Tuesday, August 21, 2012

மியாவ் என்றால் என்ன?


கிட்டத்தட்ட நள்ளிரவு!
சன்னமாக ஒரு ஆணின் அழுகுரல்!

சில வீடுகளின் உள்ளே எரிந்து கொண்டிருந்த விளக்குகளைத் தவிர, தெருவில் வேறெந்த வெளிச்சமும் இல்லை.

குரல் வந்த திசை மேலும் இருட்டானதாக இருந்தது. அந்த இருட்டை அடையாளம் காட்டும்விதமாக ஒரு மொபைல் ஃபோனின் ஒளி.

நிழலாக ஒரு சைக்கிளும், முகம் தெரியாத அந்த ஆளையும் அவர்களை கடப்பதற்கு சில வினாடிகளுக்கு முன்பு என்னால் பார்க்க முடிந்தது.

‘என் குழந்தையை என்கிட்ட தரப்போறியா இல்லையாடி... ‘
அவனைக் கடக்கும்போது என் காதில் விழுந்த வார்த்தைகள் இவை.

அந்த ‘டி‘ அவனுடைய மனைவியாக இருக்கக் கூடும்... அல்லது...
என்னுடைய யூகங்கள் புதுப்புது வடிவமெடுப்பதற்குள் வீடு வந்துவிட்டது.

வாசலில் ஒரு குட்டிப் பூனை. அதற்கு அம்மாவோ அப்பாவோ கிடையாது. என்னைப் பார்த்ததும் மரத்தில் தொற்றிக் கொண்டது.

அந்தப் பூனை குட்டியைப் போல எங்கோ ஒரு குழந்தை... அந்த மரத்தடி ஆணுக்கும், அவன் கெஞ்சிக் கொண்டிருந்த ‘டி‘க்கும் இடையில் சிக்கிக் கொண்டு இருக்கிறதோ...

அவர்கள் இருவரையும் விடுங்கள். அந்தக் குழந்தை தன் உணர்வுகளை யாரிடம், எப்படிச் சொல்லும்.

மியாவ் என்றது குட்டிப் பூனை, எங்கோ வெறித்தபடி!

மியாவ் என்றால் என்ன? உங்களில் யாருக்காவது அர்த்தம் தெரியுமா?

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

மனிதர்கள் கற்றுக் கொள்ள வேண்டியதை சூசுகமாக சொல்லி விட்டீர்கள் சார்...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...