Sunday, September 28, 2014

ஜெலலிதாவை ஆட்டிப் படைக்கும் மீடியாக்கள்!

உண்மையில் இன்று சிறைக்குச் சென்றிருப்பது ஜெயலலிதா அல்ல. மீடியாக்கள் உருவாக்கி வைத்திருந்த ஜெயலலிதா என்கிற பிம்பம். ”இதுதான் நான் என்று” ஜெயலலிதாவே நம்பிவிட்ட அளவுக்கு சித்தரிக்கப்பட்ட பிம்பம் அது.

ஆரம்பத்தில் ஜெயலலிதா என்ற பெண்ணுக்குள்ளும், அரசியல்வாதிக்குள்ளும் பல நியாயங்களும், நம்பிக்கைகளும் துளிர்த்திருந்தன. ஆனால் அவற்றை நசுக்கிவிட்டு பழிவாங்குதலையும், சர்வாதிகாரத்தையும் அரக்கத்தனமாக வளர்த்தது மீடியா. கருணாநிதி & கோவை முன்னிறுத்தி தன்னைத் தானே சுட்டுக்கொண்டு சுற்றியிருப்பவர்களையும் எரிக்கும் நெருப்பாக அவரை எப்போதும் தணலிலேயே வைத்திருந்தது, இன்னமும் வைத்திருக்கிறது.

ஜெயலலிதாவை கருணாநிதிக்கு எதிராக, அவரை விட வலிமையாக சித்தரித்த வரை ஓகே. ஆனால் அவர் எதைச் சொன்னாலும் நியாயம், தப்பே செய்தாலும் சரி, அவரை எவரும் தட்டிக் கேட்க முடியாது, கேட்கக்கூடாது என்கிற பிம்பத்தை வளர்க்க ஆரம்பித்தார்கள். அவர் இந்த நாட்டை விட, சட்டத்தை விட, அதன் வலிமையைவிட சர்வ வல்லமை பெற்றவர் என்று சித்தரித்து அவரையும், அவரது ஆதரவாளர்களையும் ஏன் எதிரிகளையும் நம்ப வைத்து ஏமாற்றியது மீடியா.

ஜெயலலிதா என்ற பெயரில் மீடியாக்கள் நடத்தி வரும் ரியாலிட்டி ஷோவின் சீஸன் 2 இது. சீஸன் 1 ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சி. ரியாலிட்டி ஷோக்களில் திடீரென எவருமே எதிர்பாராத சம்பவங்கள் இடம் பெறும். அதே போல சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை என்பது ஜெயா ஆதரவு மீடியாக்களே எதிர்பாராத டிவிஸ்ட்.

அதனால்தான் இந்த வழக்கு தீர்ப்புக்கு வந்ததும் அத்தனை மீடியாக்களும் மௌனம் காத்தன. இது பற்றி செய்தி வெளியிடாமல் தவிர்த்தன. அதாவது தாங்களே தோற்பதாக நினைக்க ஆரம்பித்தார்கள். தாங்கள் உருவாக்கிய பிம்பம் சரிவதில் அதிர்ச்சியடைந்தார்கள். ஆனால் . . .

வெற்றிகரமாக நடந்து வரும் ஒரு ஷோவை அவ்வளவு எளிதில் கை விட்டுவிட மாட்டார்கள். எனவே நாம் கற்பனை செய்து கூட பார்த்திராத அளவுக்கு இன்னும் பல டிராமாக்கள் நடத்தப்படும் என்று நான் திடமாக நம்புகிறேன். மீடியாக்களின் ஆட்டம் இன்னும் முடியவில்லை.

ஜெயலலிதா மீண்டு வர வேண்டும் என்றால் மீடியாக்களின் இந்த கள்ள ஆட்டத்தை புரிந்து கொள்ள வேண்டும். வெற்றி என்பது எதிரிகளை வெல்வது மட்டுமல்ல, தன்னைத் தானே வெல்வதிலும் இருக்கிறது. ஜெயலலிதா கருணாநிதியை வென்று காட்டிவிட்டார். ஆனால் தன்னைத் தானே வெல்வதில் தோற்றுக்கொண்டே இருக்கிறார். எதிர்பாராத இந்த சிறை அனுபவம் அவருக்கு அந்த பக்குவத்தை தரும். புத்தம் புதிதாக தன்னை மீட்டுக்கொண்டு மீண்டும் வருவார் என்று நம்புகிறேன்

No comments: