Tuesday, June 17, 2014

மின்தடைக்கு எதிராக கொந்தளிப்பு! சென்னை ஸ்டைல்!

நேற்று சென்னை மாநகர் முழுவதும் திடீர் திடீர் என மின்சாரம் நிறுத்தப்பட்டது. ஃபேனோ ஏசியோ இயங்கவில்லை. இதனைத் தொடர்ந்து தூக்கமிழந்த மக்கள் தமிழக அரசையும், தமிழக மின் துறையையும் எதிர்த்து கொந்தளிப்புடன் ஃபேஸ்புக்கிற்குள் நுழைந்தார்கள்.

நுழைந்தவேகத்தில் குஷ்பு திமுகவிலிருந்து விலகியதை கிண்டலடித்து ஸ்டேட்டஸ் போட்டார்கள். மேலும் சிலர் #IsupportKushbu என்று டிவிட்டரில் குஷ்புவுக்கு ஆதரவாக ட்வீட் செய்தார்கள். ஆனாலும் கோபம் அடங்காத சிலர் மானாட மயிலாட புகழ் நமீதாவையும் கேலி செய்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்.

மக்களின் எதிர்ப்பைக் கண்டு  அதிர்ச்சியடைந்த தமிழக அரசு அவசரம் அவசரமாக இந்த மாதத்தை மேமாதம் பார்ட் -2 என அறிவித்தது. இந்த  அவசர அறிவிப்பைத் தொடர்ந்து மே மாதம் இன்னும் முடியவில்லை என்றும் அதனால் ஜீன் 1ம் தேதியும் இன்னும் வரவில்லை என்பதையும் சென்னைவாசிகள் உணர்ந்து கொண்டார்கள்.

இந்த நிலையில் மொபைலிலும் ஐ-பேடிலும் சார்ஜ் தீர்ந்தவுடன் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரிலிருந்து லாக் அவுட் செய்து மின்தடைக்கு எதிரான போராட்டம் வாபஸ் என்று அறிவித்தார்கள்.

மேலும் போராட்டக்காரர்களில் சிலர் மிகவும் திருப்தியுடன் குஷ்பு பிஜேபியில் சேர்ந்துவிட்டாராம் என்று சந்தோஷமாக வதந்திபரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் மக்கள் மீண்டும் கொந்தளிக்க வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை தகவல் கொடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து போராட்டத்தை சமாளிக்க மேமாதம் பார்ட்-3ஐ அமல்படுத்தி ஜீன்-1ம் தேதியை மேலும் தள்ளிவைக்க ஏற்பாடுகள் நடப்பதாக நம்பத்தகுந்த அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments: