Friday, February 24, 2012

சென்னை போலீஸ் - ஒய் திஸ் கொலவெறி!

முதல் வரியிலேயே சொல்லிவிடுகிறேன். இது சென்னை போலீசுக்கு எதிரான கட்டுரை அல்ல. கொள்ளையர்களுக்கும், குற்றவாளிகளுக்கும் ஆதரவாக கொடி பிடிக்கும் கட்டுரையும் அல்ல. ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை என்பதை அப்படியே நம்பமுடியாது. அவர்களின் அத்துமீறல்கள், ஜோடனைகள் பற்றி கேள்விகள் எழுவது இயல்பு.

பின்வருபவை, சென்னை போலீஸ் நடத்தி முடித்திருக்கும் எண்கவுன்டர் பற்றிய சில சந்தேகங்கள் (மீடியாக்கள் எழுப்பியுள்ள கேள்விகளின் தொகுப்பு)

துப்பாக்கி சத்தம் கேட்கவே இல்லை
நள்ளிரவு 1 மணிக்கு துவங்கிய துப்பாக்கி சண்டை 1.15 வரை நீடித்ததாக போலீஸ் சொல்கிறது. சுவற்றில் 10 இடங்களில் குண்டு பாய்ந்த சுவடுகள் (Ricochet) உள்ளது. உள்ளிருந்த 5 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இரண்டு போலீசார் துப்பாக்கிக் குண்டு காயம் அடைந்திருக்கிறார்கள். வீட்டுக்குள் கதவை உடைத்து போலீஸ் நுழைந்திருக்கிறது. எவ்வளவு சத்தம் கேட்டிருக்க வேண்டும்.   ஆனால் சுற்றுவட்டாரத்தில் இருந்த எவருக்கும் ஏன் துப்பாக்கிச் சத்தம் மட்டும் கேட்கவே இல்லை. வேறு சில சத்தங்கள் கேட்டது போல இருக்கிறது என்று மற்றவர்களும் சந்தேகமாக இழுக்கிறார்கள். அனைத்தும் சைலன்ஸர் பொருத்திய துப்பாக்கிகளா?

தோட்டாக்களின் தடயமே இல்லாத ஜன்னல்கள்
ஒரு ஜன்னல் க்ரில் வழியாக முதல் ரவுண்டை சுட்டதாக போலீஸ் சொல்லியிருக்கிறது. வெறும் 9 செ.மீ அகலம் மட்டுமே அந்த துளை வழியாக நிச்சயம் கையை விட முடியாது. அதுவும் துப்பாக்கி ஏந்திய கையை விட முடியாது. எனவே வெளியே இருந்துதான் சுட்டிருக்க முடியும். ஆனால்  வெளிச்சமே இல்லாத நள்ளிரவில் 9 செமீ அகலத் துளை வழியாக ஜன்னல் கம்பிகளில் கூட படாமல் சுட்டோம் என்று கூறுவதை நம்ப முடியவில்லை. துப்பாக்கி குண்டுகள் நிச்சயம் ஜன்னலில் பட்டிருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அப்படி தடயம் எதுவும் இல்லை.

சேதமே இல்லாத உடைத்ததாகச் சொல்லப்படும் கதவுகள், தாழ்பாள்கள்
ஜன்னல் வழியாக சுட்டுவிட்டு அதன் பின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று என்கவுண்டரை தொடர்ந்ததாக போலீஸ் ஜோடிக்கிறது. ஆனால் உடைக்கப்பட்டதற்கான எந்த அடையாளமும் கதவிலோ, தாழ்பாள்களிலோ இல்லை.

துப்பாக்கிகள் உண்மையா? பொம்மையா?
கொள்ளை சம்பங்கள் அனைத்திலும் கொள்ளையர்கள் பொம்மைத் துப்பாக்கியை பயன்படுத்தியாக போலீஸ் கூறியிருந்தது. ஆனால் என்கவுண்டர் நடந்த அறையில் 7 உண்மைத் துப்பாக்கிகள் கிடந்ததாக போலீஸ் அறிக்கை சொல்கிறது. உண்மைத் துப்பாக்கி வைத்திருந்தவர்கள், ஏன் பொம்மைத் துப்பாக்கியுடன் கொள்ளையில் ஈடுபட்டார்கள்.

பூட்டப்பட்ட வீட்டுக்குள்ளிருந்து போலீசை துரத்திச் சுட்டார்களாம்
போலீஸ் தரப்பில் இருவருக்கு காயம். கொள்ளையர்கள் சுட்டதால்தான் தற்காப்புக்காக நாங்கள் சுட்டோம் என்கிறது போலீஸ். ஆனால் வீடு பூட்டியிருந்தது. முதலில் ஒரு ரவுண்டு சுட்டோம். அதற்குப்பின் கேட்டை உடைத்துதான் உள்ளே சென்றோம் என்கிறது அதே போலீஸ். வெளியே எட்டிப் பாரக்கக் கூட சிரமமான ஒரு சிறிய பூட்டப்பட்ட அறைக்குள் இருந்தவர்கள் வெளியில் இருந்த போலீசை எப்படிச் சுட்டிருக்க முடியும்?

ஏன் சுற்றி வளைக்கவில்லை?
பூட்டப்பட்டிருந்த வீட்டுக்குள் இருந்த கொள்ளையர்கள்தான் முதலில் சுட்டார்கள் என்று வைத்துக் கொண்டாலும், பூட்டியிருந்த வீட்டுக்குள் பதுங்கியிருப்பவர்களை எளிதாக மடக்கியிருக்கலாமே.. வீட்டின் மொத்த பரப்பே 300 சதுர அடிதான். அதில் ஒரு சிறிய அறைக்குள்தான் கொள்ளையர்கள் இருந்திருக்கிறார்கள். கதவைத் திறந்து அவர்கள் தப்பி ஓடுவதற்கு இருந்த ஒரே வழியும், குறுகலனா சிறிய பாதைதான். போலீஸ் எளிதாக அவர்களை மடக்கியிருக்க முடியும். ஆனால் ஏன் அவர்களை உயிருடன் பிடிக்க முடிவு செய்யவில்லை.

அறைக்குள் இருந்த அனைவருமே கொள்ளையர்கள் என்பதை எப்படி கண்டுபிடித்தார்கள்?
என்கவுண்டர் நடத்துவதற்கு முன்பு, உள்ளே இருந்த அனைவருமே கொள்ளையர்கள்தான் என்பதை போலீஸ் எப்படி உறுதி செய்தது? வங்கி CCTV காமிராவில் சிக்கியவன், காமிராவில் அணிந்திருந்த அதே உடையில் இறந்து கிடந்தான். மற்றவர்கள் கொள்ளையர்கள்தான் எப்பதை போலீஸ் எப்போது உறுதி செய்தது. சுடுவதற்கு முன்பா? சுட்ட பின்பா?

என்கவுண்டரை எதிர்பார்த்து போலீஸ் தயாராகச் சென்றது எப்படி?
போலீஸ் நடவடிக்கைகளை பார்க்கும்போது, கொள்ளையர் தேடுதல் வேட்டை நிச்சயம் என்கவுண்டரில்தான் முடியும் என்று எதிர்பார்த்து செயல்பட்டது போல இருக்கிறது. சம்பவம் மதியம் வரை அவர்களிடம் பொம்மை துப்பாக்கிதான் இருந்தது என்று கூறிய போலீஸ், அவர்களிடம் உண்மைத் துப்பாக்கி இருப்பதை எப்போது அறிந்தது?


இலட்சங்களை கொள்ளையடித்தவர்கள் சில ஆயிரம் அட்வான்ஸ் பணத்தை திரும்பப் பெறவா காத்திருந்தார்கள்?

பல இலட்சங்கள் கொள்ளைக்குப் பின், போலீஸ் தேடுவதாகத் தெரிந்ததும் ஏன் வீட்டை காலி பண்ணவில்லை? வீட்டு ஓனர் தாமதமாகத் தருவதாகச் சொன்ன சிறிய அட்வான்ஸ் தொகைக்காக கொள்ளையர்கள் காலி பண்ணாமல் இருந்தார்களாம். இதுவும் போலீஸ் சொன்ன செய்திதான்.


என்கவுண்டர் நள்ளிரவில், செய்தியோ அதிகாலையில்தான்
நள்ளிரவு 1.15 மணிக்கே என்கவுண்டர் முடிந்துவிட்டதாக போலீஸ் சொல்கிறது. ஆனால் அதிகாலை 5.30 மணி வரை மீடியாக்களை சம்பவ இடத்துக்கு அனுமதிக்கவே இல்லை. எதற்காக இந்த இடைப்பட்ட 4 மணி நேரம் பயன்படுத்தப்பட்டது? ஏன் ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவிலேயே மீடியாக்கள் தடுத்து நிறுத்தப்பட்டன?

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் தண்டிப்பதே சந்தேகத்துக்கு உரிய வகையில் இருப்பதை அனுமதிக்க முடியாது. தீவிரவாதி கசாப்பையே இன்னும் கோர்ட்டில் வைத்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் 5 பேரும் குற்றவாளிகள்தானா என்று உறுதிப்படுத்தாமலே அவர்களை சுட்டுக் கொன்றுவிட்டதாகச் சொல்வது சந்தேகங்களை எழுப்புகிறது.

கடைசியாக ஒரு சந்தேகம் : 
வட மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் என்ற பதத்தை அடிக்கடி போலீஸ் பயன்படுத்துவதன் நோக்கம் என்ன?

4 comments:

ரூம் போட்டு யோசிச்சவர்... said...

ம்..... சுற்றி வளைக்கப்பட்ட சந்தேகத்துக்கு உரியவர்கள் தாக்கியதால்..... திருப்பி சுட ஆரம்பித்த போலீஸ்.... உண்மையிலேயே மிகவும் ஷார்ப் ஷூட்டர்ஸ்.....

ஆம்.... கொலையான 5 பேருக்கும்... கழுத்து மற்றும் முகங்களிலேயே துப்பாக்கி துளை இருந்தது.... அதிலும் குறிப்பாக இரு பேருக்கு நெற்றி பொட்டில் மிக சரியாக பாய்ந்து இருந்தது....

கோவை நேரம் said...

எதையோ...மறைக்க....அரசியல் காரணங்களுக்காக

Ravi said...

இதற்க்கு ஒரே காரணம்தான்.இது அனைவருக்கும் பாடமா இருக்க வேண்டும் என்பதுதான்.
இவர்களை கைது செய்திருந்தால் இது ஒரு சிறு செய்தியாக இருந்திருக்கும். இப்போது இந்திய முழுவதும் பேசப்படுகிறது.
இதனால் இது போன்ற குற்றங்கள் இனி நடக்காது(சிறிய காலத்திற்காவது ) என்று நம்புவோம்.

தமிழ்ச்செல்வி said...

எதையோ...மறைக்க....அரசியல் காரணங்களுக்காக.............
"maathi yosikiraanga" na