Showing posts with label சிந்திப்போம். Show all posts
Showing posts with label சிந்திப்போம். Show all posts

Wednesday, July 16, 2014

பணத்தை சேமிக்க 6 வழிகள் : பணக்காரர்கள் செய்வதும் - மற்றவர்கள் செய்யாததும்


பள்ளிக்கூடம் படிக்கும்போதே சேமிக்கத் துவங்கவேண்டும்.
தற்போது ஒரு சர்வதேச நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக இயங்கும் எனது நண்பன் பள்ளிப்படிப்பை முடிக்கும்போது ஒரு ப்ரீமியர் பத்மினி கார் வாங்கினான். கல்லூரி முடிக்கும்போது ஒரு வீடு வாங்கிவிட்டான். நம்பினால் நம்புங்கள்... அனைத்தும் உண்டியலில் சேர்த்த பணம் மட்டுமே.

பெரிய தொகையாக சேமிக்க வேண்டும்.
சேமிப்பில் கஞ்சத்தனம் கூடாது. இயன்றவரை பெரிய தொகையாக சேமிக்க வேண்டும்.பக்கத்துவீட்டு அங்கிள் ஒருவர் சம்பளக் கவர் வந்ததும் 50 சதவிகிதத்தை RD, FD, SB என வகை பிரித்து உடனே பாங்கில் போட்டுவிடுவார். அவரது மனைவி செலவுக்கு பணம் இல்லை என்று சண்டை பிடித்தாலும் அசரமாட்டார். சேமிப்புத் தொகையிலிருந்தே அவருடைய இரண்டு மகள்களுக்கும் நயா பைசா கூட கடன் இல்லாமல் திருமணம் செய்துவிட்டார்.

வங்கிகளின் தானியங்கி (Automatic Fund Transfer) சேவைகளை பயன்படுத்தவேண்டும்
அரசாங்கத்தில் வேலை பார்த்த என் நண்பர் ஒருவர் வங்கியிலிருந்து கிடைக்கும் வட்டியை விட்டு வைக்கவே மாட்டார். RDகணக்கிற்கு மாதத்தவணையாக கட்டிவிடுவார். RD முழுமை அடைந்ததும் அப்படியே அதை FDயா மாற்றிவிடுவார்.  இவற்றையெல்லாம் செய்வதற்கு வங்கியில் சொல்லி ஆட்டோமேட்டிக் வசதிகளை வாங்கி வைத்துக்கொண்டிருக்கிறார். எனவே மழை, சோம்பேறித்தனம், அவசர செலவு என எதற்கும் வீணாகாமல் இந்த பணப்பரிமாற்றங்கள் எல்லாம் ஆட்டோ டிரான்ஸ்பராக நடந்துவிடுகிறது.

ஓய்வு காலத்திற்கு வேண்டிய தொகையை திட்டமிட வேண்டும்
நான் உட்பட நண்பர்களில் பலர் ஐம்பது வயதாகியும் வேலை செய்துகொண்டே இருக்கிறோம். ஆனால் பழம் என்று நாங்கள் கேலி செய்த நண்பன் ஒருவன், அமைதியாக மகள், பேரன், பேத்தி மற்றும் மருமகனுடன் பொழுதைக்கழித்துக் கொண்டிருக்கிறான். பென்ஷன் போல அவனுடைய சேமிப்புத் தொகையிலிருந்தே வட்டி வருகிறது. அதனால் தன் தேவைகளுக்கு யாருடைய தயவையும் எதிர்பாராமல் தலைநிமிர்ந்து வாழ்கிறான்

கிரெடிட் கார்டு தவணைகளை குறித்த தேதிக்குள் கட்ட வேண்டும்.
எனது சகோதரன் இந்த விஷயத்தில் எக்ஸ்பர்ட். தேவை பெரிதாக இருந்தால் கிரெடிட் கார்டு வழியாகத்தான் வாங்குவான். ஆனால் குறித்த தேதிக்குள் திருப்பி செலுத்திவிடுவான். இதனால் அவனுக்கு வட்டியில்லா கடன் சாத்தியமாகிறது. அவனுடைய க்ளீன் நடவடிக்கையால் வங்கியில் அவனுக்கு நல்ல பெயர். கிரெடிட் கார்டு லிமிட் ஏறிக்கொண்டே இருக்கிறது. அவனால் எல்லா அவசரத் தேவைகளையும் சமாளிக்க முடிகிறது (குறித்த காலத்தில் திருப்பிச் செலுத்திவிடுவதால்).

ஏழையைப் போல செலவழிக்க வேண்டும்
ஆஸ்திரேலியாவில் கல்லூரிப் பேராசியரியராக கை நிறைய சம்பாதிக்கும் எனது நண்பர் ஒருவர், எளிமையாக ஒரு ஏழையைப் போலத்தான் செலவு செய்வார். மால்களை முற்றிலும் தவிர்ப்பார். குழந்தைகளுக்காக மால் தியேட்டர்களுக்கு வந்தாலும் அங்கே அனாவசியமாக உணவுகளுக்கு செலவழிப்பதை தவிர்ப்பார். கார் வைத்திருந்தாலும் குடும்பத்தோடு பல இடங்களுக்கு பஸ்ஸில் சென்று வருவார். அப்படிச் சேமிக்கிற தொகையை கல்விக்கும் மருத்துவத்திற்கும் பயன்படுத்துகிற கலையை அவருடைய குடும்பமே கற்றிருக்கிறது.

முதலீடு செய்வது (Invest) என்பது பணத்தை விரைவாகப் பெருக்க ஒரு வழி. ஆனால் இதில் ரிஸ்க் உண்டு. எந்த அபாயமும் இல்லாமல் நிதி சுதந்திரத்துடன் வாழ இந்த வழிகள் உதவும் என்பது என் அனுபவப்பாடம்.




Tuesday, August 21, 2012

மியாவ் என்றால் என்ன?


கிட்டத்தட்ட நள்ளிரவு!
சன்னமாக ஒரு ஆணின் அழுகுரல்!

சில வீடுகளின் உள்ளே எரிந்து கொண்டிருந்த விளக்குகளைத் தவிர, தெருவில் வேறெந்த வெளிச்சமும் இல்லை.

குரல் வந்த திசை மேலும் இருட்டானதாக இருந்தது. அந்த இருட்டை அடையாளம் காட்டும்விதமாக ஒரு மொபைல் ஃபோனின் ஒளி.

நிழலாக ஒரு சைக்கிளும், முகம் தெரியாத அந்த ஆளையும் அவர்களை கடப்பதற்கு சில வினாடிகளுக்கு முன்பு என்னால் பார்க்க முடிந்தது.

‘என் குழந்தையை என்கிட்ட தரப்போறியா இல்லையாடி... ‘
அவனைக் கடக்கும்போது என் காதில் விழுந்த வார்த்தைகள் இவை.

அந்த ‘டி‘ அவனுடைய மனைவியாக இருக்கக் கூடும்... அல்லது...
என்னுடைய யூகங்கள் புதுப்புது வடிவமெடுப்பதற்குள் வீடு வந்துவிட்டது.

வாசலில் ஒரு குட்டிப் பூனை. அதற்கு அம்மாவோ அப்பாவோ கிடையாது. என்னைப் பார்த்ததும் மரத்தில் தொற்றிக் கொண்டது.

அந்தப் பூனை குட்டியைப் போல எங்கோ ஒரு குழந்தை... அந்த மரத்தடி ஆணுக்கும், அவன் கெஞ்சிக் கொண்டிருந்த ‘டி‘க்கும் இடையில் சிக்கிக் கொண்டு இருக்கிறதோ...

அவர்கள் இருவரையும் விடுங்கள். அந்தக் குழந்தை தன் உணர்வுகளை யாரிடம், எப்படிச் சொல்லும்.

மியாவ் என்றது குட்டிப் பூனை, எங்கோ வெறித்தபடி!

மியாவ் என்றால் என்ன? உங்களில் யாருக்காவது அர்த்தம் தெரியுமா?

Saturday, July 14, 2012

கவுஹாத்தி சம்பவம் சென்னையிலும் நடக்கும் அபாயம் - No to 24x7 Bar


தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு,

அசாம் தலைநகர் கவுஹாத்தியில் நடந்த சம்பவத்தை தொலைகாட்சியில் பார்த்திருப்பீர்கள்.

ஒரு இளம் பெண்ணை போதையில் இருந்த 20 முரட்டு இளைஞர்கள் நடுரோட்டில் வைத்து மானபங்கம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களை  படம் பிடித்த செய்தி நிறுவன காமிராவுக்கு போஸ் கொடுத்தபடி தங்களின் கொடும் செயலை தொடர்ந்தார்கள் என்பது இன்னும் அதிர்ச்சியாக உள்ளது. இது எல்லாவற்றுக்கும் அடிப்படை, குடி போதை!

இனி 24 மணி நேரமும் மது சப்ளை செய்யலாம், பார்களை திறந்து வைக்கலாம், என்று சில ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு அனுமதி தந்திருக்கிறீர்கள். வருமானம் பெருகும், தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டினர் மது அருந்த வசதியாக இருக்கும் என்று ஒரு அற்ப காரணம் சொல்லப்பட்டிருக்கிறது.

குடித்து சீரழியும் தமிழக இளைஞர்களை விட, குடிக்க முடியாமல் அவதிப்படும் வெளிநாட்டினரின் மேல் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கரிசனம் வியப்பளிக்கிறது.

இருபத்தி நான்கு மணி நேரமும் மது கிடைக்குமானால், கவுஹாத்தி சம்பவங்கள் தமிழகத்திலும் நிழக வாய்ப்பு உள்ளது. எனவே உடனே 24 மணி நேர மது சேவையை நிறுத்த ஆணையிடுங்கள்.

டாஸ்மாக் கடைகளை மூடுங்கள். 24 மணி நேர பார்களுக்கு பூட்டு போடுங்கள்!

வெளிநாட்டினர்கள் எப்படியாவது குடித்துக் கொள்வார்கள். தமிழக இளைஞர்களை போதையிலிருந்து நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்.


Thursday, July 5, 2012

தமிழக அரசின் 24 மணி நேர குடி சர்வீஸ்!


24 மணி நேரமும் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு ஒரு நற்செய்தி. சென்னை மற்றும் திருச்சியிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இனி 24 மணி நேரமும் குடி சப்ளை செய்யலாம் என்று தமிழக அரசு ஒரு ‘செம ஹாட்டு மச்சி‘ அறிவிப்பை வெளியிட்டடிருக்கிறது. ஆனால் சைட் டிஷ் சப்ளை செய்யலாமா என்பது பற்றி அந்தக் குறிப்பில் சைடு தகவல் எதுவும் இல்லை.

சர்வதேச விமான நிலையங்கள் உள்ள நகர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு செல்லும். டாஸ்மாக்கர்கள் 24 மணி நேரமும் குடி நீர் சப்ளை இல்லை என்றால் கூட பொறுத்துக் கொள்வார்கள். கடை மூடிய பின்னும் ஷட்டர் கேப் வழியாக எப்படியாவது வாங்கி இன்னொரு கட்டிங் அடிப்பார்கள். ஆனால் தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டினருக்கு இந்த கட்டிங் திறமை இல்லாததால், அவர்கள் வசதிக்காக இந்த 24 மணி நேர குடி சர்வீஸ் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திக் குடிப்பு...ஸாரி.. செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

இந்த அறிவிப்பால் இனி 24 மணி நேரமும் பீர் கிளாஸ் நிரப்பும் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த முடியும் என்று குடிகார வட்டாரங்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளன.

Tuesday, July 3, 2012

அப்பா-அம்மா தருணங்கள்!

உன் பொண்ணு உன்னை விட அழகுடி... 
என்று மற்றவர் வியக்கும்போது 
மகளின் கூந்தலைக் கோதி அணைத்தபடி அம்மாவும்,

ஜம்முன்னு வளர்ந்துட்டான்டா . . .
என்று மற்றவர் வியக்கும்போது
பைக்கில் மகனின் பின் அமர்ந்தபடி அப்பாவும்,

தங்கள் பிள்ளைகள் பற்றி கம்பீரப் பெருமை கொள்கிறார்கள்.

காத்திருப்பின் உன்னதம் . . .


சிட்டுக் குருவி சிட்டுக் குருவி
சேதி தெரியுமா?
என்னை விட்டுப் பிரிஞ்சி போன கணவன்
வீடு திரும்பல..

நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எம்.எஸ்.ராஜேஸ்வரி, காலங்கள் விழுங்கிய தன் குரலை மீட்டெடுக்கும் முயற்சியில் பாடிக் கொண்டிருந்தார். அப்போது தோன்றிய எண்ணம் இது.

காத்திருத்தலின் சுகத்தை நாம் இழந்துவிட்டோமோ?

கணவனுக்காக மனைவியும்
காதலிக்காக காதலனும்
பள்ளிக் குழந்தைக்காக அம்மாவும்
டிபன் பாக்ஸில் பங்கு தருவதற்காக நண்பனும்
தங்கை வைக்கும் மீதிக்காக அக்காவும் . . .

காத்திருப்பதில்தான் எத்தனை வகைகள், எத்தனை பரிவுகள், எத்தனை வலிகள், எத்தனை சுகங்கள்...

காத்திருத்தல் என்பது தற்போது நெரிசல் மிகுந்த சாலைகளில் மட்டுமே நிகழ்கிறது.

எங்கள் தெரு முனையில் தினமும் மாலை 3.30 மணிக்கு ஒரு பெரியவர் நின்று கொண்டிருப்பார். அவர் நிற்காவிட்டாலும், அவருடைய பேரனைச் சுமந்து கொண்டு வரும் பஸ் அங்கே நிற்கும்.  ஆனாலும் மழையோ, வெயிலோ அங்கேயே நிற்பார். பஸ்ஸை விட்டு இறங்கியதும், அவரை ஓடி வந்து கட்டிக் கொள்ளும் அந்தச் சிறுவனின் அணைப்பும், குதூகலமும்   காத்திருப்பின் உன்னதங்களைச் சொல்லும் குறுங்கவிதை!

சியர்ஸ் மக்காஸ்! உங்களுக்காக காத்திருக்கிறேன், நிறைய புன்னகைகளை தேக்கிக் கொண்டு!

Wednesday, June 27, 2012

அண்ணா மேம்பால விபத்துக்கு காரணம் கவனக் குறைவான ஓட்டுனரா? சரியாக பராமரிக்காத நிர்வாகமா?

தடம் எண்.17M!  பாரிமுனையிலிருந்து வடபழனி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில் வழக்கம்போல மதியக் கூட்டம். படிக்கட்டில் சில பயணிகள் தொங்கிக் கொண்டிருக்க, அண்ணா மேம்பாலத்தைக் கடந்து இறங்கிக் கொண்டிருக்கும்போது, ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்துவிட்டார். 
சில வினாடிகள்தான். பக்கச் சுவரை உடைத்துக்கொண்டு பேருந்து தலை கீழாக விழுந்துவிட்டது. படுகாயம் அடைந்த 30 பயணிகள் மருத்துவமனைகளில் சிகிக்சை பெற்று வருகிறார்கள்.

இது தற்போது கிடைத்திருக்கும் முதல் தகவல். தகவல்களை விட யூகங்களும், வதந்திகளும் எக்கச்சக்கமாக உலவிக் கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று மிக முக்கியமானது. ஓட்டுனர் மொபைல் ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார் என்பதே அது. இந்த விபத்தில் இது உண்மையோ பொய்யோ, பல பேருந்து ஓட்டுனர்கள் இப்படிச் செய்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

காதில் மொபைல் ஃபோனை வைத்துக் கொண்டு மோட்டர் பைக், ஆட்டோ, கார், பஸ் ஓட்டுவது சென்னையில் சர்வசாதாரணம். தனக்கு ஒன்றும் ஆகாத வரையில், இதை ஒரு கவனக் குறைவாகவே எவரும் கருதுவது இல்லை. பெண்களே அக்கறையின்றி இப்படிச் செல்வதை நான் பலமுறை கவனித்திருக்கிறேன்.

நேற்று அமைச்சர் செல்லூர் ராஜி அவர்களின் மகன் இதே போல் ஒரு விபத்தில் இறந்துவிட்டார். வேகத் தடையில் மோதி தூக்கி எறியப்பட்டு இறந்ததாக கூறப்பட்டாலும், அவர் செல்ஃபோன் பேசிக் கொண்டே மோட்டர் பைக் ஓட்டியதாகவும் சிலர் கூறுகிறார்கள்.

இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். போக்குவரத்து துறையில் பல வருடங்களாக மெக்கானிக் பிரிவில் பணிபுரிந்து வரும் (பெயர் வெளியிட விரும்பாத) நண்பர் ஒருவர் குறிப்பிட்டதை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சம்பளம் தரமுடியாது என்ற காரணம் காட்டி  மெக்கானிக் பிரிவில் பணியிடங்களை நிரப்புவதே இல்லையாம். இதனால் மெக்கானிக்குகளுக்கு பஞ்சம். அதே போல, உதிரி பாகங்களுக்கு என்று சரியான பட்ஜெட்டையும் ஒதுக்குவது கிடையாதாம். இருப்பதை வைத்துக் கொண்டு அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளுங்கள் என்பது அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவாம். அவருடைய கூற்றுப்படி, சரியாக பராமரிக்கப்படாமல் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் பேருந்துகள் இயங்கிக் கொண்டிருப்பதாகக் கூறினார். எனவே ஓட்டுனர் எவ்வளவு கவனமாக இருந்தாலும் இது போல விபத்துகள் எந்த நேரமும் நடக்கலாம் என்ற பகீர் தகவலைக் கூறினார்.

இனியும் சென்னை போக்குவரத்து துறையும், போக்குவரத்து காவல்துறையும் தூங்கி வழியக் கூடாது. மக்களின் உயிரைப் பற்றி அலட்சியமாக இருக்கக் கூடாது. போக்குவரத்துத் துறை உடனடியாக அனைத்து பேருந்துகளின் இயங்கும் நிலையை பரிசோதிக்க வேண்டும்.

அதே போல போக்குவரத்து காவல் துறை மென்மையாக நடந்து கொள்ளக் கூடாது. ஹெல்மெட் அணியாமல் செல்வதையும், மொபைல் ஃபோன் பேசிக் கொண்டே வண்டி ஓட்டுவதையும் கடுமையாக தண்டிக்க வேண்டும். இதில் விஐபி அது இது என தயவு தாட்சண்யமே பார்க்கக் கூடாது.

Friday, April 27, 2012

சச்சின் எம்பி- இது செஞ்சுரியா? டக் அவுட்டா?

ஒரு பிராண்ட் ஐக்கானாக இருந்தாலும், தன் தோற்றம் பற்றி சச்சின் அவ்வளவாக அலட்டிக் கொண்டதில்லை. ஆனால் சமீபகாலமாக தனது ஹேர்ஸ்டைலை மாற்றியிருந்தார். அதே போல வழக்கம்போல மௌனம் காக்காமல், அவரது ஃபார்ம் தொடர்பான சர்ச்சைகளுக்கு மீடியாவில் பதிலடி தந்தார். இந்த சிறு சிறு மாற்றங்கள் யாருடைய பார்வையிலும் பெரிதாகப்படவில்லை. ஆனால் திடீரென ராஜ்யசபா எம்.பி அவதாரம் எடுத்ததும், அந்த மாற்றம் நாடு முழுவதும் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியது.

பெரும்பாலான மக்கள் நம்பவில்லை. சச்சினா? எம்பியாவா? என்றார்கள். டிவிட்டரில் எதிர்மறையான கருத்துகள் பரவத் துவங்கின. #unfollowsachin என்ற டேக் பற்றிக் கொண்டது. அரசியல் தலைவர்களும் தங்கள் கருத்துகளை உடனே சொல்லவில்லை. சுருக்கமாகச் சொன்னால் வரவேற்பை விட, எதிர்ப்புதான் அதிகம் காணப்பட்டது.

இதற்கு மிக முக்கிய காரணங்கள் இரண்டு. ஒன்று அரசியல்! நம்ப வீட்டுப் பிள்ளை என்ற பெயர் எடுத்திருக்கும் சச்சின் அரசியல் என்ற குப்பைக்குள் இறங்குவதா என்ற பொதுவான அதிர்ச்சி. இன்னொன்று அவர் தேர்ந்தெடுத்திருக்கும் கட்சி! சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் தற்போது இருக்கும் அளவிற்கு எப்போதும் ஊழல் கட்சி என்று பெயரெடுத்தது இல்லை. அந்தக் கட்சியில் போய் சேர்வதா என்ற ஆதங்கம்.

சச்சின் தனது 100வது செஞ்சுரிக்கு தடுமாறியபோது எழுந்த விமர்சனங்களை விட, காங்கிரஸ் எம்பி அவதாரம் கடும் விமர்சனங்களைக் கிளப்பும்.
பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி என்று ஒரு விளம்பரத்தில் அடிக்கடி சொல்வார். ஆனால் தனது திடீர் எம்பி அவதாரத்துக்கான சீக்ரெட் காரணத்தை அவர் வெளியில் சொல்லப்போவதே இல்லை. சொன்னாலும் எடுபடாது.

அரசியலில் சீக்ரெட் உண்டு. ஆனால் பூஸ்ட் கிடையாது. வெறும் விமர்சனங்கள் மட்டும்தான். களத்துல இறங்குங்க சச்சின். உங்களுக்காக கை தட்டின மக்கள் இனிமேல் பௌன்ஸர்களை வீசுவாங்க! அதை சமாளிச்சுட்டு மை எனர்ஜி இல்லை அவர் எனர்ஜி என்று தெம்பா பதில் சொல்லுங்க! சியர்ஸ்!

Tuesday, April 3, 2012

செல்வா ஸ்பீக்கிங் - 02


முதல் வரியை எழுதும்போது, பக்கத்தில் அமர்ந்திருக்கும் நண்பர் டர்ட்டி பிக்சர் படத்தை டிவிடியில் பார்த்துக் கொண்டிருக்கிறார். எடுத்தவுடனேயே எதுக்கு இந்த வெட்டித் தகவல் எதற்கு என்று முறைக்காதீர்கள். பின் வரும் வரிகளில் திடீரென்று இதற்கு ஒரு லிங்க் வரும்.

அடியாத்தி!
அலையாத்தி என்றால் அலை ஆத்தி. கடலில் அலைகளின் வேகம் அதிகமாகி ஊருக்குள் புகும்போது, அலைகளின் வேகத்தை ஆற்றி மட்டுப்படுத்தும் மரங்களுக்கு அலை ஆத்தி, அலையாத்தி மரங்கள் என்று பெயர். ஆங்கிலத்தில் மாங்குரோவ் மரங்கள். ஆனால் பெரும்பாலும் கடற்கரையின் ஓரத்தில் காணப்படும் சவுக்கு மரங்களையே மாங்குரோவ் மரங்கள் என்று நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த உண்மையை நான் சமீபத்தில்தான் தெரிந்து கொண்டேன். சீர்காழிக்கு அருகில் உள்ள பெரும்தோட்டம் என்ற கிராமத்தில் ஒரு இறால் பண்ணை வைத்திருக்கிறார்கள். அங்கு மண்வளமும், நீர் வளமும் கெடாமல் இருக்க மாங்குரோவ் எனப்படும் அலையாத்தி மரங்களையும் வளர்க்கிறார்கள். அவர்கள் சொல்லி, நேரில் பார்த்த பின்தான் சவுக்கு என்பது அலையாத்தி அல்ல என்று தெரிந்து கொண்டேன். அப்படியா அடியாத்தி என்று நீங்கள் வியப்பது தெரிகிறது. இப்போது உங்கள் தமிழுக்கு ஒரு சோதனை. அலையாத்தி என்றால் அலை ஆத்தி... அடியாத்தி என்றால்?

என்னுடைய ஆன்லைன் பிழை திருத்தி
கடலைப் பொறி - கடலைப் பொரி. இரண்டில் எது சரி? உங்களை எல்லாம் பொறி வைத்துதான் பிடிக்கணும். ஒழுங்கா பிழை இல்லாம எழுத மாட்டீங்களா என்று என்னை டிவிட்டரில் ஒரு பிடி பிடித்திருந்தார் @elavasam. கடலைப் பொறி தவறு, கடலைப் பொரிதான் சரி. இந்த தவறை இன் & அவுட் பிழை திருத்தர்கள் சுட்டிக் காட்டியிருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்.

பட்ஜெட்டில் கல்விக்கு அதிக நிதி
கல்விக்கு அதிக நிதி ஒதுக்கியிருக்கும் தமிழக பட்ஜெட்டுக்கு சபாஷ்
செயல் வழிக் கல்வியை (சில பல நீதிமன்ற இழுபறிகளுக்குப்பின்) தமிழக அரசு செயல்படுத்தியிருக்கிறது. அது வெற்றிகரமாக தொடர வேண்டுமானால் அரசின் கவனம் கல்வியின் மேல் முழுமையாக இருக்க வேண்டும். முதல் கட்டமாக தமிழக நிதி நிலை அறிக்கையில் 14,552 கோடி ரூபாய் கல்விக்கென்று ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் மற்ற எந்த துறைக்கும் ஒதுக்கப்பட்டதை விட இது அதிகம். இதை மனமார வரவேற்கிறேன். இலவச(விலையில்லா) செருப்பு, நோட்டுபுத்தங்கள், ஜாமெட்ரி பாக்ஸ் இவற்றிற்கு மட்டும் இந்த பட்ஜெட்டை செலவு செய்யாமல், மற்ற அம்சங்களில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.

1. டிஜிட்டல் பாடத் திட்டங்களை வடிவமைத்தல்
2. டிஜிட்டல் வகுப்பறைகளை உருவாக்குதல்
3. டிஜிட்டல் முறையில் வகுப்பெடுக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி தருதல்
4. வல்லுனர்களைக் கொண்டு (மாணவர்/ஆசிரியர் இருவருக்குமே) பேச்சுக்கலை, மனவளக் கலை பயிற்சி தருதல்
5. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளை அழகாக, தரமாக பராமரித்தல்

இவை ஐந்தையும் மிக முக்கியமாக நான் நினைக்கிறேன். மற்ற அம்சங்களைப் பற்றி அவ்வப்போது பேசுவோம்.

டிஜிட்டல் கர்ணன் - சிவாஜி தி பாஸ்
1964ல் வெளிவந்து பாக்ஸ் ஆஃபிசில் சொதப்பிய படம் கர்ணன். பழைய பிரிண்டை தூசி தட்டி எடுத்து, அதில் உள்ள கோடுகளை, வண்ணப் பிசிறுகளை நீக்கி, டிஜிட்டல் நுட்பத்தால் செதுக்கி வெளியிட்டிருக்கிறார்கள். இந்த முயற்சிக்காக சபாஷ்! 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையைத் தொட்டிருக்கும் கர்ணன், மற்ற புதுப்படங்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. செம வசூல் படம் மெகா ஹிட். நான் ஒரு செவ்வாய்கிழமை மாலையில் சாந்தியின் திரையரங்கில் படம் பார்த்தேன். உடன் படம் பார்த்தவர்கள் விவிஐபிக்கள் (பெயர் தவிர்க்கிறேன். என்ன்ன்ன்ன்ன்ன்ன்னா பில்டப்பு!). அரங்கம் நிறைந்த காட்சி. கணிசமான இளைஞர்கள் கூட்டம் ஒரு ஆச்சரியம். அதை விட ஆச்சரியம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட அனைவரும் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள். கடந்த சில வருடங்களாக, குடும்பங்கள் திரையரங்குக்கு வருவது குறைந்துவிட்டது. காரணம் டிக்கெட் விலை என்பது பொய். படங்கள் குடும்பங்களை பயமுறுத்துகின்றன. குழந்தைகளுடன் அமர்ந்து பார்க்கக்கூடியதாக இல்லை. சீட்டில் நெளிய வைக்கின்றன. எனவே குடும்பத்துடன் ஒரு நல்ல படம் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கமும், நவீன கொலவெறி சினிமாக்களின் மேல் உள்ள கோபமும் கர்ணன் படத்தால் தீர்க்கப்பட்டிருக்கிறதாக நான் நினைக்கிறேன். அதனால் மக்கள் மகிழ்ச்சியுடன் கர்ணன் பார்க்க புறப்பட்டுவந்துவிட்டார்கள்.

அந்தக் காலத்துக்கே உரிய அப்பிய மேக்கப், மிகை வசனங்கள் இருந்தாலும் கர்ணன் படம் சொல்லும் செய்தி, உள்ளத்தை உருக வைக்கிறது. மகாநதி படத்தில் ஒரு அற்புதமான வசனம். நாட்டுல நல்லவங்களுக்கு நல்லது மட்டுமே நடக்காதா? நல்லவனுக்கு கிடைக்கிற அவ்வளவு செல்வாக்கும் மரியாதையும், அவனுக்கு கிடைக்கறதை விட அதிகமாவே கெட்டவனுக்கும் கிடைக்குதே. நல்லவனுக்கு ஏன் திரும்பத் திரும்ப சோதனை? என்று கமல் கண்ணீர் மல்க ஆதங்கத்துடன் அரற்றுவார். உள்ளம் உறைய வைக்கும் காட்சி அது. அந்தக் கேள்வி ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வாழ்நாள் முழுவதும் திரும்பத் திரும்ப வரும் கேள்வி. அந்தக் கேள்விக்கு கர்ணன் படம் விடை சொல்கிறது.

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது, வல்லவன் வகுத்ததடா...

ஆத்மசுத்தியுடன் இந்தப் பாடலைக் கேளுங்கள். ஐ பெட்! உங்கள் கண்களில் ஒரே ஒரு துளி நீராவது துளிர்க்கும்...

விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கண்ணதாசன், சீர்காழி கோவிந்தராஜன், பி.ஆர் பந்தலு, தி மாஸ்! சிவாஜி தி பாஸ்!

புன்னகை மன்னன் கண்டக்டர்
இரு மாதங்களுக்கு முன்பு. மோட்டர் பைக் பங்ச்சர் (இதற்கு ஏற்ற தமிழ் வார்த்தை என்ன?) பாண்டிபஜாரில் அப்படியே பார்க் செய்துவிட்டு, ஒரு பஸ்ஸைப் பிடித்தேன். எனக்குப் பிடித்த 12B. ஏன் பிடிக்கும் என்பதைப் பற்றி ஃபிளாஷ்பேக் சொல்ல ஆரம்பித்தால், பனகல் பார்க் சாரதா வித்யாலயா பற்றி சொல்ல வேண்டியதிருக்கும் என்பதால் அடுத்த பஸ் ஸ்டாப்புக்குள் டிக்கெட் வாங்கி பயணத்தை தொடருகிறேன். கண்டக்டர் புன்னகை மன்னனாக இருந்தார். சில ஃபுட்போடர்கள் அவரை இம்சித்துக் கொண்டே இருந்தாலும் புன்னகையை ஏற்றி இறக்கினாரே தவிர, கோபப்படவில்லை.ஆழ்வார் பேட்டையில் இறங்கும்போது, உங்க புன்னகை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இதே போல எப்பவும் சிரிச்சுகிட்டே இருங்க என்று சொல்லிவிட்டு இறங்கிவிட்டேன். மனிதருக்கு சந்தோஷம் தாள முடியவில்லை. மாலையில் வேலை முடிந்து, பஞ்சர் ஒட்டி வண்டியை ஸ்டார்ட் பண்ணும்போது, சார் என்று குரல். மீண்டும் மதியம் பார்த்த 12B. அதே கண்டக்டர். சார்.. வாங்க என்று குரல். அதே புன்னகை கண்டக்டர். வண்டி இருக்கு என்றேன். எங்கே என்றார் சைகையில். வடபழனி என்றேன். அட நம்ம டெப்போ என்றார். பஸ்ஸை பின் தொடர்ந்தேன். வடபழனியில் பஸ் நின்றதும் வந்து கை கொடுத்தார். சார் ஒரே வார்த்தையில என் குணத்தையே மாத்திட்டீங்க. வெளியில நான் சிரிச்சுகிட்டே இருப்பேனே ஒழிய வீட்டுக்குப் போனா எரிஞ்சு விழுவேன் சார். இனிமே அது கூட இருக்காது, என்றார். புன்னகைத்துக் கொண்டே அவர் வாங்கித்தந்தது தான் என்னால் இன்று வரை மறக்க முடியாத சுவையான டீ. அவர் பெயரை மறந்துவிட்டேன். பெயரா முக்கியம், குணம்தானே முக்கியம். ஹல்லோ கண்டக்டர், ஒரு வேளை நீங்கள் இதை வாசித்தால் என் பதில் புன்னகையை பெற்றுக்கொள்ளுங்கள்.

தூக்கிலடப்பட்ட பன்றி
பிரெஞ்சு நாட்டில் 1386ல் ஒரு பன்றியை தூக்கிலிட்டார்களாம். ரொம்ப முக்கியம், இந்த உபயோகமற்ற தகவல் எதுக்கு என்கிறீர்களா? இது போன்ற (நமக்கு உபயோகமே இல்லாத) வெட்டி useless தகவல்களால் ஆனதுதான் நம் உலகம். பிரபு-நயன் திருமணம், ஐஸ்வர்யா குழந்தைக்கு என்ன பெயர், கோச்சடையானில் ரஜினி ஹீரோயின் யாரு? இதில் எந்த ஒரு தகவலாலும் நமக்கு துளி கூட உபயோகமே இல்லை. ஆனால் இந்தச் செய்திகளால்தான் நமது இதயங்களே துடிக்கின்றன. இதயம் என்றதும் ஞாபகம் வருகிறது. நமது இதயம் ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் முறை துடிக்கிறதாம். இன்று எனக்கு எக்ஸ்ட்ராவாக ஒரு இலட்சத்து ஒரு முறை துடித்தது. காரணம் என் பக்கத்தில் நண்பர் பார்த்துக் கொண்டிருக்கும் டர்ட்டி பிக்சர் வித்யாபாலன். சும்மா எட்டிப்பார்த்த ஒரு வினாடியில் வித்யாபாலனால் இதயம் எக்ஸ்ட்ராவாக ஒரு முறை துடித்துவிட்டது.

இதெல்லாம் ஒரு நியூஸா?  கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று நீங்கள் பற்களை நறநறப்பது தெரிகிறது. பதட்டப்படாமல் இன்னொரு யூஸ்லெஸ் தகவலாக நினைத்து மறந்துவிடுங்கள். நான் வித்யாபாலனை இரசிக்கப்போகிறேன். மகா திறமைசாலி! தேசிய விருதுக்கு தகுதியானவர்தான்! அப்பாடி சமாளிச்சுட்டேன்! ஹலோ நண்பா... ரீ வைண்ட். படத்தை முதலில் இருந்து போடு!

(In & Out Chennai பத்தரிகையில் ஏப்ரல் இதழில் நான் எழுதியது)

Wednesday, March 21, 2012

கூடங்குளத்தை போர்க்களமாக்கும் ஜெ. போலீசுக்கு ஒரு கடிதம்!

வான் படை, தரைப் படை, கடல் படை என வித விதமான படைகளுடன் கூடங்குளத்தில் போய் இறங்கி, ஒரு போருக்கு ஆயுத்தமாகியிருக்கும் தமிழக போலீசாருக்கு ஒரு தகவல்.

கூடங்குளம் என்பது அயல் நாடு அல்ல. அங்கிருப்பவர்களும் நம் மக்களே...
அவர்கள் உங்களை போருக்கு அழைக்கவில்லை!

அவர்கள் தங்கள் அச்சத்தையும், உரிமையையும் முன்னிறுத்தி அமைதியாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்!

அணு உலை எதிர்ப்பு என்பது மக்கள் உருவாக்கிய பிரச்சனை அல்ல. இன்றைய சிறிய தேவைக்காக, நாளைய சமுதாயத்தை அழிக்கின்ற அரசுகள் உருவாக்குகின்ற பிரச்சனை.

கூடங்குளத்தில் உங்கள் குடும்பத்தினர் எவராது இருந்தால், இந்தப் போராட்டம் அவர்களுக்கும் சேர்த்தே நடத்தப்படுகிறது.

எனவே அவர்களை பயமுறுத்தி, கலவரம் உண்டாக்கி உங்கள் படைபலத்தை சோதிக்காமல், அமைதிகாக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!



இந்தக் கடிதத்தை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் இடிந்த கரை மக்களுக்கு மின்சாரம், உணவு, தண்ணீர் இவை மூன்றையும் தடை செய்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். பெண்களும், குழந்தைகளும் உட்பட மக்கள் அவதிப்படுகிறார்களாம்.

அருகில் உள்ள இலங்கையில் சர்வாதிகாரி ராஜபக்ஷே இதே அடக்குமுறையைத்தான் ஈழத் தமிழர்களுக்கு எதிராக அவிழ்த்துவிட்டார். 
தமிழகத்தின் ராஜபக்ஷேவாக தன் கோரப்பற்களை காட்டிக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் உத்தரவுக்கு மண்டியிட்டு,  நீங்களும் அதை கொடுமையை உங்கள் சொந்த சகோதர சகோதரிகளுக்குச் செய்கிறீர்கள். மனம் நிறைய கோபத்துடனும், அதைவிட அன்புடனும் உங்கள் சகோதர சகோதரிகளிடமிருந்து ஒரு வேண்டுகோள்!

அதிகாரத்தின் பெயரால், துப்பாக்கி முனையில் மக்களை துன்புறுத்தும் உங்கள் ஈனச் செயலை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.

மின் சேகரிப்பு திட்டம் - தமிழகஅரசுக்கு ஒரு யோசனை

ஜெயலலிதா செய்ததிலேயே உருப்படியானது மழை நீர் சேகரிப்பு திட்டம்தான்.  இன்று வரையில் இந்த திட்டம் மக்களும், அரசும் சேர்ந்து வெற்றிகரமாக மழை நீரை சேகரிக்க, உதவுகிறது. இதே பாணியில் மின்சாரத்தையும் சேகரிக்கலாம்.

ஆறரை கோடி மக்கள் வசிக்கும் தமிழ்நாட்டில், குறைந்தபட்சம் ஒரு கோடி குண்டு பல்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக சி.எஃப்.எல் குழல் பல்புகளை பயன்படுத்தினால், உடனடியாக 500 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும்.


இதை நான் சொல்லவில்லை. பதவிக்கு வந்தவுடன், ஜெயலலிதா அரசின் சார்பில் சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட கொள்கைக்குறிப்பிலேயே இது இருக்கிறது.  இதை நிறைவேற்றினாலே, 500 மெகாவாட் மிச்சமாகிவிடும். இந்த தகவலும் அதே கொள்கைக் குறிப்பிலேயே இருக்கிறது. மிச்சப்படுத்துவதே உற்பத்திக்கு சமம், எனவே அணு உலைக்குப் பதிலாக இதை பரிசீலிக்கலாம்.


ஆனால் ஜெயலலிதாவோ போலீஸ் மிரட்டல்களை வைத்துக் கொண்டே ஆட்சியை நடத்திவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். இருக்கட்டும் அது அவர் ஸ்டைல். சங்கரன் கோவிலில் கால்கடுக்க நின்று அலுத்துவிட்டது போலிருக்கிறது. தற்போது கூடங்குளம் போராட்டக்காரர்களை மிரட்ட தமிழக போலீசார் கூலிங்கிளாஸை மாட்டிக் கொண்டு, சந்துக்கு சந்து நின்று கொண்டிருக்கிறார்கள். 


இப்படி மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பி அணு உலையை உடனே இயக்கினாலும் மின்சார உற்பத்தியாக குறைந்தபட்சம் 6 மாதங்கள் ஆகும் என்கிறார்கள். கூடங்குளத்தின் உச்சபட்ச  உற்பத்தி 1000 மெகாவாட். ஆனால் தற்போது 400 மெகாவாட்தான் உற்பத்தி செய்யுமாம். அதில் கிட்டத்தட்ட 50 மெகாவாட்டை கூடங்குளமே செலவிழித்துவிடுமாம். மீதி இருப்பது 350 மெகாவாட்தான். அதை கூடங்குளத்தில் இருந்து மாநிலத்தின் மற்றபகுதிகளுக்கு எடுத்து வரும்போது, வழியிலேயே 70 மெகாவாட் லீக் ஆகிவிடுமாம். மீதி உள்ள 280 மெகாவாட்டில் பாதியை மத்திய அரசு எடுத்துக் கொள்ளும். எனவே இத்தனை அமர்க்களத்திற்கும் பிறகு தமிழகத்துக்கு கிடைக்கப்போவது வெறும் 140 மெகாவாட்தான்.

எனவே அணு உலைக்கு பதிலாக, ரேஷன் கடைகளில் மக்களுக்கு இலவச சி.எஃப்.எல் பல்புகளை வழங்கலாம். வீட்டுக்கு வீடு குண்டு பல்புகளை தூக்கி எறிந்துவிட்டு, சி.எஃப்.எல் பல்புகளை பயன்படுத்தச் சொல்லலாம். இதனால் நமக்கு 500 மெகாவாட் மிச்சமாகிவிடும்.



இந்த தகவல்கள் அனைத்தையும் தனது ஓ பக்கங்களில் ஞாநி அழகாக எழுதியுள்ளார். ஜெயலலிதாவுக்கு அவர் எழுப்பியுள்ள கேள்விகள் அர்த்தமுள்ளவை. ஜெயலலிதா பதில் சொல்லப்போவதில்லை என்றாலும், நீங்கள் அக் கேள்விகளை தெரிந்து கொள்வதில் தவறில்லை. இங்கே சொடுக்குங்கள்!



Wednesday, March 14, 2012

காயம் நல்லது - சேரனும் தமிழ் சினிமா ஜாம்பவான்களும்!

சினிமாவையும் சினிமாவில் இருப்பவர்கள் வாழ்வையும் மக்களுக்கு அறிமுகப் படுத்துவதை விடுத்து... மக்களையும் மக்களின் வாழ்வையும் சினிமாவிற்கு அறிமுகப்படுத்துவோம்.

சங்ககிரி ராஜ்குமார் தனது வலைப்பதிவில் இப்படித்தான் அறிமுகம் தந்திருக்கிறார். யார் இந்த சங்ககிரி ராஜ்குமார்? இந்தக் கேள்வி சினிமா ஆர்வலர்கள் மத்தியில் உரக்க எழுந்திருக்கிறது. காரணம் இயக்குனர் சேரன்.

திரு.சேரன் சமீபகாலமாக பத்திரிகைகளில் அதிகம் குறிப்பிடப்படுகிறார். காரணம் அவரது சினிமாக்கள் அல்ல, அவர் நேசிக்கும் சினிமாக்கள்!

எனது நண்பர் ஷண்முகராஜ், திரு.சேரனிடம் சினிமா பயின்றவர். ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். எல்லா முதல் பட இயக்குனர்களுக்கும் உள்ள பிரச்சனை. படம் நன்றாக இருக்கிறது. ஆனால் இரசிகர்களிடம் சென்றடைவதில் சிக்கல். சேரன் தாமாகவே முன்வந்து படத்தைப் பார்த்து, பாராட்டி பத்திரிகைகளில் அது பற்றிய செய்திகள் வரவழைத்தார். விளைவு திரு.மைக்கேல் ராயப்பன் படத்தை வாங்கியிருக்கிறார். தற்போது சன்பிக்சர்ஸ் தொலைக்காட்சி உரிமையை வாங்கியிருக்கிறது. படம் நிச்சயம் திரைக்கு வரும். அதற்கு காரணம் மாணவனின் மேல் அக்கறை கொண்ட குரு சேரன்.

அதே போல நடிகர் திலகத்தின் டிஜிட்டல் கர்ணன். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பின் வெளியாகும் கர்ணன் வெளியீட்டு விழாவில் அவர் பேசிய உணர்வுபூர்வமான யுடியூபில் செம ஹிட். சிவாஜியின் மாஸ்டர் பீஸ் கர்ணன். அதனை நோக்கி, இன்றைய தலைமுறையினர் சிலபேரையாவது தனது பேச்சால் கவர்ந்து இழுத்திருக்கிறார். வரும் வாரத்தில் கர்ணன் டிஜிட்டல் திரையில் கர்ஜிக்கப்போகிறான். நிச்சயம் ஒரு ஓபனிங் இருக்கும். நான் குடும்பத்துடன் செல்லப் போகிறேன். அதற்கு முக்கியக் காரணம் சிவாஜி மட்டுமல்ல, சிவாஜி வெறி பிடித்த இரசிகன் சேரன்.

தற்போது காயம் என்ற திரைப்படத்தை தானே வெளியிடுகிறார். காயம், சென்ற வருடம் வெங்காயம் என்ற பெயரில் வெளியான படம். வழக்கமாக கொஞ்சம் சுமாராக இருந்தால் கூட குதறி எடுத்துவிடும் ஆன் லைன் விமர்சகர்கள் கூட, நன்றாக இருக்கிறது என்று பாராட்டிய படம். ஆனால் விளம்பர வெளிச்சம் இல்லாமல் வெளியானதால், படம் நன்றாக இருந்தும் இரசிகர்களைச் சென்றடையவில்லை.

தற்போது காயம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள படம்தான், வெங்காயம். அந்தப் படத்தின் இயக்குனர்தான் சங்ககிரி ராஜ்குமார். அவரை நான் கேபிள் சங்கர் எழுதிய ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் சந்தித்தேன். இயக்குனர் மீரா கதிரவனும், அவரும் சிறப்பு விருந்தினர்கள்.

‘நான் இந்தப் புத்தகத்தை இன்னும் வாசிக்கவில்லை. எனவே எனக்கு புத்தகம் பற்றிய கருத்து இல்லை. ஆனால் புத்தகம் வெற்றியடைய வாழ்த்துகள்‘ என்று சுருக்கமாகப் பேசி, ஒரு நேர்மையான மனிதனாக இன்னமும் என் மனதிற்குள்ளேயே இருக்கிறார்.

உண்மையும் நேர்மையும் எப்போதும் நிராகரிக்கப்படுவதில்லை. இனி அவ்வளவுதான் என்று சினிமா உலகம் மறந்திருந்த அவருடைய வெங்காயம், இன்று மீண்டும் தமிழ் சினிமா இரசிகர்களின் பார்வைக்கு வந்திருக்கிறது.

இன்று ஃபேஸ்புக்கில் படத்தின் புதிய டிரையலரைப் பார்த்தேன். இன்றைய தமிழ் சினிமாவின் அத்தனை முன்னணி இயக்குனர்களும், மிகப்பெரிய ஜாம்பவான்களும், சங்ககிரி ராஜ்குமார் என்ற எளிய மனிதனின் சினிமாவைப் பற்றி புகழ்ந்து பேசுவதைக் கேட்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது. காலம் மறந்து போகவிருந்த ஒரு நல்ல திரைப்படம் மீண்டும் உயிர்பெற்று, இன்று புகழ் வெளிச்சத்தில் இருக்கக் காரணம், ஒரு நல்ல மனிதன் சேரன்.

காயம் நல்லது! அது தந்த நிராகரிப்பு வலிதான் இன்று இத்தனை ஆதரவை பெற்றுத் தந்திருக்கிறது.

முதல் படம் தயாரிப்பவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் படப்பிடிப்பு சாதனங்களை வாடகைக்கு விட வேண்டும் என்று இயக்குனர் ஜனநாதன் கூறியிருந்ததாக, ஒரு பத்திரிக்கை குறிப்பை வாசித்தேன். டிஜிட்டல் யுகத்தில் சினிமா புதிய அவதாரம் எடுத்தாலும், அது சேரன், ஜனநாதன் போன்ற அக்கறை உள்ளவர்களால்தான் தாக்குப்பிடிக்கிறது.

நற் குணங்கள் உடையோர் நல்ல படைப்புகளையே தருவார்கள். அவர்களையும், அவர்களது படைப்புகளையும் ஆதரிப்போம்!


Saturday, March 10, 2012

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் - இந்தியா ஆதரிக்குமா?

ஜெயலலிதாவும் கருணாநிதியும் கண்டு கொள்ளாத எந்த அரசியல் செய்தியையும் தமிழர்களும் கண்டு கொள்வதில்லை. சமீபத்திய உதராணம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வு பற்றிய செய்தி.  இவர்கள் இருவரின் அறிக்கையைத் தொடர்ந்து இந்தச் செய்தி டீக்கடை மற்றும் சலூன்களில் விவாதிக்கப்படும் பரபரப்பான செய்தியாகியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வு என்றால் என்ன?
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை எனச் சொல்லிக் கொண்டு, இலங்கையில் மனித உரிமை மீறல் நடந்திருக்கிறது. தமிழர்களுக்கு எதிராக போர்க் குற்றங்கள் நடந்திருக்கின்றன என்பது உலகம் அறிந்த செய்தி. தற்போது இந்தச் செய்திகள் குற்றச்சாட்டுகளாக உருப்பெற்று இலங்கைக்கு எதிராக சர்வதேச அளவில் வலுப்பெற்று வருகிறது.

ஒரு நாட்டிற்கு எதிரான இது போன்ற குற்றச்சாட்டுகளை அனுமதிப்பதற்கும், விசாரிப்பதற்கும் நடைபெறும் அமர்வுதான், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வு. மொத்தம் 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. பாதிக்கு மேல், அதாவது 24 நாடுகளின் ஆதரவை பெற்றுவிட்டால், குற்றம் சுமத்தப்படும் நாட்டின் மீது, சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்படும் என்பது விதி.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா
தற்போது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஒரு தீர்மானத்தை கொண்டு வரப்போவதாக செய்திகள் கசிந்திருக்கின்றன.  அதே நேரத்தில் இலங்கை அரசு, தமக்கு எதிரான இந்த தீர்மானத்தை தோற்கடிக்க தனது ஆதரவு நாடுகளிடம் ஆதரவு திரட்டிக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மொத்தம் 22 நாடுகள் இலங்கைக்கு எதிராக திரண்டு விட்டதாகவும், இன்னும் இரண்டு நாடுகள் ஆதரவு தந்துவிட்டால் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற நடவடிக்கைகள் வலுப்பெறும் என்பதும் வதந்திகள்.

இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிப்பது சந்தேகமே!
இந்தியா இலங்கைக்கு எதிரான நிலை எடுக்குமா என்பது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமான செய்திகள் வரவில்லை. அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து தமிழக அரசியல் கட்சிகளும், இந்தியாவை இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும்படி நிர்ப்பந்தித்து வருகின்றன.

ஆனால் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது. இந்தியாவின் ஆதரவு இலங்கைக்குதான் என்று இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஒரு பத்திரிகை பேட்டியில் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவருடைய நம்பிக்கையில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. காரணம் அமெரிக்காவால் நடத்தப்படும் சர்வதேச அரசியல் பிண்ணனி.

இந்த உலகத்தின் நாட்டாமையாக தனக்குத் தானே பட்டம் கொடுத்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு மனித உரிமைகள் பற்றிப் பேச அமெரிக்காவுக்கு எந்த தார்மீக அருகதையும் இல்லை. உலகம் முழுக்க மனித உரிமைகளை மீறி வருவது அமெரிக்காதான். அமெரிக்கா ஏதாவது ஒரு நாட்டுக்கு நெருக்கடி தந்தால், அந்தப் பிராந்தியத்தில் தனது வாலை நுழைக்கிறது என்று அர்த்தம். அதே போல ஆசியாவில் பொருளாதார வல்லரசுகளாக உயர்ந்து வரும் இந்தியாவையும், சீனாவையும் அருகில் இருந்து அதட்ட அதற்கு ஒரு இடம் தேவைப்படுகிறது. தற்போது அது தேர்ந்தெடுத்திருக்கும் இடம் இலங்கை. எனவே அமெரிக்காவின் இந்த தீர்மானத்துக்கு நிச்சயம் சீனா வாக்களிக்காது. இந்தியாவும் வாக்களிக்காது. ஆனால் தமிழக அரசியல் மற்றும் இலங்கை அரசியல் நெருக்கடி காரணமாக இந்தியா நடுநிலை எடுக்கலாம்.

தான் மூக்கை நுழைக்க வசதியாக, அமெரிக்கா இதை சர்வதேச மனித உரிமைப் பிரச்சனையாக்கப் பார்க்கிறது. ஆனால் இது வெறும் உள்நாட்டுப் பிரச்சனை என்பது இலங்கை ஆதரவு நாடுகளின் கருத்து.

பாக், பங்களாதேஷ் போர்களின் போதும், காஷ்மீர் பிரச்சனைகளிலும் இந்தியாவின் மீதும் இது போன்ற குற்றச்சாட்டுகள் வந்ததுண்டு. எனவே இப்போது இலங்கைக்கு எதிராக வாக்களித்தால், எதிர்காலத்தில் இலங்கை சீனாவுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவிற்கு ஆதரவாக செயல்படாமல் போகலாம். இந்தியாவிற்கு அமெரிக்கா, சீனா இரண்டையுமே சமாளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்த தீர்மானம் இலங்கைக்கு எதிரானது அல்ல?
மிக முக்கியமாக இன்னொரு செய்தி உலவிக்கொண்டிருக்கிறது. அது என்னவென்றால், அமெரிக்க தீர்மானத்தில், இலங்கையின் மேல் பகிரங்க குற்றச்சாட்டுகள் ஏதுமில்லை. இலங்கையில் மனித உரிமைகளை நிலைநாட்டவும், சர்வதேச சட்டங்களை பின்பற்றவும் ஒரு கண்காணிப்பு குழு இலங்கை அரசால் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவுக்கு LLRC - Lessons Learnt and Reconciliation Commission என்று பெயர். உள்நாட்டுப் போரால் கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் நல்லிணக்கத்தை உருவாக்குவதே இந்தக் குழுவின் நோக்கம். அமெரிக்கத் தீர்மானத்தில் அந்தக் குழு சரியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுதான் உள்ளது.

ராஜபக்ஷேவை இந்த தீர்மானம் போர்க்குற்றவாளியாக சித்தரிக்கவில்லை. இலங்கையின் மேல் எந்தப பகிரங்க குற்றச்சாட்டும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. எனவே இந்த அமெரிக்க தீர்மானம் வெற்றி பெற்றாலும், அதனால் இலங்கைக்கு சர்வதேச அரசியல் பாதிப்பு எதுவும் பெரிதாக இருக்காது எனச் சொல்லப்படுகிறது.

ஆனால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், இலங்கையை சர்வதேச அரங்கில் குற்றவாளியாக நிறுத்த இது ஒரு நல்ல வாய்ப்பாக நினைக்கிறார்கள். நானும் அப்படியே நினைக்கிறேன்.




Friday, March 9, 2012

ஒய் திஸ் உலை வெறி - பட்டாசாய் ஒரு பாட்டு!

கூடங்குளம் போல ஒரு அணு உலையை நிறுவினால் 50 வருடங்களுக்கு மின்சாரம் தயாரிக்க முடியும். ஆனால் அதனால் ஏற்படும் கழிவுகளை 1,00,000 வருடங்களுக்கு பத்திரமாக எங்காவது பதுக்கி வைக்க வேண்டும். அதற்காக செலவு செய்து கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் மனிதனின் வாழ்வாதாரம் நிச்சயமாக பாதிக்கப்படும் என்கிறார்கள் அணுஉலைக்கு எதிராகப் போராடும் விஞ்ஞானிகள்.

உலக சமாதானத்துக்காக நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய விஞ்ஞானி (Physicist) திரு. ஹேன்ஸ் பீட்டர் தற்போது இந்தியாவில் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். அவர் சொல்வதை கவனியுங்கள். எந்த அணுஉலையும் 100 சதவிகிதம் பாதுகாப்பானது அல்ல. அதற்கு உத்தரவாதம் தரும் எந்த வாதத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார்.

அணு உலையால் ஏற்படும் ஆபத்துகளை விட, அதன் கழிவுகளால் ஏற்படும் ஆபத்து அதிகம் என்கிறார். சுற்றுப்புறச் சூழல் பாதிப்பது ஒரு புறம் இருக்கட்டும். மறுபுறம் தீவிரவாதிகள் கைகளில் சிக்கினால், அணுக் கழிவுகளைக் கொண்டு அணு குண்டு தயாரிக்கும் அபாயம் உள்ளது என்கிறார்.

அணு உலை பாதுகாப்பானது என்று வைத்துக் கொண்டாலும், இன்னும் சில 100 வருடங்களில் அது இயங்கத் தேவையான யுரேனியமும் தீர்ந்துவிடும். அப்போது இந்த அணுஉலைகள் அனைத்தும் இயங்காமல் நின்றுவிடும். அப்படி இயங்காமல் போகக்கூடிய அணுஉலைகளை மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்காமல், எப்படி இடித்துத் தள்ளுவது? அதற்கு திட்டங்கள் என்ன? அதனால் ஏற்படக் கூடிய பாதிப்பு என்ன? என்று தொடர் கேள்விகள் எழுப்புகிறார். எனவே மாஃபியா கொள்ளைக்காரர்களைப் போல பூமியிடமிருந்து இயற்கை கனிமங்களை திருடி, மக்களுக்கு தொல்லை ஏற்படுத்துவதை உடனே கைவிடுவோம். சூரியக் கதிர்களை நோக்கி நம் கவனத்தை செலுத்துவோம் என்கிறார்.

சூரியக் கதிர்களை உள்வாங்கி, சேமித்து அதனால் மின் சக்தி உட்பட வித விதமான சக்திகளை உருவாக்கக் கூடிய தொழில்நுட்பங்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. பக்கவிளைவுகள் இல்லாத இவற்றில் நம் கவனத்தை செலுத்துவோம் என்கிறார்.

கூடங்குளம் எதிர்ப்பாளர்களை தேசப்பற்று இல்லாத தீவிரவாதிகள் என்று அரசுகள் முத்திரை குத்த முயற்சித்து வருகின்றன. ஆனால் மக்களைப் பற்றிக் கவலைப்படாத அரசுகளின் இந்த சூழ்ச்சிக்கு அஞ்சாத இளைஞர்கள் சிலர் ஒரு அருமையான மியூசிக் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள்.

அணு உலைக்கு எதிரான இந்த அருமையான முயற்சியில் இறங்கியுள்ள இளைஞர்களை நான் மனமார வரவேற்கிறேன். இவர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு, கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் சிந்திக்க வைக்கக் கூடிய படைப்புகளை தர வேண்டும்.

எரிதழல் படைப்பகம் மற்றும் அதன் குழவினர் அனைவருக்கும் என் அன்பும், ஆதரவும்.

Tuesday, March 6, 2012

மக்களையே மக்களுக்கு எதிராகத் தூண்டும் ஜெ, மன்மோகன் சிங் அரசுகள்!

இந்த நூற்றாண்டின் அசுர வளர்ச்சி தகவல் தொழில் நுட்பம். அதன் பிரமாண்டமான பயன், அதன் வழியாக ஒன்றுமையாக ஒன்று கூடி அரசுகளை கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கும் மக்களின் எழுச்சி!

ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத் தளங்கள் வழியாக மக்கள் தாங்களாகவே விவாதிக்கிறார்கள். அரசை கேள்வி கேட்பது என்று முடிவெடுக்கிறார்கள். முன் எப்போதையும் விட தைரியமாக விமர்சிக்கிறார்கள். பெரும் திரளாக ஒன்று கூடி அரசுகளுக்கு கலக்கத்தை உண்டு பண்ணுகிறார்கள். அடுத்த தேர்தல் வரை ஜாலியாக காலம் தள்ளிவிடலாம் என்று மெத்தனமாக இருக்கும் ஜனநாயக அரசுகள் ஸ்தம்பித்து நிற்கின்றன. நான்தான் ராஜா என்னை என்ன செய்ய முடியும் என்று எதேச்சதிகாரத்துடன் திரிந்த மன்னர் ஆட்சிகளும் ஆட்டம் கண்டு கொண்டிருக்கின்றன.

உலகம் முழுவதும் மக்கள் தாமாகவே முன் வந்து, அலையலையாக ஒன்று கூடி, ஒரு சுனாமியைப் போல அரசுகளை தூக்கி எறியும் சக்தியுடன் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் மிரண்டு போயிருக்கும் அரசியல்வாதிகள், தற்போது அரசியல் எதிரிகளை சமாளிப்பதை விட, கேள்வி கேட்கும் மக்களை திசை திருப்புவது எப்படி? அவர்களுடைய கூர்மையை மழுங்கச் செய்வது எப்படி? அவர்களுடைய ஒற்றுமையை குலைப்பது எப்படி என்று தங்கள் கருப்பு மூளைகளை கசக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

உலக அரசியல் ஒரு புறம் இருக்கட்டும். நமது இந்திய அரசியலுக்கு வருவோம். முல்லை பெரியாறு அணைப் பிரச்சனையில் அரசியல் ரீதியாக முடிவெடுக்க திராணி இல்லாத ஜெயலலிதா அரசு, தமிழக மக்களை கேரள அரசுக்கும், கேரள மக்களுக்கும் எதிராக தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தது. தமிழகத்தில் மலையாளம் பேசும் மக்களும், அவர்களது வியாபாரத் தலங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. அதை கண்டும் காணாதது போல தமிழக அரசும், தமிழக போலீசும் இருந்துவிட்டன. இப்போது என்ன ஆயிற்று? கேரள மக்களின் மேல் தேவையற்ற திணிக்கப்பட்ட கோபத்தை வளர்த்ததோடு பிரச்சனை கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

உம்மண் சாண்டியின் தலைமையில் கேரள அரசும், இதே போல மறைமுகமாக ரௌடிகளைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தது. கேரளாவில் வசிக்கும் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். அவர்களுடைய வீடுகள் சூறையாடப்பட்டன. தமிழக போலீசைப் போலவே, கேரள போலீசும் இந்த தாக்குதல்களை கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டன.

அரசியல் ரீதியாக பிரச்சனைகளை சமாளிக்க முடியாத தமிழக-கேரள அரசுகள், தமது மக்களை அண்டை மாநில மக்களுக்கு எதிராக தூண்டி தங்களது இயலாமையை மறக்கடிக்கிறார்கள். சகோதரர்களாக வாழ்ந்து தமிழக, கேரள மக்களை எதிரிகளாக மாற்றி தங்களது அரசியல் வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்கிறார்கள்.

தற்போது இதே பிரித்தாளும் வழிமுறையை, சட்டம் ஒழுங்குப் பிரச்சனையிலும் ஜெயலலிதா அரசு கடைபிடிக்கிறது.  நான் ஆட்சிக்கு வந்ததுமே திருடர்களும், கொள்ளையர்களும் ஆந்திராவுக்கு தப்பிவிட்டார்கள் என்று கொக்கரித்தார் ஜெயலலிதா. ஆனால் தொடர்ந்து தமிழகத்தில் கொலைகள், கொள்ளைகள். தமிழக போலீசும், ஜெயலலிதாவும் மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள். ஏற்கனவே விலைவாசிப் பிரச்சனையால் கோபத்தில் இருக்கும் மக்களை சமாதானப்படுத்துவது எப்படி என்று ஜெயலலிதா அரசு தடுமாறிக் கொண்டிருந்தது.  அவர்களை கவனம் கலைக்க அரசும், போலீசும், திட்டமிட்டு, இரகசியமாக கையிலெடுத்திருக்கும் விஷயம்தான் வட இந்தியர்களின் மீது மக்களின் கோபத்தை திசை திருப்பும் செயல்.

ஆங்காங்கே அதிகமாகிக் கொண்டிருந்த செயின் திருட்டு,  வழிப்பறி, கொலைகள் உட்பட, தொடர் வங்கிக் கொள்ளைகளால் மக்கள் தமிழக அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளின் மீது நம்பிக்கை இழந்து கொண்டிருந்தார்கள். இதைச் சமாளிக்க அரசு நடத்திய ஆக்ஷன் பிளான்தான் என்கவுண்டர். என்கவுண்டரைப் பற்றி ஆயிரம் சந்தேகங்கள் உள்ளன. அது வேறு சப்ஜெக்ட். ஆனால் இதில் நிச்சயம் கவனிக்க வேண்டிய ஒரு கேவலமான அம்சம் உள்ளது. அது... தமிழகத்தில் நிகழும் அனைத்து கொலை, கொள்ளைகளுக்கும் காரணம் இங்கு பிழைப்புக்காக வந்திருக்கும் வட இந்தியர்கள்தான் என்கிற மறைமுகப் பிரச்சாரம்தான். என்கவுண்டர் நடந்த தினத்திலிருந்தே இந்தப் பிரச்சாரம் அசுர வேகத்தில் பரப்பப்படுகிறது. தமிழக போலீஸ் மீது மற்றும் அரசின் மீது இருந்த மக்களின் அதிருப்தியை வட இந்தியர்களின் மீது வேகமாகத் திணக்கும் பணியை அரசு செய்து கொண்டு வருகிறது. அது பற்றிய செய்திகளும், அவதூறுகளும் தினமும் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் வசிக்கும் வட இந்தியர்களை கணக்கெடுக்கிறார்களாம். அவர்களுடைய விரல் ரேகைகள் போலீசில் பதியப்படுகின்றன. பாதுகாப்புக்காகச் செய்வதாகச் சொன்னாலும், அது பற்றி வெளியாகும் செய்திகள் வட இந்தியர்களின் மேல் தமிழக மக்களுக்கு கோபத்தையும், சந்தேகத்தையும் உருவாக்குவதாகவே இருக்கிறது.

தங்களால் ஒழுங்காக செயல்பட முடியவில்லை என்பதை மறைக்க மக்களை மக்களோடு மோதவிடும் கொடுமையான விஷயத்தை கையில் எடுக்கிறது அரசு. ஏற்கனவே கர்நாடகாவுடன் சண்டை. புதிதாக கேரளாவுடன் மோதல். தற்போது வட இந்தியர்களை எதிரிகளாக்கும் சம்பவங்கள். இதில் பாதிக்கப்படுவது எந்த அரசியல்வாதியும் இல்லை. மிகச் சாமர்த்தியமாக மக்களை ஒருவருக்கொருவர் எதிரியாக்கி அதில் குளிர்காயும் குள்ளநரித் தனத்தை ஒவ்வொரு அரசியல்வாதியும் கையில் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதே தந்திரத்தைதான் தமிழர்களை ஒடுக்க, இலங்கையில் ராஜபக்ஷே வரை ஒவ்வொரு அரசியல் சூத்திரதாரியும் கையாண்டார்கள். சிங்களர்-தமிழர்கள் இடையில் நிரந்தரப் பகையை உருவாக்கி இன்னமும் அதை வைத்து வசதியாக அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். பல மாநிலங்களாகப் பிரிந்து கிடந்தாலும், நமது அரசியல் அமைப்பால் ஒன்றாகச் சேர்ந்து சகோதரர்களாக வாழந்து கொண்டிருக்கும் இந்திய மக்களை பிரித்தாளும் சூழ்ச்சிக்கு நமது கேடுகெட்ட அரசியல்வாதிகளும் தயாராகிவிட்டார்கள் என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதே குள்ளநரித் தந்திரத்தைதான் தற்போது மன்மோகன்சிங் அரசும் கையில் எடுத்திருக்கிறது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடும் மக்களை தீவிரவாதிகள் என்று சித்தரிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி பொறுக்காத வெளிநாடுகளின் உதவியோடு அணு உலைத்திட்டத்தை குலைப்பதாக திட்டமிட்டு செய்தி பரப்புகிறது. இந்தக் குற்றச்சாட்டை பிரதமர் தன் வாயால் சொல்வதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது. இன்னும் அந்தக் குற்றச்சாட்டை நிருபிக்க அவர் எந்த ஆவணத்தையும் காட்டவில்லை.

மின் உற்பத்தியில் இதுவரை கவனம் செலுத்தாத மத்திய, மாநில அரசுகள் தட்டுப்பாடு வந்ததும் தங்களின் இயலாமையை மறைக்க வழி தெரியாமல் விழித்தார்கள். இன்று சமாளித்துவிடுவோம், நாளை சமாளித்துவிடுவோம் என்று பொய் சொல்லி மக்களை ஏமாற்றிய தமிழக, மத்திய அரசுகள், மக்களின் வளர்ந்து வரும் கோபத்தை அடக்குவதற்கு கையாளும் தந்திரம்தான் மக்களையே மக்களுக்கு எதிராக திசை திருப்பும் கேவலமான அரசியல்.

மன்மோகன் சிங் நேரடியாக குற்றம் சுமத்துகிறார். ஜெயலலிதா இதை மறைமுகமாக அனுமதிக்கிறார். பிரச்சனை தீர வழி இல்லை என்றதும், பிரச்சனைகளை திசை திருப்புவதில் மத்திய-மாநில அரசுகள் இரகசியக் கூட்டு வைத்துக் கொண்டுவிட்டன.

அரசியல்வாதிகளே! வெளிநாட்டுச் சதி என்பது உண்மையாகவே கூட இருந்துவிட்டுப் போகட்டும். தமிழகத்தின் மின் வெட்டுப் பிரச்சனை தீர உங்களின் யோசனை என்ன? திட்டங்கள் என்ன? பிரச்சனை எப்போது தீரும்? உங்களிடம் இந்தக் கேள்விகளுக்குப் பதில் இல்லை என்பதுதான் உண்மை.

பிரச்சனைகளைத் தீர்க்க உங்களிடம் இருக்கும் ஒரே திட்டம் . . . மக்களையே மக்களுக்கு எதிராக மோத வைப்பது. இதில் உங்களுக்கு சிறு வெற்றி கிடைத்திருக்கலாம். ஆனால் . . . மக்கள் மாக்கள் அல்ல. எப்போதும் உங்கள் குள்ளநரித் திட்டங்கள் பலிக்காது! எங்களை பிரிக்க முடியாது.

நாங்கள் களைத்திருப்போம்! ஆனால் ...
எப்போதும் விழித்திருப்போம்!

Sunday, March 4, 2012

சனி கிரகத்துல நிலம் வாங்க ரெடியா?

சளி பிடிச்சாலும், சனி பிடிச்சாலும் கஷ்டம். தானாதான் விலகணும். ஆனா வரும் தலைமுறைகளுக்கு சளி பிடிக்குதோ இல்லையோ, கட்டாயம் சனி பிடிக்கும் போலருக்கு.

இனிமேல், சனியை கிரகம் அதை விட்டுத் தள்ளுன்னு விட்டுற முடியாது போலருக்கு. சனி கிரகத்தை சுத்தி 62 நிலாக்கள் உள்ளன. அதில் ஒன்றின் பெயர் டியோன் (Dione).   சனி கிரகத்தை இது 2.7 நாளில் சுற்றி வருகிறது. உறைந்த ஐஸ் கட்டி போல இருக்கும் டியோனில் ஆங்காங்கே வீரத் தழும்புகள் உள்ளன. தழும்புகளுக்கு காரணம் சனி கிரகத்தின் காந்த வளையங்களில் இருந்து வரும் தாக்குதல்கள். இந்தத் தாக்குதல்களால்ஆங்காங்கே வேதியியல் மாற்றங்கள் ஏற்பட்டு ஆக்ஸிஜன் துளிர்க்கிறது. ஆனால் இந்த ஆக்ஸிஜன்களை அங்கேயே தங்க விடாமல் சனி கிரகத்தின் காந்த வளையங்கள் ஸ்ட்ரா போட்டு உறிவது போல ஈர்த்து வைத்துக் கொள்கின்றன. இதனால் சனி கிரகத்துக்கும், டியோன் நிலவுக்கும் இடையே நிலவும் வெளி வளையங்களில் ஆக்ஸிஜன் தேங்கி வருகிறது.

பூமியைப் பொறுத்தவரை ஆக்ஸிஜன் இருந்தால் அங்கே ஓர் உயிர் இருக்கிறது என்று அர்த்தம். நமது பூமியில் இருந்து செங்குத்தான வானம் நோக்கி 300 மைல் பயணம் செய்தால் எந்த அளவுக்கு ஆக்ஸிஜனும், அதைச் சார்ந்த சூழல்களும் உள்ளனவோ அந்த அளவுக்குதான் அங்கும் இருக்கிறது. உயரம் செல்லச் செல்ல ஆக்ஸிஜன் குறைந்துவிடும் என்பது நமக்கு தெரிந்தது தானே. இந்தச் சூழலில் உயிர்கள் பிறந்து வாழ்வது கடினம். ஆனாலும் இது ஒரு உற்சாகமான செய்தி. மனிதனின் தேடல்களுக்குச் சிக்காத ஏதோ ஒரு இடத்தில் நிச்சயமாக சனி கிரகத்திலேயே உயிர்வாழத் தேவையான சூழல்கள் இருக்கக் கூடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

இந்த லாஜிக்கின் படி சனி கிரகத்திலும், அதைச் சுற்றி வரும் நிலாவிலும்(டியோன்) உயிர்கள் இருக்க வாய்ப்பு உண்டு. உடனே, அமலா பால், காத்ரினா கைஃப் போல ஸீரோ சைஸ் அழகிகளை எதிர்பார்த்துவிடாதீர்கள். கண்ணுக்குத் தெரியாத அமீபா போல, மைக்ராஸ்கோப்புக்குக் கூடச் சிக்காத நுண்ணுயிரிகள் கூட இருக்கலாம்.

நாஸா அனுப்பிய காஸினி (Cassini) என்கிற விண்கலங்களின் பவர்ஃபுல்லான மூக்குகள்தான் இந்த ஆக்ஸிஜனை மோப்பம் பிடித்திருக்கின்றன. பெயர் பொறுத்தத்தை வைத்து, உடனே காஸினி கீரைக்கார்கள் இதை வியாபாரமாக்குவாக்குவார்கள் ஜாக்கிரதை!

காஸினி கலம் அனுப்பும் டாட்டாக்களை அலசி ஆராய்ந்து ஆக்ஸிஜனை பார்த்து வியந்த விஞ்ஞானியின் பெயர் ராபர்ட் டோக்கர் (Robert Toker). அவர் சொல்கிறார், 'வரும் காலங்களில் சனியைச் சுற்றி உள்ள மற்ற நிலாக்களில் தண்ணீரை கண்டு பிடித்தால் கூட ஆச்சரியப்படுவதில்லை‘ என்று நம்பிக்கை தருகிறார்.

காலை 9 மணிக்கே வரிசையில் நின்று சனியன் பிடிச்ச டாஸ்மாக் தண்ணியில காசை விரயமாக்காமல் உண்டியில் போட்டு வைங்கப்பூ! எதிர்காலத்துல நல்ல தண்ணியோட சனி கிரகத்துலயே நிலம் வாங்கிப் போட துட்டு வேணும்ல!

Saturday, February 25, 2012

கூடங்குளம் எதிர்ப்பு - அமெரிக்க சதியா?

எந்த சலசலப்புக்குமே வாய் திறக்காத பிரதமர் மன்மோகன் சிங்  நேற்று அதிசயமாகப் பேசினார். கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அரசு சாரா அமெரிக்க சேவை நிறுவனங்கள் நிதி உதவி அளிக்கின்றன. கூடங்குளம் எதிர்ப்பு பின்னணியில் அமெரிக்க சதி இருக்கிறது என்று பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார்.

கடந்த சில மாதங்களாகவே இதே குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருக்கிறார். தற்போது இ.வி.கே.எஸ் இளங்கோவனும் இதை மேடைக்கு மேடை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

தினமலர் பத்திரிகை விடாமல் இதே கருத்தை பல மாதங்களாக எழுதிக் கொண்டே இருக்கிறது.

ஆனால் அப்போதெல்லாம் அவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ளப்படாத இந்தக் குற்றச்சாட்டு தற்போது வலுவடைந்திருக்கிறது. ஏனென்றால் மௌனகுரு என்று வர்ணிக்கப்படும் பிரமரே வாய்திறந்து இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

ரஷ்யாவின் கோபம்
பிரதமரே இப்படிச் சொன்னதும், இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் அலெக்ஸாண்டர் எம்.கடாகின் இன்று மீடியாவுக்கு வந்துவிட்டார். கொஞ்சம் கோபமாகவே தனது குற்றச்சாட்டுகளையும், சந்தேகங்களையும் பகிரங்கமாக பேட்டியில் தெரிவித்தார்.

 கூடன்குளம் அணு மின் நிலையம் உலகிலேயே100 சத வீத பாதுகாப்பானது. புகுஷிமா விபத்து நடந்தபோது போராட்டக்காரர்கள் சும்மாதான் இருந்தார்கள். ஆனால் 6 மாதத்திற்கு பின்னர் அவர்கள் கூடங்குளம் வேண்டாம் என்று பிரச்னை எழுப்புவது போராட்டக்காரர்கள் மீதான சந்தேகத்தை தெளிவாக்கியிருக்கிறது. அவர்களுடைய போராட்டத்துக்கான நிதி அமெரிக்க தொண்டு நிறுவனங்கள் மூலமாக இந்தியாவிற்கு வருகிறது. அவர்களுக்கு ரஷ்யாவின் துணையுடன் இங்கு அணு உலை அமைவதில் விருப்பமில்லை. இந்திய பிரதமரே பகிரங்கமாக குற்றம்சாட்டியபின், எங்களுடைய சந்தேகம் உண்மைதான் என்று ஊர்ஜிதமாகிறது. எனவே அணுமின் நிலையம் துவக்குவதற்கு ரஷ்யா முழு ஆதரவு அளிக்கும் என்றார்.


போராட்டக்குழு தலைவர் உதயகுமாரின் சவால் - நாங்கள் யாரிடமும் பணம் பெறவில்லை
ஆனால் போராட்டக் குழு தலைவர் உதயகுமார் அசரவில்லை. ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமருக்கு நேரடியாக சவால் விடுத்தார். போராட்டக் குழுவுக்கு அமெரிக்க நிதி கிடைப்பதாக பிரதமர் சொல்வது பொய். குற்றச்சாட்டை நிரூபித்தால் நாங்கள் போராட்டத்தை கை விடுகிறோம். நிரூபிக்க முடியாவிட்டால் பிரதமர் பதவி விலகத் தயாரா என்று பகிரங்கமாக சவால் விட்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் பிரதமர், அமைச்சர் நாராயணசாமி, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகிய மூவர் மீதும், தவறான குற்றச்சாட்டுகளை சொல்வதாக வழக்கு தொடரும் முயற்சியிலும் இறங்கிவிட்டார்.


உரிமம் ரத்து செய்யப்பட்ட அமெரிக்க NGOக்களின் பெயர் என்ன? மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்.
இந்நிலையில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து 3 அமெரிக்க தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.


பிரதமர் அலுவலகமும், போராட்டக் குழுவினரும் நேரடியாக மோதிக் கொள்ளும் இந்த சூழலில், உரிமம் ரத்து செய்யப்பட்ட 3 அமெரிக்க தொண்டு நிறுவனங்களின் பெயர்களையும் மத்திய அரசு வெளியிட வேண்டும். ஏன் உரிமம் ரத்து செய்யப்பட்டது என்ற காரணத்தையும் ஆதாரங்களுடன் வெளியிட வேண்டும். அப்போதுதான் பிரதமர் கூறியி குற்றச்சாட்டுகளுக்கு நம்பகத்தன்மை கிடைக்கும்.


ரஷ்யா கொஞ்சம் அளவுக்கு மீறி பேசுகிறதா?
வழக்கம்போல இந்த விஷயத்தில் பிரதான எதிர்கட்சிகளான திமுகவும், அதிமுகவும் வாயைத் திறக்காமல் இருக்கின்றன. அவர்களுக்கு ஓட்டு பயம். ரஷ்யா கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே இன்று பேசியதாகத் தோன்றியது. கூடங்குளம் விஷயத்தை பொறுத்தவரை அவர்கள் வியாபாரிகள்தான். அவர்களுடைய தொழில்நுட்பத்தை நமது மத்திய அரசு பணம் கொடுத்து பயன்படுத்திக் கொள்கிறது. எனவே ஒரு கன்ஸல்டன்ட் என்ற அளவுடன் ரஷ்யா தனது மூக்கை நிறுத்திக் கொள்வது நல்லது. தேவையில்லாமல் தனது அமெரிக்க வெறுப்புக்கு, இந்தியாவில் குஸ்தி மேடை அமைக்கும் தோரணையை கைவிட வேண்டும்.


கூடங்குளம் ஆதரவு/எதிர்ப்பு பின்னணியில் தலை தூக்கும் இதர பிரச்சனைகள்
அண்ணா ஹசாரேவைப் பார்த்து அவருடைய பாணியிலேயே, போராட்டக் குழுவினர் வலுவாக அணி சேர்ந்ததும் அவர்களை கலைக்க ஜெயலலிதா அரசு பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. சில நாட்களிலேயே கிறிஸ்தவர்கள் ஒன்று சேர்கிறார்கள். அவர்கள் கூடங்குளத்தை தடுக்கிறார்கள் என்று தினமலர் போன்ற பத்திரிகைகளின் ஆதரவுடன் பிரச்சாரம் செய்யப்பட்டது. இன்னமும் மெலிதாக இந்தப் பிரச்சனை இருக்கிறது.


அந்தப் பிரச்சாரம் அவ்வளவாக எடுபடவில்லை என்றதும், கிறிஸ்தவ அமைப்புகளுக்குப் பதிலாக அமெரிக்க நிதி உதவி பெறும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இந்த அணு உலைச் சண்டையில் இழுக்கப்பட்டிருக்கின்றன.


பிரதமரும் இந்த குற்றச்சாட்டில் இணைந்து கொண்டார் என்பதுதான் ஹைலைட். உபரி லைட்டாக ரஷ்யாவின் அமெரிக்க எதிர்ப்பு பிரசாரம் இந்தியாவில் தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறது. ஆனால் அமெரிக்க வெளியுறவுத் துறை எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று கூறியிருக்கிறது.


மக்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது
எது உண்மை எது பொய் என்பது காலப்போக்கில் தெரிந்துவிடும். ஆனால் சில விஷயங்களில் இந்திய மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஹிந்து, கிறித்துவன் என்ற பிரிவினை வாதங்களுக்கு பலியாகக் கூடாது. அடுத்து ரஷ்யா உட்பட எந்த நாட்டையும், நமது இந்தியாவிற்குள்ளேயே இருந்து மற்ற நாடுகளுக்கு எதிரான வெறுப்பை உமிழ இடம் தரக் கூடாது.


அணு உலை விவகாரத்தில் அமெரிக்கா, ரஷ்யா இருவருமே வியாபாரிகள். இரு வியாபாரிகளுக்கும் ஒருவரையொருவர் பிடிக்காது. ஆனால் அவர்களுடைய சண்டைக்கு இந்தியா மைதானமாகிவிடக் கூடாது.

Friday, February 24, 2012

சென்னை போலீஸ் - ஒய் திஸ் கொலவெறி!

முதல் வரியிலேயே சொல்லிவிடுகிறேன். இது சென்னை போலீசுக்கு எதிரான கட்டுரை அல்ல. கொள்ளையர்களுக்கும், குற்றவாளிகளுக்கும் ஆதரவாக கொடி பிடிக்கும் கட்டுரையும் அல்ல. ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை என்பதை அப்படியே நம்பமுடியாது. அவர்களின் அத்துமீறல்கள், ஜோடனைகள் பற்றி கேள்விகள் எழுவது இயல்பு.

பின்வருபவை, சென்னை போலீஸ் நடத்தி முடித்திருக்கும் எண்கவுன்டர் பற்றிய சில சந்தேகங்கள் (மீடியாக்கள் எழுப்பியுள்ள கேள்விகளின் தொகுப்பு)

துப்பாக்கி சத்தம் கேட்கவே இல்லை
நள்ளிரவு 1 மணிக்கு துவங்கிய துப்பாக்கி சண்டை 1.15 வரை நீடித்ததாக போலீஸ் சொல்கிறது. சுவற்றில் 10 இடங்களில் குண்டு பாய்ந்த சுவடுகள் (Ricochet) உள்ளது. உள்ளிருந்த 5 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இரண்டு போலீசார் துப்பாக்கிக் குண்டு காயம் அடைந்திருக்கிறார்கள். வீட்டுக்குள் கதவை உடைத்து போலீஸ் நுழைந்திருக்கிறது. எவ்வளவு சத்தம் கேட்டிருக்க வேண்டும்.   ஆனால் சுற்றுவட்டாரத்தில் இருந்த எவருக்கும் ஏன் துப்பாக்கிச் சத்தம் மட்டும் கேட்கவே இல்லை. வேறு சில சத்தங்கள் கேட்டது போல இருக்கிறது என்று மற்றவர்களும் சந்தேகமாக இழுக்கிறார்கள். அனைத்தும் சைலன்ஸர் பொருத்திய துப்பாக்கிகளா?

தோட்டாக்களின் தடயமே இல்லாத ஜன்னல்கள்
ஒரு ஜன்னல் க்ரில் வழியாக முதல் ரவுண்டை சுட்டதாக போலீஸ் சொல்லியிருக்கிறது. வெறும் 9 செ.மீ அகலம் மட்டுமே அந்த துளை வழியாக நிச்சயம் கையை விட முடியாது. அதுவும் துப்பாக்கி ஏந்திய கையை விட முடியாது. எனவே வெளியே இருந்துதான் சுட்டிருக்க முடியும். ஆனால்  வெளிச்சமே இல்லாத நள்ளிரவில் 9 செமீ அகலத் துளை வழியாக ஜன்னல் கம்பிகளில் கூட படாமல் சுட்டோம் என்று கூறுவதை நம்ப முடியவில்லை. துப்பாக்கி குண்டுகள் நிச்சயம் ஜன்னலில் பட்டிருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அப்படி தடயம் எதுவும் இல்லை.

சேதமே இல்லாத உடைத்ததாகச் சொல்லப்படும் கதவுகள், தாழ்பாள்கள்
ஜன்னல் வழியாக சுட்டுவிட்டு அதன் பின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று என்கவுண்டரை தொடர்ந்ததாக போலீஸ் ஜோடிக்கிறது. ஆனால் உடைக்கப்பட்டதற்கான எந்த அடையாளமும் கதவிலோ, தாழ்பாள்களிலோ இல்லை.

துப்பாக்கிகள் உண்மையா? பொம்மையா?
கொள்ளை சம்பங்கள் அனைத்திலும் கொள்ளையர்கள் பொம்மைத் துப்பாக்கியை பயன்படுத்தியாக போலீஸ் கூறியிருந்தது. ஆனால் என்கவுண்டர் நடந்த அறையில் 7 உண்மைத் துப்பாக்கிகள் கிடந்ததாக போலீஸ் அறிக்கை சொல்கிறது. உண்மைத் துப்பாக்கி வைத்திருந்தவர்கள், ஏன் பொம்மைத் துப்பாக்கியுடன் கொள்ளையில் ஈடுபட்டார்கள்.

பூட்டப்பட்ட வீட்டுக்குள்ளிருந்து போலீசை துரத்திச் சுட்டார்களாம்
போலீஸ் தரப்பில் இருவருக்கு காயம். கொள்ளையர்கள் சுட்டதால்தான் தற்காப்புக்காக நாங்கள் சுட்டோம் என்கிறது போலீஸ். ஆனால் வீடு பூட்டியிருந்தது. முதலில் ஒரு ரவுண்டு சுட்டோம். அதற்குப்பின் கேட்டை உடைத்துதான் உள்ளே சென்றோம் என்கிறது அதே போலீஸ். வெளியே எட்டிப் பாரக்கக் கூட சிரமமான ஒரு சிறிய பூட்டப்பட்ட அறைக்குள் இருந்தவர்கள் வெளியில் இருந்த போலீசை எப்படிச் சுட்டிருக்க முடியும்?

ஏன் சுற்றி வளைக்கவில்லை?
பூட்டப்பட்டிருந்த வீட்டுக்குள் இருந்த கொள்ளையர்கள்தான் முதலில் சுட்டார்கள் என்று வைத்துக் கொண்டாலும், பூட்டியிருந்த வீட்டுக்குள் பதுங்கியிருப்பவர்களை எளிதாக மடக்கியிருக்கலாமே.. வீட்டின் மொத்த பரப்பே 300 சதுர அடிதான். அதில் ஒரு சிறிய அறைக்குள்தான் கொள்ளையர்கள் இருந்திருக்கிறார்கள். கதவைத் திறந்து அவர்கள் தப்பி ஓடுவதற்கு இருந்த ஒரே வழியும், குறுகலனா சிறிய பாதைதான். போலீஸ் எளிதாக அவர்களை மடக்கியிருக்க முடியும். ஆனால் ஏன் அவர்களை உயிருடன் பிடிக்க முடிவு செய்யவில்லை.

அறைக்குள் இருந்த அனைவருமே கொள்ளையர்கள் என்பதை எப்படி கண்டுபிடித்தார்கள்?
என்கவுண்டர் நடத்துவதற்கு முன்பு, உள்ளே இருந்த அனைவருமே கொள்ளையர்கள்தான் என்பதை போலீஸ் எப்படி உறுதி செய்தது? வங்கி CCTV காமிராவில் சிக்கியவன், காமிராவில் அணிந்திருந்த அதே உடையில் இறந்து கிடந்தான். மற்றவர்கள் கொள்ளையர்கள்தான் எப்பதை போலீஸ் எப்போது உறுதி செய்தது. சுடுவதற்கு முன்பா? சுட்ட பின்பா?

என்கவுண்டரை எதிர்பார்த்து போலீஸ் தயாராகச் சென்றது எப்படி?
போலீஸ் நடவடிக்கைகளை பார்க்கும்போது, கொள்ளையர் தேடுதல் வேட்டை நிச்சயம் என்கவுண்டரில்தான் முடியும் என்று எதிர்பார்த்து செயல்பட்டது போல இருக்கிறது. சம்பவம் மதியம் வரை அவர்களிடம் பொம்மை துப்பாக்கிதான் இருந்தது என்று கூறிய போலீஸ், அவர்களிடம் உண்மைத் துப்பாக்கி இருப்பதை எப்போது அறிந்தது?


இலட்சங்களை கொள்ளையடித்தவர்கள் சில ஆயிரம் அட்வான்ஸ் பணத்தை திரும்பப் பெறவா காத்திருந்தார்கள்?

பல இலட்சங்கள் கொள்ளைக்குப் பின், போலீஸ் தேடுவதாகத் தெரிந்ததும் ஏன் வீட்டை காலி பண்ணவில்லை? வீட்டு ஓனர் தாமதமாகத் தருவதாகச் சொன்ன சிறிய அட்வான்ஸ் தொகைக்காக கொள்ளையர்கள் காலி பண்ணாமல் இருந்தார்களாம். இதுவும் போலீஸ் சொன்ன செய்திதான்.


என்கவுண்டர் நள்ளிரவில், செய்தியோ அதிகாலையில்தான்
நள்ளிரவு 1.15 மணிக்கே என்கவுண்டர் முடிந்துவிட்டதாக போலீஸ் சொல்கிறது. ஆனால் அதிகாலை 5.30 மணி வரை மீடியாக்களை சம்பவ இடத்துக்கு அனுமதிக்கவே இல்லை. எதற்காக இந்த இடைப்பட்ட 4 மணி நேரம் பயன்படுத்தப்பட்டது? ஏன் ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவிலேயே மீடியாக்கள் தடுத்து நிறுத்தப்பட்டன?

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் தண்டிப்பதே சந்தேகத்துக்கு உரிய வகையில் இருப்பதை அனுமதிக்க முடியாது. தீவிரவாதி கசாப்பையே இன்னும் கோர்ட்டில் வைத்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் 5 பேரும் குற்றவாளிகள்தானா என்று உறுதிப்படுத்தாமலே அவர்களை சுட்டுக் கொன்றுவிட்டதாகச் சொல்வது சந்தேகங்களை எழுப்புகிறது.

கடைசியாக ஒரு சந்தேகம் : 
வட மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் என்ற பதத்தை அடிக்கடி போலீஸ் பயன்படுத்துவதன் நோக்கம் என்ன?

Thursday, February 16, 2012

உதவி செய்ய நல்ல மனது மட்டும் போதாது!



சார் ஒரு உதவி!

முதன் முதலாக அந்தக் குரலை ஃபோனில் கேட்கிறேன். இணையத்தில் பல மாதப் பழக்கம் என்றாலும், அந்த போன் தான் முதல் ஃபோன் உரையாடல். தொடர்பு எல்லைக்கு அருகில் இருந்த ஃபோனின் கரகரப்பும், அவருடைய குரலில் இருந்த தயக்கமும் வார்த்தைகளை விழுங்கின. ஆனாலும் விஷயம் புரிந்துவிட்டது. நண்பருக்கு உடனடி பணத் தேவை!

அவர் கேட்ட தொகை முழுவதையும் தரக்கூடிய சூழலில் நான் இருக்கவில்லை, ஆனாலும் மற்ற நல் உள்ளங்களைக் கேட்டு அந்த தொகையை திரட்டிவிட முடியும் என்பதால், உதவி செய்வதாக சம்மதித்தேன். 
ஆனால் . . .

அதன் பிறகு வேலை அழுத்தத்தில் அவருடைய குரலையும், தேவையையும் மறந்தே போனேன். மறுநாள் மீண்டும் ஒரு வெளியூர் பயணத்தில் இருந்தபோது, நள்ளிரவில் பஸ்ஸில் இருக்கும்போது, அவருடைய ஞாபகம் வந்துவிட்டது. 

அடடா... உதவியும் செய்யாமல், மறுக்கவும் இல்லாமல் இப்படி அவரை தவிக்க வைத்துவிட்டோமே என்று கவலைப்பட ஆரம்பித்துவிட்டேன். ஆனால் நல்ல வேளையாக அதிகாலையிலேயே அவருக்கு தேவையான உதவி கிடைத்துவிட்டதாக செய்தி கிடைத்தது. அதில் ஒரு நிம்மதி என்றாலும், இப்படி சொதப்பி விட்டோமே என்ற உளைச்சலில் இருந்து தப்பிக்க முடியவில்லை.

நீதி -  உதவி செய்வதற்கான மனம் இருந்தால் மட்டும் போதாது. சரியான நேரத்தில் உதவ வேண்டும்.