்கள் நிரம்பி வழிந்தாலும் நமக்கு எதிலும் நாட்டம் இல்லை. ரிமோட் பட் பட்டென்று மாறிக் கொண்டே இருக்கிறது. எதிலுமே திருப்தி இல்லை. ஆனாலும் எனக்கு இது வேண்டாம் தேவை இல்லை என்று நியாயம் பேசும் மனசாட்சியை மீறுவது மட்டும் எப்போதும் திருப்தியாக இருக்கிறது. இதற்கு தீனி போடும் நிகழ்ச்சிகள் விரைவில் தமிழ் தொலைகாட்சிகளை முற்றுகையிடும். இன்னும் 50 தமிழ் சேனல்கள் வரப்போகிறதாம். ஜாக்கிரதை!

மேயர் சார் இதைக் கவனிங்க ப்ளீஸ்
இப்போது பொறி மேட்டருக்கு வருகிறேன். ஆனால் இது நான் முதல் பாராவில் குறிப்பிட்ட கடலைப் பொரி அல்ல. கடந்த வாரம் உதயம் தியேட்டர் பின்புறத்திலிருந்து இ.எஸ்.ஐ நோக்கி வெறும் 30 கி.மீ வேகத்தில் என்னுடைய ஸ்ப்ளெண்டர் சென்று கொண்டிருந்தது. இடது பக்கத்தில் எங்கிருந்தோ வந்தான் ஒரு டெம்போ டிராவலர். டங் என்று ஒரு சத்தம்! அடுத்த நிமிடம் தரையில் உருண்டேன். துணைக்கு என் எழுபது வயது சித்தப்பாவும் உருண்டார். தலைக்கவசம் இருந்ததால் தப்பித்தேன். அவருக்கு நல்ல நேரம் கவசமாக இருந்ததால் நெற்றியில் வெட்டுடன், சில எம்.எல்.கள் இரத்தம் இரத்தம் சிந்தியபின் தப்பித்தார். எனக்கு கையிலும் காலிலும் எக்கச்சக்க சிராய்ப்பு. நான் துவைக்காமலேயே ஒரு மாதமாக பயன்படுத்திய ஜீன்ஸ் அவுட். இனி அதை கட் பண்ணி அரை டிரவுசராகத்தான் பயன்படுத்த முடியும். அந்த வளைவு ஒரு மரணப் பொறி. ஓ வடிவில் வாகனங்கள் கிராஸ் பண்ணுகின்றன. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 பேர் விபத்துக்கு உள்ளாகிறார்கள் என்று தண்ணீர் தந்து ஆசுவாசப்படுத்திய அந்த ஏரியா கடைக்காரர் சொன்னார். அந்த வளைவில் சிக்னல் வைக்க வேண்டும் அல்லது ஓ வடிவில் வாகனங்களை கிராஸ் பண்ண விடாமல் சுற்றி வர வைக்க வேண்டும்.

மேயர் சார் படுகுழியாகக் கிடந்த ஆற்காட் ரோடுக்கே தார்ச்சாலை வந்தாச்சு. இந்த உதயம் தியேட்டர் மரணப்பொறிக்கும் முடிவு கட்டுனீங்கன்னா நல்லா இருக்கும்.

பசுமை விடியல்
சர்வதேச அளவில் வயது ஜாதி மத வித்தியாசம் இன்றி எல்லோரையும் பிடித்திருக்கும் வியாதிக்குப் பெயர் ஃபேஸ்புக். அடுத்த 5 வருடங்களுக்கு இந்த வியாதியில் இருந்து யாரும் தப்ப முடியாது என்றுதான் நினைக்கிறேன். இதில் என்னைப் போல முத்தக் கவிதைகள் எழுதி இம்சிப்பவர்களைத் தவிர, உருப்படியான வேலை செய்யும் நல்ல உள்ளங்களும் இருக்கிறார்கள். பசுமை விடியல் என்றொரு குழு! தமிழகம் முழுக்க படர்ந்து நீர் வளத்தை உறிஞ்சும் சீமைக்கருவேல மரங்களை ஒழிப்பதுதான் இவர்களுடைய முக்கிய பணி! தொடர்ந்து மரம் நடும் பணியிலும் ஈடுபடுகிறார்கள். இதற்கு தலைமை பொறுப்பு ஏற்று நடத்துபவர் திருமதி.கௌசல்யா ராஜ். திருநெல்வேலிக்காரர். இவருடைய ஆர்வமும் செயலும் என்னையும் பசுமை விடியலுக்குள் ஈடுபாடு கொள்ள வைத்துவிட்டது. கடந்தவாரம் போரூரை அடுத்து உள்ள கொளப்பாக்கத்தில் மரங்கள் நடும் பணியில் ஈடுபட்டோம். உங்கள் காலனியிலும் மரம் நட வேண்டுமா? பசுமை விடியலை அழையுங்கள். உடனே வருவோம்.

பொறி வைக்காத பொரி
இறுதியாக முதல் பாராவில் குறிப்பிட்ட பொறி மேட்டருக்கு வருகிறேன். உலகிலேயே பல்லிடுக்கில் சிக்கிக் கொள்ளாத சிக்கிக் கொண்டாலும் கரைந்து போகின்ற பல் இல்லாதவர்களும் சாப்பிட முடிகின்ற எவ்வளவு சாப்பிட்டாலும் வயிறு நிறையாத ஒரே உணவு பொறிதான். கிரிக்கெட் ஸ்டம்புகளைப் போல எக்கச்சக்க இடைவெளியுடன் பற்களை பராமரிக்கும் என்னைப் போன்றவர்களுக்கு பொறிதான் எக்காலத்துக்கும் உகந்த கொறியல்! நான் ஏன் பொரி சாப்பிடுகிறேன் என்பதை இதை விட சிம்பிளாக விளக்க முடியாது!

In and Out Chennai என்ற மாதமிருமுறை வெளிவரும் நாளிதழில் மார்ச் இதழில் எழுதியது.

No comments: