Saturday, February 25, 2012

மாத்தி யோசி - சக்ஸஸ்!

வகுப்பறையாக இருந்தாலும், இன்டர்நெட் அரட்டை அறையாக இருந்தாலும், எனக்கு மாணவர்களுடன் பழகுவது மிகப் பிடிக்கும்!  சென்ற வாரம் மீண்டும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது.

மாத்தியோசி! புதிதாக வெளிவரப்போகும் இளைஞர் மாத இதழ்! சென்னைக்கு சற்று வெளியே இருக்கும் பொன்னேரியில் இருந்து வெளிவரப்போகிறது. அதனால் பொன்னேரியில் வசிக்கும் மாணவர்களுக்கு ஏதாவது உருப்படியாகச் செய்ய ஆரம்பித்த பின், முதல் இதழை துவக்கலாம் என்று முடிவு செய்தோம்.

முதல் செயலாக, 10வது மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச பயிற்சி முகாம் செய்ய முடிவு செய்தோம். இது தேர்வுக் காலம் என்பதால், மாணவர்கள் அச்சமின்றி தேர்வு எழுதுவது எப்படி என்பதே அந்தப் பயிற்சி முகாம்.

கிட்டத்தட்ட 170 மாவணர்கள் ஆர்வமுடன் வந்திருந்தார்கள். மாணவிகளும் அதிக அளவில் கலந்து கொண்டதால் மிகச் சந்தோஷமாக இருந்தது.

முதலில் இறுக்கமாக இருந்த மாணவர்களுடன் ஜாலியாக பேசத் துவங்கி அவர்களை சகஜ நிலைக்கு கொண்டு வந்து, அன்றைய முகாமுக்கு தயார் செய்தேன். மாணவர்கள் பயம் கலைந்து கலகலவென ஆனார்கள்.

பின்னர் திரு. துரை அரசன் ஒரு உற்சாக உரையாற்றினார். குட்டிக் குட்டி கதைகள், பாடல்கள் என பேச்சு நீண்டதால் ஒரே கரகோஷம்.

தொடர்ந்து தியானம் மற்றும் யோகா! தேர்வுக்கு போகும் முன் மனதையும், உடலையும் கட்டுக்குள் கொண்டு வர சின்னச் சின்ன பயிற்சிகள். ஒரு விளையாட்டு போல அவற்றை பயிற்றுவித்ததால் மாணவ, மாணவிகள் முழு ஈடுபாட்டுடன் பயிற்சிகளை செய்தார்கள்.

இறுதியாக திரு.சுரேகா கண்டிப்பும், நகைச்சுவையும் கலந்து டிப்ஸ்களை அள்ளி வீசினார். வந்திருந்த அனைவரும் கவனம் பிசகாமல் அவருடன் ஐக்கியமாகினர்.

ஒரு நெகிழ்வான கதையுடன் சுரேகா முகாமை நிறைவுறச் செய்தார். வந்திருந்த அனைவருமே ஏழை மாணவர்கள். கதையைக் கேட்ட மாணவர்களின் கண்களில் கண்ணீர். எப்படியாவது படித்து முன்னேற வேண்டும் என்ற துடிப்பு. தன் குடும்பத்தின் வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற கனவு. என வித விதமான எண்ணங்கள், ஆனால் படித்து நன்றாக பாஸ் பண்ண வேண்டும் என்ற ஒரே இலக்குடன் அனைவரும் விடைபெற்றார்கள்.

பயிற்சியாளர்கள் அனைவரிடமும் மாணவர்கள் ஆர்வமுடன் ஆட்டோகிராஃப் வாங்கியது கண்கொள்ளாக் காட்சி. சினிமா நடிகர்களை மட்டுமல்ல, தங்களுக்கு உதவ முன் வந்திருக்கும் நல் இதயங்களையும் ஆராதிப்போம் என்று அவர்கள் சொல்லாமல் சொன்னார்கள்.

கிராமப்புற மாணவர்களிடம் நான் ஒரு முக்கியமான அம்சத்தை கவனித்திருக்கிறேன். வழி காட்ட ஆள் இல்லாத வரை இலக்கின்றி இருக்கிறார்கள். வழிகாட்டி கிடைத்துவிட்டால்,  இலக்கை அடையாமல் விட மாட்டார்கள்.

பொன்னேரி மாணவர்கள் அனைவருக்கும் மாத்தியோசி சார்பாக மீண்டும் ஒரு முறை வாழ்த்துகள்!

3 comments:

கூடல் பாலா said...

சேவைக்கு பாராட்டுதல்கள் !

Unknown said...

சேவைக்கு நன்றி , தொடருங்கள் ஒரு நல்ல தலைமுறையை உருவாக்குங்கள் .

Thomas Ruban said...

வாழ்த்துக்கள். தொடரட்டும் இச்சேவை...