Wednesday, December 16, 2009

திருவெம்பாவை - திருப்பள்ளி எழுச்சி - 2

தமிழ் தெரியாத சாயாஜி ஷிண்டே பாரதியாரா நடிச்சார். அதே மாதிரி தமிழ் சரியா எழுதத் தெரியாத ஒரு டாக்டர் எனக்கு திருவெம்பாவையை நெட்டில தேடித் தந்தார். டாக்டர்கள் ஏன் எப்பவுமே நமக்குப் புரியாத மாதிரியே எழுதறாங்க அப்படின்ற சந்தேகம் அரை டிரவுசர் காலத்துல இருந்து, பெர்முடாஸ் (இதுவும் அதேதான்) காலம் வரை இருக்கு. ஒரு வேளை அவங்களுக்கு ஸ்பெல்லிங் தெரியாதோ?

சரி மருத்துவரை விட்டுட்டு திருவெம்பாவைக்கு வருவோம்.
வரிகளை அர்த்தங்களுடன் இங்கு தந்திருக்கிறேன்.
நன்றி டாக்டர்! (டாக்டரை வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் டைட்டில் ஸ்டைலில் அலறியபடி வாசிக்கவும்)

எனது நண்பர் விவேக் நாராயண் அபார திறமைசாலி. இதுபோல கிளாசிகல் டச்சுடன் இசையமைக்கச் சொன்னால் நொடியில் செய்துவிடுவார். இந்தப் பாடலும் அப்படி துரிதமாக உருவானதுதான். பிழைகள் இருக்கலாம். இருந்தால் சுட்டிக்காட்டலாம்!

இனி திருவெம்பாவை.


டவுன்லோடு செய்ய இங்கே சொடுக்குங்கள்!

கூவின பூங்குயில்; கூவின கோழி;
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம் ;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து
ஓருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய் !
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
யாவரும் அறிவரியாய் ! எமக்கெளியாய் !
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !

குயில்கள் பாடின. கோழிகள் கூவின. பறவைகள் சலசலத்தன;
சங்கு ஒலித்தது. விண்மீன்களின் ஒளி மறைந்தது. காலையின் ஒளி
மேலோங்குகிறது. தேவனே, விரும்பி எங்களுக்கு உம்முடைய நல்ல
செறிந்த கழலணிந்த இரு திருவடிகளையும் காட்டுங்கள் ! திருப்பெருந்துறை
வீற்றிருக்கும் சிவபெருமானே ! யாராலும் அறிவதற்கு அரியவனே !
(அடியவராகிய) எங்களுக்கு எளியவனே ! எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

குருகு - பறவை; ஓவுதல் - மறைதல்; தாரகை - நட்சத்திரம்;
ஒருப்படுதல் - முன்னேறுதல்/மேலோங்குதல்.

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ;
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் ;
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ;
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ;
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !

ஒரு பக்கம், வீணை மற்றும் யாழ் கொண்டு இனிய இசை செய்பவர்கள்;
ஒரு பக்கம், இருக்கு வேதமும் மற்றும் பல தோத்திரங்களும் சொல்பவர்கள்;
ஒரு பக்கம், நிறைய மலர்களைக் கையில் பிடித்தவர்கள்;
ஒரு பக்கம், தொழுவார்களும், (அன்பின் மிகுதியால்) அழுவார்களும்,
(விடாது அழுது) துவண்ட கைகளை உடையவர்களும் ;
ஒரு பக்கம், சிரத்தின் மேல் கை கூப்பி வணக்கம் செய்பவர்கள்;
திருப்பெருந்துறையில் உள்ள சிவபெருமானே !
(இவர்களோடு) என்னையும் ஆண்டுகொண்டு இனிய அருள் செய்கின்ற
எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

துன்னிய - செறிந்த; சென்னி - தலை; அஞ்சலி - வணக்கம்.

2 comments:

sdc said...

நன்று . எனக்கு தமிழ் விளக்கத்துடன் கூடிய தொல்காப்பியம் லிங்க் தர முடிமா?

Thenammai Lakshmanan said...

நல்லா இருக்கு செல்வா அருமை