Thursday, September 3, 2015

எப்போதிருந்து நீ நான் ஆனாய்..


உன்னை பார்ப்பதற்கு முன்பே
உன்னை எனக்குத் தெரியும் 
என்றுதான் நினைக்கிறேன்.

உன்னை நான் சந்திப்பதற்கு முன்
அதிகாலையில் நான் ஜன்னலைத் திறந்ததும்
என்னுள் நுழைகிற காற்றாக நீ இருந்திருக்கிறாய்.

நான் தினசரி நீரூற்றும் செடியாக இருந்திருக்கிறாய்.
பூக்களை பறித்துக் கொண்டு புன்னகைக்கும்
பக்கத்து வீட்டுச் சிறுமியாக இருந்திருக்கிறாய்!

எங்கிருந்தோ ஒலித்து என்னை  முணுமுணுக்க வைக்கும் 
பாடலாக இருந்திருக்கிறாய!
ஒரே ஒரு துளியாக என் மேல் விழுந்துவிட்டு
வராத மழையாக இருந்திருக்கிறாய்.

நள்ளிரவிலும் என்னை அடையாளம் கண்டு 
வாலாட்டும் ஜீவனாக இருந்திருக்கிறாய்!
நான் புரிந்து கொள்ள ஆசைப்படும்
கவிதையாக இருந்திருக்கிறாய்!

ஒரு நாள் நீ நீயாகவே வந்தாய்
ஆனால் 
எனக்கே தெரியாமல் ஏதோ ஒரு தருணத்தில்
நீ நானாகவும் ஆகிவிட்டாய்!


No comments: