Saturday, March 10, 2012

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் - இந்தியா ஆதரிக்குமா?

ஜெயலலிதாவும் கருணாநிதியும் கண்டு கொள்ளாத எந்த அரசியல் செய்தியையும் தமிழர்களும் கண்டு கொள்வதில்லை. சமீபத்திய உதராணம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வு பற்றிய செய்தி.  இவர்கள் இருவரின் அறிக்கையைத் தொடர்ந்து இந்தச் செய்தி டீக்கடை மற்றும் சலூன்களில் விவாதிக்கப்படும் பரபரப்பான செய்தியாகியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வு என்றால் என்ன?
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை எனச் சொல்லிக் கொண்டு, இலங்கையில் மனித உரிமை மீறல் நடந்திருக்கிறது. தமிழர்களுக்கு எதிராக போர்க் குற்றங்கள் நடந்திருக்கின்றன என்பது உலகம் அறிந்த செய்தி. தற்போது இந்தச் செய்திகள் குற்றச்சாட்டுகளாக உருப்பெற்று இலங்கைக்கு எதிராக சர்வதேச அளவில் வலுப்பெற்று வருகிறது.

ஒரு நாட்டிற்கு எதிரான இது போன்ற குற்றச்சாட்டுகளை அனுமதிப்பதற்கும், விசாரிப்பதற்கும் நடைபெறும் அமர்வுதான், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வு. மொத்தம் 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. பாதிக்கு மேல், அதாவது 24 நாடுகளின் ஆதரவை பெற்றுவிட்டால், குற்றம் சுமத்தப்படும் நாட்டின் மீது, சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்படும் என்பது விதி.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா
தற்போது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஒரு தீர்மானத்தை கொண்டு வரப்போவதாக செய்திகள் கசிந்திருக்கின்றன.  அதே நேரத்தில் இலங்கை அரசு, தமக்கு எதிரான இந்த தீர்மானத்தை தோற்கடிக்க தனது ஆதரவு நாடுகளிடம் ஆதரவு திரட்டிக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மொத்தம் 22 நாடுகள் இலங்கைக்கு எதிராக திரண்டு விட்டதாகவும், இன்னும் இரண்டு நாடுகள் ஆதரவு தந்துவிட்டால் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற நடவடிக்கைகள் வலுப்பெறும் என்பதும் வதந்திகள்.

இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிப்பது சந்தேகமே!
இந்தியா இலங்கைக்கு எதிரான நிலை எடுக்குமா என்பது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமான செய்திகள் வரவில்லை. அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து தமிழக அரசியல் கட்சிகளும், இந்தியாவை இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும்படி நிர்ப்பந்தித்து வருகின்றன.

ஆனால் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது. இந்தியாவின் ஆதரவு இலங்கைக்குதான் என்று இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஒரு பத்திரிகை பேட்டியில் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவருடைய நம்பிக்கையில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. காரணம் அமெரிக்காவால் நடத்தப்படும் சர்வதேச அரசியல் பிண்ணனி.

இந்த உலகத்தின் நாட்டாமையாக தனக்குத் தானே பட்டம் கொடுத்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு மனித உரிமைகள் பற்றிப் பேச அமெரிக்காவுக்கு எந்த தார்மீக அருகதையும் இல்லை. உலகம் முழுக்க மனித உரிமைகளை மீறி வருவது அமெரிக்காதான். அமெரிக்கா ஏதாவது ஒரு நாட்டுக்கு நெருக்கடி தந்தால், அந்தப் பிராந்தியத்தில் தனது வாலை நுழைக்கிறது என்று அர்த்தம். அதே போல ஆசியாவில் பொருளாதார வல்லரசுகளாக உயர்ந்து வரும் இந்தியாவையும், சீனாவையும் அருகில் இருந்து அதட்ட அதற்கு ஒரு இடம் தேவைப்படுகிறது. தற்போது அது தேர்ந்தெடுத்திருக்கும் இடம் இலங்கை. எனவே அமெரிக்காவின் இந்த தீர்மானத்துக்கு நிச்சயம் சீனா வாக்களிக்காது. இந்தியாவும் வாக்களிக்காது. ஆனால் தமிழக அரசியல் மற்றும் இலங்கை அரசியல் நெருக்கடி காரணமாக இந்தியா நடுநிலை எடுக்கலாம்.

தான் மூக்கை நுழைக்க வசதியாக, அமெரிக்கா இதை சர்வதேச மனித உரிமைப் பிரச்சனையாக்கப் பார்க்கிறது. ஆனால் இது வெறும் உள்நாட்டுப் பிரச்சனை என்பது இலங்கை ஆதரவு நாடுகளின் கருத்து.

பாக், பங்களாதேஷ் போர்களின் போதும், காஷ்மீர் பிரச்சனைகளிலும் இந்தியாவின் மீதும் இது போன்ற குற்றச்சாட்டுகள் வந்ததுண்டு. எனவே இப்போது இலங்கைக்கு எதிராக வாக்களித்தால், எதிர்காலத்தில் இலங்கை சீனாவுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவிற்கு ஆதரவாக செயல்படாமல் போகலாம். இந்தியாவிற்கு அமெரிக்கா, சீனா இரண்டையுமே சமாளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்த தீர்மானம் இலங்கைக்கு எதிரானது அல்ல?
மிக முக்கியமாக இன்னொரு செய்தி உலவிக்கொண்டிருக்கிறது. அது என்னவென்றால், அமெரிக்க தீர்மானத்தில், இலங்கையின் மேல் பகிரங்க குற்றச்சாட்டுகள் ஏதுமில்லை. இலங்கையில் மனித உரிமைகளை நிலைநாட்டவும், சர்வதேச சட்டங்களை பின்பற்றவும் ஒரு கண்காணிப்பு குழு இலங்கை அரசால் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவுக்கு LLRC - Lessons Learnt and Reconciliation Commission என்று பெயர். உள்நாட்டுப் போரால் கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் நல்லிணக்கத்தை உருவாக்குவதே இந்தக் குழுவின் நோக்கம். அமெரிக்கத் தீர்மானத்தில் அந்தக் குழு சரியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுதான் உள்ளது.

ராஜபக்ஷேவை இந்த தீர்மானம் போர்க்குற்றவாளியாக சித்தரிக்கவில்லை. இலங்கையின் மேல் எந்தப பகிரங்க குற்றச்சாட்டும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. எனவே இந்த அமெரிக்க தீர்மானம் வெற்றி பெற்றாலும், அதனால் இலங்கைக்கு சர்வதேச அரசியல் பாதிப்பு எதுவும் பெரிதாக இருக்காது எனச் சொல்லப்படுகிறது.

ஆனால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், இலங்கையை சர்வதேச அரங்கில் குற்றவாளியாக நிறுத்த இது ஒரு நல்ல வாய்ப்பாக நினைக்கிறார்கள். நானும் அப்படியே நினைக்கிறேன்.




No comments: