Sunday, October 5, 2014

பள்ளிக் குழந்தைகளின் மனதில் திணிக்கப்படும் ஊழல் அரசியல்

ஜாமீன் போராட்டத்தை முன்னிட்டு வரும் 7ம் தேதி தனியார் பள்ளிகளுக்கு விடுமுறையாம். யார்? யாரைக் கேட்டு எடுத்த முடிவு இது?
என்ன நடந்தாலும் சரி, சாராயக் கடைகளை மூடமாட்டோம். ஆனால் பள்ளிக்கூடத்தை மூடுவோம் என்கிற இந்த அத்துமீறலைச் செய்வது யார்?
ஊழலை ஆதரிப்பது, எதிர்ப்பது போன்று நடிப்பது போன்ற அபத்தங்களுக்கும், அசிங்கங்களுக்கும் நாம் அனைவரும் பழகிவிட்டோம். ஆனால் அதை அடுத்த தலைமுறை குழந்தைகளின் மனதில் திணிக்க முயற்சிக்கும் இந்த அராஜகத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
நம் வீட்டுக் குழந்தைகளின் படிப்பில் தலையிட்டு, அவர்களை தங்கள் அநாகரீக அரசியல் விளையாட்டுக்கு உட்படுத்தும் இந்தச் செயல் சர்வாதிகாரமானது. இந்த அசிங்கத்தை எந்தக் கூச்சமும் இல்லாமல் செய்வது யார்? யாரோவா? அதிமுக என்ற கட்சியா? தமிழக அரசா?
ஜெயலலிதாவுடைய கைதும், அதைத் தொடர்ந்து நடக்கின்ற கலவரங்களும், ஊழல்களை நியாயப்படுத்திப் பேசுகிற ஒரு பரவலான மனநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவே அசிங்கம். இப்போது இது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கள்ளம் கபடமில்லாத பள்ளிக் குழந்தைகளின் படிப்பையும், மனதையும் கெடுக்கிற அபாயத்தை நோக்கி ஏவப்பட்டிருக்கிறது. இதனை அனுமதிக்கவே கூடாது.
பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகளை மீண்டும் கொண்டுவர வேண்டிய கட்டாயத்திற்கு வந்துவிட்டோம்.
ஜெயலலிதாவுக்கு தெரியாமல்தான் இந்த அத்துமீறல் நடைபெறுகிறது என்று நம்புகிறேன். அவருக்குத் தெரிந்தால் நிச்சயம் இதனை அனுமதிக்க மாட்டார் என்பது என் திடமான நம்பிக்கை. நிச்சயம் அவர் இந்த அளவுக்கு மோசமான முடிவுகளை ஆதரிக்கிற பெண் அல்ல.
ஒருவேளை இது ஜெயலலிதாவுக்குத் தெரிந்துதான் நடக்கிறது என்றால், இது கடுமையான குற்றம். அதுவும் சாதாரணக் குற்றமல்ல. அவர் மேல் சுமத்தப்பட்டிருக்கும் குற்றங்களை விட மாபெரும் குற்றம். சொத்துக்குவிப்பை விட இந்த அராஜக அதிகாரக் குவிப்பு மிக மிக தவறானது, உடனே தண்டிக்கபடக் கூடியது.
நாம் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் பள்ளிகளை மூடச் சொல்லும் இந்த அராஜக முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
நம் குழந்தைகளை அசிங்கம் பிடித்த அரசியல்வாதிகளின் பிடியில் இருந்து பாதுகாக்க நாம் உடனே ஒன்றுபட வேண்டும். வரும் 7ம் தேதி எந்த அச்சுறுத்தலுக்கும் பணியாமல் பள்ளிகள் இயங்க வேண்டும்.
பள்ளிகளில் அரசியல் பாடமாக இருக்கலாம். ஆனால் அரசியல் மேடைகளில் பள்ளிகளை நடத்த அனுமதிக்கவே கூடாது.
டியர் மிஸ்டர் பன்னீர்செல்வம்! குனிந்தது போதும். கொஞ்சம் நிமிருங்கள். நீங்கள் இந்த மாநிலத்தின் முதல்வர் என்பதை உணர்ந்து இந்த அநியாயத்தை தடுத்து நிறுத்துங்கள்.
உங்களுக்கு உங்கள் தலைவியின் விடுதலை எந்த அளவுக்கு முக்கியமோ, அதை விட எங்களுக்கு எங்கள் குழந்தைகளின் கல்வி முக்கியம்.

No comments: