Tuesday, August 16, 2011

அன்னா ஹசாரே - செய்திச் சேனல்களின் TRP பூஸ்டர்


அன்னா ஹசாரே கைது! என்று அதிகாலையிலேயே செய்திச் சானல்காரர்கள் அலற ஆரம்பித்துவிட்டார்கள்

இதென்ன எமர்ஜென்சியா? என்னை கைது செய்து ஒரு பஸ்ஸில் அழைத்துச் செல்கிறார்கள். எங்கே என்று தெரியவில்லை - இது கிரண்பேடியின் ட்வீட்

செய்திச் சேனல்களின் பாட்ஷா அன்னா ஹசாரேவுக்கு, ஆகஸ்டு 15 அன்றே டிரையலர்கள் துவங்கிவிட்டன. உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக ஊழலுக்கு எதிரான ஒரு போராட்டம் என்று கூவாத குறையாக மீடியாக்கள் பில்ட் அப் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

இன்று காலை 8 மணியிலிருந்து ஆங்கில செய்திச் சானல்களை பார்த்தால் நாடெங்கும் ஒரே கலவரம். மக்கள் ஊழலுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து கொண்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக தெருவெங்கும் கூடிக் கொண்டிருக்கிறார்கள். அரசு மக்களையும் கைது செய்து கொண்டிருக்கிறது. எமர்ஜென்சியை விட படு மோசமான அடக்கு முறை என்று ஸ்க்ரோலிங்கும், வாய்ஸ் பைட்டுகளும் பயமுறுத்தின.

இது போதாது என்று அதிரடி டிவிட்டுகளும், ஃபார்வர்டு செய்யப்பட்ட SMSகளும், அங்கே வாருங்கள், இங்கே வாருங்கள், ஊழலுக்கு எதிராக கூடுவோம் போராடுவோம் என்று படு ஆக்ரோஷமாக ஆட்களை திரட்டிக் கொண்டிருந்தன.

ஆனால் வீட்டை விட்டு வெளியே வந்தால், மீடியாக்களின் எந்த பரபரப்பும் இன்றி களைத்துப் போய் நண்பர் நின்று கொண்டிருந்தார். ஸாரிடா நீ சைடுல பணம் வெட்டாமல் உங்க வீட்டுக்கு த்ரீ ஃபேஸ் கனெக்ஷன் கிடைக்காதாம் என்றார்.

டிவிக்களில் சொல்லிக் கொண்டிருப்பது போல எந்த எமர்ஜென்சி அடக்கு முறையும் இல்லை. பஜ்ஜியில் எண்ணை அதிகமாக இருக்கிறது என்ற சில்லறை முறைப்புகளும், யோவ் உள்ள போய்யா என்ற ஃபுட்போர்டு பஸ் போராட்டங்களும்தான் இருந்தன.

மீடியாக்கள் இத்தனை உசுப்பியும், ஏன் அன்னா ஹசாரேவின் லோக்பல் மக்களை பரவலாகச் சென்றடையவில்லை. டிவிட்டர், ஃபேஸ்புக் மற்றும் பிளாகுகளில் பரபரவென எவ்வளவோ எழுதியும் ஏன் ஊழலுக்கு எதிராக மக்கள் ஒன்று சேர மாட்டேன்கிறார்கள்.

மிக முக்கியமான காரணம், இதை எழுதியிருக்கும் நான் உட்பட, இதை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்கள் உட்பட, எல்லோருமே அடிப்படையில் லஞ்சத்துக்கு பழகியவர்கள். நான் செய்தால் தப்பு இல்லை, தப்பு செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்று சமாதானமடைந்தவர்கள். ஆனாலும் மனசாட்சி உறுத்துவதால் அவ்வப்போது சாமிக்கு தேங்காய் உடைப்பதைப் போல, அன்னா ஹசாரேக்களுக்கு வாழ்க கோஷம் போட்டுவிட்டு மறந்துவிடுகிறோம். ஸ்கூல் ஃபீஸ், மின்சாரக் கட்டணம், மளிகை பாக்கி, மகளின் திருமணம் என்ற தினசரி தனிமனித நெருக்கல்களின் காரணமாக, சமூகப் போராட்டங்களுக்கு உடலும், உள்ளமும் ஒத்துழைப்பதில்லை. எனவே தான் ஊழலையும், ஊழலுக்கு எதிரான போராட்டங்களையும் சினிமா பார்ப்பது போல, வேடிக்கை பார்ப்பதுடன் நிறுத்திக் கொள்கிறோம்.

அடுத்த காரணம், சுனாமி பரிதாபங்கள், அன்னா ஹசாரே கோபங்கள் என எல்லாவற்றையும் ஊதிப் பெரிதாக்கி, இடை இடையே ஷாம்பூ விளம்பரங்கள் மற்றும் டெலிஷாப்பிங் அபத்தங்களை ஒளிபரப்பி எதையும் பூதாகரமாக்கி பணம் சம்பாதிக்கும், TRP டிவி உத்திகள். எனவே அடடா இவ்வளவு பெரிய போராட்டமா? நமக்கு இடம் கிடைக்காது என்று ஒதுங்குதல் அல்லது இவங்க சொன்ன மாதிரி பெரிசா ஒண்ணும் இல்லையே என்று நிராகரித்தல் ஆகிய இரு மனநிலைக்குத் தள்ளப்பட்டு ஒதுங்கிவிடுகிறோம்.

மூன்றவாது மிக முக்கிய காரணம். அன்னா ஹசாரே லோக்பல் மசாதாவை இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று வர்ணிக்கிறார். ஆனால் மகாத்மா காந்திக்கும், அன்னா ஹசாரேவுக்கும் மிகப்பெரிய வேற்றுமைகள் உள்ளன. காந்தி காங்கிரஸ் என்ற பேரியக்கத்தை முன்னிறுத்தி அதன் போராட்டத் தலைவராக தன்னை நியமித்துக் கொண்டு இயங்கினார். ஆனால் ஹசாரே அப்படி எந்த ஒரு இயக்கத்தையும் சார்ந்தவர் இல்லை. ஆனால் தலைவராக தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார். அன்னா ஹசாரே சொல்வது எவ்வளவுதான் நல்ல விஷயமாக இருந்தாலும், எத்தனைதான் மீடியா ஆதரவு இருந்தாலும், ஈர்க்கப்பட்டு திரளும் மக்கள் கூட்டத்தை ஒருங்கிணைக்க ஒரு அமைப்பு தேவை. அது நாடு முழுவதும் கிராமம் கிராமமாக இயங்க வேண்டும். மத்திய தலைமையாக அன்னா ஹசாரே இருக்கும்போது, அவர் பேச்சுக் கேட்டு நடக்கும் கிளைத் தலைவர்கள் இருக்க வேண்டும். ஆனால் அன்னா ஹசாரே விஷயத்தில் அப்படி எதுவும் இல்லை.

இதை பிஜேபி தனக்கு சாதகமாக்கப் பார்க்கிறது. எங்களை அழைத்தால் நாடு முழுவதும் ஆதரவு தருகிறோம் என்கிறது. சுப்பிரமணியன் சுவாமி, நான் வரவா என்கிறார். பாபா ராம்தேவ் ஏற்கனவே குட்டையைக் குழப்பியது ஞாபகமிருக்கலாம்.

எனவே என்னதான் நியாயமான காரணங்களுக்காக அன்னா ஹசாரே போராடினாலும், அது நாடு தழுவிய இயக்கமாக இயங்க வேண்டும் என்றால், நாடு தழுவிய அமைப்பு அவருக்கு வேண்டும். அது தற்சமயம் இல்லாததால், ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற இந்தப் போராட்டம், காங்கிரஸை தேர்தலில் தோற்கடிக்கும் போராட்டமாக மட்டும் சுருங்கிவிடும். அன்னா ஹசாரே மற்றும் அவரது ஆதரவாளர்களின் உழைப்பை ஏதோ ஒரு கட்சி கபளிகரம் செய்து கொண்டு போய்விடும். மிஞ்சிப் போனல் ஆட்சி மாறும்! ஆனால் ஊழலும் அதை எதிர்க்கும் போராட்டங்களும் அப்படியேதான் இருக்கும். அன்னா ஹசாரே செய்திச் சேனல்களின் TRP பூஸ்டராக இருந்து பதவி இறக்கம் செய்யப்படுவார். யோசிங்க மக்காஸ்! யோசிங்க ஹசாரே!

Monday, August 15, 2011

களவாணி வேலை செய்ய சம்பளம் - Hacking படியுங்கள்

ஒரு அமைப்புக்காகச் செய்தால் அது உளவு, நீங்களே செய்தால் அது களவு!

இந்த இரட்டை வரிகள்தான் தற்போதைய ஐடி நிறுவனங்களின் உளவுத்துறை மந்திரம். ஐடி நிறுவனங்களில் உளவுத்துறை எதற்கு என நீங்கள் யோசிக்கலாம். இன்றைய கால கட்டத்தில் மிகப்பெரிய திருட்டு எது தெரியுமா? தங்கத்தை கொள்ளையடிப்பதோ, கரன்சியை சுருட்டுவதோ இல்லை. இது தகவல் யுகம் என்பதால், தகவல்தான் இன்று பணம். எனவே நிறை தகவல்களை அதாவது டாட்டாக்களை கொள்ளையடிக்க முடிந்தால் அதுவே மிகப்பெரிய திருட்டு. இந்த திருட்டையும், திருட்டை பிடிப்பதையும் ஐடி நிறுவனங்கள் இன்று லீகலாகவே செய்து வருகின்றன.

சட்டத்துக்கு உட்பட்டு களவா? 

இதென்ன விசித்திரம் என்று நீங்கள் யோசிக்கலாம். விசித்திரம்தான் ஆனால் நிச்சயம் தினந்தோறும் நடந்து கொண்டே இருக்கிறது. டெக்னிகலாகச் சொல்வதென்றால் இந்த களவாணி வேலைக்கு Hacking என்று பெயர். இந்த வேலையைச் செய்ய ஐடி நிறுவனங்கள் பணத்தை அள்ளி இரைத்துக் கொண்டிருக்கின்றன. ஏனென்றால் தற்போதைய ஐடி நிறுவனங்கள் அனைத்துமே ஏதோ ஒரு நாட்டில் இருக்கும், ஏதோ ஒரு நிறுவனத்தை கணிணி வழியாக நிர்வகித்துக் கொண்டிருக்கின்றன. எனவே அந்நிறுவனங்களின் மிகப்பெரிய சொத்தே மற்ற நிறுவனங்களைப் பற்றிய டேடாக்கள் தான். அந்த டாட்டாக்களில், பெயரிலிருந்து, பாங்க் இரகசியங்கள் வரை அனைத்தும் உண்டு. இவை வெளியே கசிந்துவிட்டால், நம்பிக்கை போய், பிசினசும் போய், பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலையும் போய்விடும். எனவே இந்த டாடாக்களை பாதுகாக்க ஐடி நிறுவனங்கள், உளவாளிகள்-களவாணிகள்-அல்லது Hackerகளை சம்பளம் கொடுத்து பணியில் அமர்த்துகின்றன.

இந்தக் களவாணி ஹேக்கர்கள் என்ன வேலை செய்வார்கள்? 

வாசலில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு, வேப்பங்குச்சியில் பல் குத்திக் கொண்டிருகும் காவலாளியை இரண்டு நாள் தொடர்ந்து பார்த்து, சினேகமாகச் சிரித்துவிட்டு, மூன்றாவது நாள் சிங்கிள் டீ வாங்கிக் கொடுத்தால், நான்காவது நாள் நம்மை சல்யூட் அடித்து உள்ளே விட்டுவிடுவான். சில அபார்ட்மெண்ட் வாசல்களில் இது போன்ற அபத்திரமான காவலாளிகள் இருக்கிறார்கள். இவர்களை நம்பி நாம் நம் வீட்டை விட்டுவிட்டுச் செல்ல முடியாது இல்லையா? அதே போல ஐடி நிறுவனங்களில் இருக்கும் டாடாக்களை பாதுகாக்க, பாஸ்வேர்டு, நெட்வொர்க் இரகசியங்கள்,ஃபயர்வால்கள் என என்னென்னவோ அடுக்கடுக்கான போலீஸ் வேலைகள் உண்டு. ஆனால் இவை அனைத்தையும் சுலபமாக உடைத்துக் கொண்டு, டாடாக்களை திருடும் ஹாக்கர்கள் அதிகரித்துவிட்டார்கள். தங்கள் வீட்டுக் கணிணியில் அமர்ந்து கொண்டு, கோக் குடித்துக் கொண்டே, பன்னாட்டு நிறுவனங்களின் டாடாக்களை திருடி விற்று சம்பாதிக்கிறார்கள். சமீபத்தில் இந்திய சீன அரசுகளின் சில வெப்சைட்டுகள் மற்றும் அமெரிக்க அரசின் இராணுவ இணைய தளங்களுக்குள்ளும் புகுந்து தங்கள் கை வரிசையைக் காட்டிவிட்டார்கள். ஒரு உளவாளிக்குதான் இன்னொரு உளவாளியின் நடமாட்டம் நன்றாகத் தெரியும் என்பதால், இந்த உளவாளிகளைத் தடுக்க, தனக்கே தனக்கு என உளவாளிகளை ஐடி நிறுவனங்கள் வைத்துக் கொள்கின்றன. அதாவது ஹேக்கிங்கை தடுக்க, ஹேக்கர்களை வேலைக்கு வைத்துக் கொள்கின்றன.

ஐடி நிறுவனங்களிடம் சம்பளம் வாங்கி உளவுகளை தடுப்பவர்களும், உளவு பார்ப்பவர்களும் ஒரே வேலையைத்தான் செய்கிறார்கள். அதாவது ஒரு நிறுவனம் யாரும் உள்ளே புக முடியாத ஒரு ஃபயர்வால் நெட்வொர்க்கை தனது நிபுணர்களை வைத்து உருவாக்குகிறது என வைத்துக் கொள்வோம். அதை சோதித்துப் பார்க்க, நிஜ ஹேக்கர்கள் வரும் வரை காத்திருப்பதில்லை. தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த ஹேக்கர்களையே திருட்டுத்தனமாக உள்ளே போக முடியுமா என சவால் விடுகிறார்கள். அவர்கள் உள்ளே புகுந்துவிட்டால், அந்த ஓட்டை கண்டுபிடிக்கப்பட்டு அடைக்கப்படும். எனவே நீங்கள் ஒரு ஹேக்காராக ஒரு நிறுவனத்துக்குள் நுழைந்தால், அந்த நிறுவனத்தையே ஹேக் செய்தால்தான் நீங்கள் திறமைசாலி. இல்லையென்றால் உங்களை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். இந்த வேலைக்கு ஆங்கிலத்தில் Ethical Hackers என்று பெயர். உங்களின் கள்ளச்சாவி செய்யும் திறமையைப் பொறுத்து, அந்த நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. நீங்கள் அதிக பூட்டுகளைத் திறந்தால், அதிக திறக்க முடியாத பூட்டுகளை நிறுவனம் செய்து கொண்டே இருக்கும். இது அந்த நிறுவனத்தின் டாட்டா பாதுகாப்புக்கு நல்லது. 

உங்களால் வலிமையான நெட்வொர்க்குளை உடைத்து டேடாக்களை நெருங்க முடிந்தால், உங்களைப் போலவே வலிமையான, திறமையான நிஜ ஹாக்கர் வெளியிலும் இருக்கிறார், அவரும் உள்ளே வர வாய்ப்பு இருக்கிறது என்று அர்த்தம். எனவே அதை மனதில் கொண்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். எனவே ஹாக்கர் என்றால் நெகட்டிவ்வாக யோசித்து அதைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் விட்டுவிடாதீர்கள். ஹேக்கிங் என்பது இன்று எல்லா சட்ட திட்டங்களுக்கும் உட்பட்ட, ஒரு white hat தொழில். களவை வைத்தே களவாணிகளை ஓரம்கட்டுவதுதான் ஒரு திறமையான ஹேக்கரின் வேலை. இதை ethical hacking அல்லது penetration testing என்று சொல்கிறார்கள்.

தங்கள் நிறுவன டேடாக்களை பாதுகாக்க 3வது நபர் வருவதை விட, தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த ஹாக்கர்களே பாதுகாப்பானவர்கள் என்று ஐடி நிறுவனங்கள் நம்புகின்றன. உலக அளவில் இன்று ஹேக்கர்களுக்கு செம டிமாண்ட். இன்றைய தேதியில் 60,000 ஹேக்கர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் திருட்டுத்தனமாக ஹேக்கர்கள் இருக்கிறார்களே தவிர, சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை செய்யும் white hat ஹேக்கர்கள் இல்லை. என்ன கொடுமைசார் இது! கை நிறைய சம்பளம், ஏசி, கார்.. இந்த வேலைக்கு உடனே தயார் ஆகுங்கள். விப்ரோ, ஐபிஎம், இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ், ஏர்டெல் என எல்லா பெரிய ஐடி தொடர்புள்ள, நிறைய தகவல்களை கையில் வைத்துக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் ஹேக்கர்களுக்காக காத்திருக்கின்றன. எனவே உடனே ஒரு பயோ டாட்டாவுடன் புறப்படுங்கள்.

ஹேக்கிங் படித்தால் எந்த மாதிரியான வேலைகள் கிடைக்கும்?

  • Ethical Hacker/Penetration Tester
  • Security Auditor
  • Web Security Administrator
  • Cryptographer
  • Secured Programmer
  • Network Defence Analyst
  • Network Defence Infrastructure support,
  • Network Security Administrator
  • Server Administrator,
  • Application Security Tester.
ஐடி நிறுவனங்களில் தற்போது இந்த வேலைகளுக்கு 100 பேர் தேவை என்றால் 10 பேர்தான் கிடைக்கிறார்கள். ஏனென்றால் இது பற்றிய போதிய விபரங்களும், படிப்புகளும் இல்லை. எனவே எல்லோரும் ஒரே திசையை நோக்கி பயணிக்காமல்,ஹேக்கிங் பக்கம் தன் கவனத்தை திருப்பினால், பெருகி வரும் ஐடி வேலைப் போட்டியில், எளிதில் வெல்லலாம்.

சம்பளம் எப்படி இருக்கும்?
வழக்கமான ஐடி வேலைகளுக்கு கிடைப்பதை விட 25-30 சதவிகிதம் கூடுதலாகவே சம்பளம் கிடைக்கும். எனவே உடனே முந்துங்கள். உங்கள் திறமையை நிரூபித்துவிட்டால் உலகம் முழுவதும் உங்களுக்கு டிமாண்ட் இருக்கிறது. பரபரப்பாக இருக்கிற கூகுள், யாகூ, ஃபேஸ்புக், டிவிட்டர் இவர்களிடமிருந்து யாராவது டாட்டாவை திருடி விட்டால் என்ன ஆகும். அவ்வளவு பரபரப்பும் அடங்கி, உலகமே இயக்கத்தை நிறுத்திவிடும். இந் நிறுவனங்களை பாதுகாப்பது என்றால், சாதாரண வேலையா? எனவே உடனே ஹேக்கிங் திசையில் கவனம் திருப்புங்கள்.

ஹேக்கிங் படிக்க அடிப்படை தகுதிகள் என்ன?
கணிணி பட்டதாரிகள் எல்லோருமே படிக்கலாம். புரோகிராமிங்கும், நெட்வொர்க்கிங்கும் தெரிந்திருந்தால், நச்சென்று இந்த கோர்ஸில் பொருந்திவிடுவீர்கள்.

என்னென்ன கோர்ஸ்கள் உள்ளன?

  • Certified Ethical Hacker (EC - Council)
  • Cerfified Hacking Forensic Investigator (EC- Council)
  • GIAC Certified Penetration Tester (GPEN) offered by SAN
  • GIAC Certified Intrusion Analyst (GCIA)
உங்களுடைய முதன்மைத் தகுதிக்கு ஏற்ப 5 நாட்கள் முதல் 3 மாதங்கள் வரை கோர்ஸ் படிக்க வேண்டியதிருக்கும். பத்தாயிரம் முதல் 15000 வரை கட்டணங்கள் இருக்கக்கூடும். நேரமிருப்பவர்கள் இன்ஸ்டடியூட் போய் படிக்கலாம், மற்றவர்கள் ஆன்லைன் வழியாகவும் படிக்கலாம்.

கோர்ஸ் நடத்துவோர் பற்றிய சில விபரங்கள்
(உங்களில் யாருக்கேனும் தெரியுமென்றால் விபரங்களைக் கொடுங்களேன்)

Appin Knowledge Solutions

Adept Technology

Jodo Institute

InnoBuzz Knowledge Solutions

Ankit Fadia Certified Ethical Hacker course

(கம்ப்யூட்டர் உலகம், ஆகஸ்டு இதழில் இக்கட்டுரையை எழுதியிருக்கிறேன்)

Saturday, August 13, 2011

ஆன்லைன் சதி வலைகளில் சிக்கும் பெண்கள் - எச்சரிக்கை - 02

 விபரீதம் - 1 - திருப்பம்
'சூரியா? ஜெயம் ரவி? யாரைப் போல இருப்பான்? '
அவள் ஆர்வத்துக்கு தொடர்பே இல்லாமல் ஒரு 50 வயது மதிக்கத்தக்க ஆள் கதவைத் திறந்தான்.
'விலாசம் மாறி வந்துவிட்டோமோ.. அவள் புன்னகை சட்டென சுருங்கியது. 'இங்கே.. இங்கே..'

'நான்தான் அவன்.. உள்ள வா..'நரைத்த தலை முடியுடன் வயதான ஒரு ஆணைப் பார்த்ததும் அவளுக்கு அதிர்ச்சி.. 'இந்த ஆளா..'
'இல்ல நான் அப்புறம்...''அப்புறமாவா? என்ன திடீர்னு பயமா இருக்கா? பயப்படாத.. உள்ள வா..'வளுக்கு இதற்கு முன் இப்படி வியர்த்ததே இல்லை.'அம்மா தேடுவாங்க.. நான் போறேன்.''போகலாம்.. இந்த ஜீஸ் குடிச்சுட்டுப் போ..''இல்ல வேண்டாம்.'
கதவு படக்கென்று மூடிக் கொண்டது.

விபரீதம் - 2 - திருப்பம்
'நீ அனுப்பிய காதல் கவிதை சூப்பர்' என்றது மறுமுனை.
'நானா? நான் அனுப்பவே இல்லையே..' என்று இவள் அதிர்ச்சியானாள்.
'இவ்வளவு அடக்கமா? உன்னுடைய ஃபோட்டோவும் சூப்பர். செம அழகு.'
'என்னது என்னுடைய ஃபோட்டோவா? நான் உனக்கு அனுப்பவே இல்லையே..'
'ஹா..ஹா..நல்லா ஜோக் அடிக்கிற.. நேத்து நைட் 2 மணி வரைக்கும் பேசிக்கிட்டிருந்தியே.. தூக்க கலக்கமா? அதான் எனக்கு அனுப்பினதே உனக்கு மறந்துடுச்சு.'
'பிராமிஸா நேத்து நான் உன் கூட சாட் பண்ணல. ஃபோட்டோவும் அனுப்பல..'
'இங்க பார் இது நீ அனுப்பாமல் எனக்கு எப்படி வரும்?'

புகைப்படங்களைப் பார்த்தவுடன் அதிர்ந்தாள். விதம் விதமான காணக்கூடாத கோணங்களில், மொபைல் போனில் எடுக்கப்பட்ட புகைப் படங்கள். எனக்குத் தெரியாமல் என்னை யார் புகைப்படம் எடுத்திருப்பார்கள். குழப்பத்துடன் யோசிக்கும்போதே, மங்கலாக ஃபோட்டோக்களின் பிண்ணனியில் அவளை உசுப்பேற்றிய நண்பர்கள். அவள் மிரண்டு போனாள். அதற்குப் பின் மறுமுனையிலிருந்து அவன் அனுப்பிய வரம்பு மீறிய வார்த்தைகளைக் கொண்ட கவிதையைப் பார்த்ததும் உறைந்தே போனாள்.

'
இல்ல.. இது நான் எழுதல.. அவள் அலறல் கேட்டு அறைக் கதவு திறந்து கொண்டது.'

கவர்ச்சியான, ஆனால் அபாயகரமான, தவிர்க்க முடியாத, ஆனால் ஜாக்கிரதையாக உலவ வேண்டிய ஆன்லைன் உலகம் பற்றிய ஒரு சிறு புள்ளி விபரம்.

இன்டர்நெட்டில் உலவுதல்
93% டீன்ஏஜ் மாணவர்கள் நெட்டில் உலவுகிறார்கள்.
80% டீன் ஏஜ் மாணவர்கள் வாரம் இரு முறையாவது ஆன் லைன் உலகில் வலம் வருகிறார்கள்

செல்போன் பயன்பாடு
75% டீன்ஏஜ் மாணவர்கள் மொபைல் போன் வைத்திருக்கிறார்கள்
1500 SMS அனுப்புகிறார்கள் மாதந்தோறும்.
4% இளைஞர்கள் விரும்பி ஆபாச SMS அனுப்புகிறார்கள்
15% இளைஞர்கள் விரும்பி ஆபாச SMS படிக்கிறார்கள்.

ஆன்லைன் தொல்லையில் சிக்கும் டீன்ஏஜ்கள்
மூன்றில் ஒரு டீன் ஏஜ் பெண் தொல்லைக்கு உள்ளாகிறாள்.
38% பெண்களும், 26% ஆண்களும் தொல்லைக்கு உள்ளாகிறார்கள்.

ஆன்லைன் விளையாட்டு
97% டீன்ஏஜ்கள் ஆன்லைன் விளையாட்டு விளையாடுகிறார்கள்.
27% டீன்ஏஜ் மாணவர்கள், முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் விளையாடுகிறார்கள்.

ஆன்லைன் வேட்டைக்காரர்கள்
25 பேரில் ஒரு இளைஞர் இளைஞியை இன்டர்நெட்டுக்கு வெளியே சந்திக்கிறார்கள்.
27% பேரிடம் அவர்களை வைத்தே ஆபாச புகைப்படங்கள் எடுக்கிறார்கள்.

சோஷியல் நெட்வொர்க்கிங்
73% தங்களது உண்மை விபரங்களை ஃபேஸ்புக் போன்ற தளங்களில் வெளியிடுகிறார்கள்.
47% தங்கள் புகைப்படங்களை நண்பர்கள் அல்லாதவருக்கும் அனுப்புகிறார்கள்.
27% தங்கள் வீடியோக்களை நண்பர்கள் அல்லாதவருக்கும் அனுப்புகிறார்கள்.

விபரீதம் -1- இறுதிக்கட்டம்
கதவு தானாக மூடிக் கொண்டதா, யாராவது சாத்தினார்களா எனத் தெரியவில்லை. ஆனால் அப் பெண்ணின் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்துவிட்டன. பேச்சு எழவில்லை. தலையை குனிந்து கொண்டாள். அல்லது எதிரில் நிற்கும் அந்த ஆளை பார்க்க மறுத்தாள். கால்கள் துவண்டு கொண்டிருந்தன. இன்னும் சில வினாடிகளே நிற்க முடியும் எனத் தோன்றியது. கையிலிருந்த பூங்கொத்தும், புதுச் சட்டையும் பொத்தென கீழே விழுந்தன. ஓடிவிடலாமா என்று ஒரு கேள்வி எழ, அதற்க்கான திராணி இல்லாமல் உடலே பாரமாகிவிட்டது போல அவள் தவித்த வேளையில், கழுத்தருகில் அந்த ஆளின் சூடான மூச்சுக்காற்றை உணர்ந்தாள். ஒரு கெட்ட நறுமண செண்ட் அவளை சூழ, அம்மா எனக் கதறியபடி அவள் ஓட, அவளை துரத்திக் கொண்டு அந்த ஆளும் வந்தான். சடாரென ஒரு சத்தம். கதவைத் திறந்தபடி, அவளின் பெற்றோர்களும், போலீசும்.

விபரீதம் -2- இறுதிக்கட்டம்
கதவைத் திறந்து கொண்டு, அந்தக் கள்ள நண்பர்கள் கூட்டம் உள்ளே வந்தது. 
நான் இந்த ஆபாசக் கவிதையை எழுதல, ஏடாகூடமான ஆங்கிள்ல இருக்கிற என்னுடைய .போட்டோவை அனுப்பல. இதை யார் செய்தது?
நாங்கதான். உன்னுடைய பாஸ்வேர்டு எங்க எல்லாருக்கும் தெரியும். அதனால உனக்குத் தெரியாம, உன் பாஸ்வேர்டை பயன்படுத்தி நீ பேசற மாதிரி அவன் கூட பேசி அவனை மயங்க வைச்சோம். அப்பப்போ எங்க விலாசத்துக்கு கிஃப்ட் அனுப்ப வைச்சோம். எவ்வளவோ பணம் வாங்கியிருக்கோம்.
அடப்பாவிங்களா.. நான் இதை எங்கப்பா கிட்ட சொல்லிடுவேன்.
சொல்லு.. நாங்க உன்னை அப்பப்போ ஃபோன்ல ஏடாகூடமா எடுத்த ஃபோட்டோஸை அவருக்கும் காட்டுவோம். அவரு அதைப் பார்த்ததும் தற்கொலையே பண்ணிக்குவாரு.
அப்படியெல்லாம் நடக்காது.
அப்படி எதுவும் நடக்கலன்னா, இப்பவே இமெயிலை திறந்து பாரு. உன் சார்பில நாங்களே சாட் பண்ணி அதை வீடியோ பண்ணியிருக்கோம். இமேஜாவும் இருக்கு. நீதான் இப்படி பேசினேன்னு உலகம் முழுக்க பரப்புவோம்.
விளையாட்டுன்னு நினைச்சு உங்களை நம்பினேனே.. ஏண்டா இப்படி செய்தீங்க...
இன்னும் நிறைய பேரை பலியாக்கப்போறோம். பணம் பறிக்கப்போறோம். அவங்க எல்லாத்துக்கும் நீதான் தூண்டில். நீ இதுக்கு ஒத்துக்கலன்னா, முதல் பலி நீதான். உன் ஃபோட்டோ, ஆபாசப் பேச்சு எல்லாம் இன்டர்நெட்டில் பறக்கும்.
ஐயோ எனக் கதறியபடி அவள் மயக்கமடைந்த போது போலீசும், பெற்றோர்களும் உள்ளே நுழைந்தார்கள்.

இரண்டு கேஸிலுமே, பெற்றோர்கள் ஏதோ ஒரு முன் ஜாக்கிரதையாக அப் பெண்களிடம் பாஸ்வேர்டை வாங்கி வைத்திருந்திருக்கிறார்கள். அதனால் அதை திறந்து பார்த்து தூண்டில் வீசிய அத்தனை கபடதாரிகளையும், அவர்களுடைய இமெயிலையும் மற்ற தகவல்களையும் படித்து, பார்த்து அவர்களை எளிதாக வளைத்துவிட்டார்கள்.

ஆனால் முதல் சம்பவத்தில் சிக்கிக் கொண்ட பெண்ணின் நிலை பரிதாபம். அவளுடைய வீட்டில் அவளை ஏற்றுக் கொண்டாலும், உறவினர்கள் பக்கத்துவீட்டுக்காரர்களின் கேலியைத் தாங்காமல், வேறு ஊருக்கு செல்ல முயன்று கொண்டிருக்கிறார்கள். கல்வி நின்றுவிட்டது.

இரண்டாவது பெண்ணின் நிலையும் அத்தனை திருப்திகரமாக இல்லை. அப் பெண் எங்கு சென்றாலும் சந்தேகம், யாருடனாவது போனில் பேசினாலே சந்தேகம் என அவளுடைய வீடே அவளை சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கிறது.

முன் ஜாக்கிரதை நடவடிக்கைகள்
  • குழந்தைகள், டீன் ஏஜ் மாணவர்களின் பாஸ்வேர்டுகளை பெற்றோர்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
  • அவ்வப்போது அந்த பாஸ்வேர்டு மாறாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • ஃபேஸ்புக் போன்ற தளங்களில், தங்கள் மகன்கள், அல்லது மகள்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், யாருடன் பழகுகிறார்கள் என்பதை அறிந்து நீங்களும் அவர்களுடன் பழக வேண்டும்.
  • யாராவது சந்தேகத்துக்கு இடமாக பழகுவதாகத் தெரிந்தால், அனைவரும் பார்க்கும்படியாக, மற்றவர்களுக்கும் உதவும்படியாக, ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுவிட்டு, அவர்களை நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்குங்கள்.
  • சந்தேகப்படும் ஆன் லைன் நண்பர்களை ஆன் லைனிலேயே வைத்திருங்கள், வீடு வரை அழைக்காதீர்கள்.
  • தித்திப்பான வார்த்தைகளுக்கு மயங்காதீர்கள். கபடதாரிகளின் முதல் தூண்டில் அதுதான்.
  • குறிப்பாக உனக்குப் பிடித்த உடை, உணவு, நிறம், தோற்றம் பற்றி விசாரிப்பவர்களை உடனே ஒதுக்குங்கள்.
  • உங்கள் அந்தரங்கங்களை யார் கேட்டாலும் சொல்லாதீர்கள்.
  • உங்கள் குடும்ப விபரங்கள், விலாசங்கள், பாங்க் விபரங்களை சொல்லாதீர்கள்.
  • யாரையாவது சந்தித்தே ஆக வேண்டுமென்றால், முதலில் பெற்றோர்கள் அல்லது உறவினர்களுடன் சந்தியுங்கள்.
  • ஆபாசமாக பேசும் உரையாடல்களில் விளையாட்டாகக் கூட பங்கு பெறாதீர்கள்.
தங்களுக்கென்று சுய அடையாளம் தேடும் பெண்கள் அனைவருக்கும் அதைத் தருகிற சோஷியல் நெட்வொர்க்கிங் எனப்படும் ஆன்லைன் தளங்கள், அவற்றின் இருண்ட பக்கங்களையும் சேர்த்தே தருகிறது. அங்கு பெண்கள் மிகக் கொடுரமாக தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். அவர்களின் அழகும், அறிவும், கேலிக்குள்ளாக்கப்படுகிறது. அவர்களின் வெகுளியான பழகும் தன்மை கொச்சைப்படுத்தப்படுகிறது. சடுதியில் போட்டோக்களையும், வீடியோக்களையும் உலகமெங்கும் பரப்பிவிடும் மொபைல் மற்றும் ஆன்லைன் வசதிகளால், பெண்களைப் பற்றிய மதிப்பீடுகளும், மனரீதியான தாக்குதல்களும் பரப்பப்படுகின்றன.

இப்படி தாக்குதலுக்கு உள்ளாகிற பெண்கள், வீட்டிலும், பள்ளியிலும், பொது இடங்களிலும் ஆதரவின்றி அலைக்களிக்கப்படுகிறார்கள். அரவணைக்க வேண்டிய நண்பர்களும், தோழிகளும், உறவினர்களும் அவர்களை மேலும் காயப்படுத்துகிறார்கள். அதனால் அவர்கள் மேலும் தனிமைப்படுத்தப்பட்டு கோபம், பச்சாதாபம், எதைக் கண்டும் பதுங்குதல், வீட்டுக்குள்ளேயே ஒடுங்குதல் அல்லது எதற்கும் மதிப்பு தராமல் எதையும் எதிர்த்தல் என மிகப் பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகிவிடுகிறார்கள்.

பொது வாழ்க்கையில் எந்தக் காரணத்துக்காக பெண்களை நோக்கி வலை வீசப்படுகிறதோ, அதே நோக்கத்துக்காகத்தான் ஆன்லைனிலும் வலை வீசப்படுகிறது. ஆனால் ஆன்லைனில் பாதிப்பு அதிகம். உலகமெங்கும் ஒரு பெண்ணைப் பற்றி ஒரே வினாடியில் கொச்சைப்படுத்தி அவள் தொடர்புடைய புகைப்படத்தையோ, வீடியோவையை பரப்பிவிட முடியும். இதை எதிர்கொள்ள அந்தப் பெண்ணுக்கும், அவள் சார்ந்தவர்களுக்கும் சக்தியும், மனதைரியமும் இல்லையென்றால் மிகக் கடினம்தான்.

12 வயதிலிருந்து 30 வயதுப் பெண்கள்தான் மிகச் சுலபமாக இரையாகிறார்கள் என்று ஒரு சர்வே சொல்கிறது. 30-45 வயதுக்குள்ளான பெண்கள், தர்க்க ரீதியாக, அறிவு ரீதியாக, உணர்வு ரீதியாக ஈர்க்கப்பட்டு பலியாகிறார்கள். ஃபேஸ்புக் பயன்படுத்தும் டீன் ஏஜ் பெண்களுக்கு அதிகமான ஃபிரண்ட் ரிக்வெஸ்ட் அனுப்புவது யார் தெரியுமா? 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள்தான். அதாவது டீன் ஏஜ் பையன்களும், இளவட்டங்களும் இந்தக் குற்றப்பிரிவில் குறைவாகத்தான் இருக்கிறார்கள்.

தெரியாமல் சிக்கிக் கொள்கிற பெண்கள் ஒருபுறம். ஓரளவுக்கு தெரிந்தே ரிஸ்க் எடுக்கிற பெண்கள் இன்னொரு புறம். இவ்வகைப் பெண்கள் தினசரி வாழ்க்கையிலேயே மனரீதியான, உடல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளானவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அதை வெளியே சொல்ல பயந்து, இன்டர்நெட்டுக்குள் நுழையும்போது, வெளியில் திரியும் கள்வர்களே உள்ளேயும் திரிவதை கண்டுகொள்கிறார்கள். அவர்கள் கள்வர்கள் என்று தெரிந்தே பழகுகிறாரகள். அது அவர்களுக்கு ஒரு சவாலான சாகஸமாக இருக்கிறது. இதில் தப்பி வெளியே வருபவர்களும் இருக்கிறார்கள். மீண்டும் சறுக்கி மேலும் பாதாளத்தில் வீழ்பவர்களும் இருக்கிறார்கள்.

எனவே ஆன்லைனுக்குள் போய் அப்படி ஆகிவிடாதே, இப்படி ஆகிவிடாதே என்று எச்சரிப்பதை விட, தினசரி வாழ்விலேயே ஒரு ஆரோக்கியமான, பாதுகாப்பான சூழல்களை உருவாக்கிவிட்டால், அதே போன்ற நல்ல துணையுள்ள ஒரு சூழல் பெண்களுக்கு ஆன்லைனிலும் வாய்க்கிறது என்பதும் உண்மை.
(இக் கட்டுரை கம்ப்யூட்டர் உலகம், ஆகஸ்டு மாத இதழில் வெளிவந்துள்ளது)