Tuesday, April 9, 2024

அணுவுக்குள் அணுவாக, அப்பாலுக்கு அப்பாலாக உணர வைக்கும் இயக்குநர் பிளெஸ்ஸி!

 

ஆடுஜீவிதம் கற்றுத்தரும் பறவைப்பார்வை!

நஜீபின் குடும்பம், மனைவி, காதல், பிரிவு என சாதாரண வணிகப்படத்துக்கான அத்தனையும் ஆடுஜீவிதம் படத்தில் உண்டு. நிஜக்கதை என்பதால் அவற்றை தவிர்க்கவும் இயலாது.
ஆட்டுத்தொட்டியில் ஆடுகளுடன் ஒருவனாக நீர் அருந்தும் கைவிடப்பட்ட மனிதனாகத்தான் நஜீப் அறிமுகமாகிறான். அவனுடைய துயரங்களுக்கு இடையில் அவனுடைய பழைய வாழ்வை நினைத்து ஆறுதல் கொள்வதாக கதை சிறிதுநேரம் நகர்கிறது. அது அப்படியே தொடராமல் ஒரு கட்டத்திற்குமேல் திரைக்கதையின் தன்மை மாறுகிறது. குறிப்பாக மினுக்கும் விண்வெளியை பிரதிபலிக்கும் ஆட்டுத்தொட்டியில் ஆடுகளுடன் ஒருவனாக நஜீப் நீர் அருந்தும் துவக்கக் காட்சி மீண்டும் ஒருமுறை வந்ததும், திரைக்கதை விண்ணிலிருந்து பார்க்கும் பார்வையாக மாறிவிடுகிறது.
அவதிப்படும் ஒரு ஜீவராசியாக நஜீபை காட்டத் துவங்குகிறது. தவிக்கும் நஜீப், பாதியில் வந்து சேரும் நண்பன், அவர்கள் இருவரும் தப்பிச் செல்ல உதவும் இப்ராஹீம், என அனைவருமே கொதிக்கும் அகண்ட பாலைவனத்தின் ஒரு அங்கமாக மட்டுமே காட்டப்படுகிறார்கள். இரக்கமற்ற மணல் புயல் வீசும் பாலையில், பிணங்களைத் தின்னும் கழுகுகளைப் போல, கொத்தும் பாம்புகளைப் போல, அவர்கள் அனைவருமே மற்றும் ஒரு ஜீவராசியாகத்தான் சித்தரிக்கப்படுகிறார்கள்.
மாபெரும் இயற்கையின் முன் ஒரு தூசிபோல அலைபாயும் அவர்கள் ஒருவரை ஒருவர், நம்பி, தூற்றி, கைவிட்டு, அணைத்து எப்படி மீண்டுவர முயல்கிறார்கள் என்று காட்சிகள் விரிகின்றன.
இதுதான் ஆடுஜீவிதம் திரைக்கதையின் முக்கிய அம்சம். திரும்பத் திரும்ப குடும்பத்தைக் காட்டிக் கொண்டிருந்தால் அது வழக்கமான கதை சொல்லும் பாணியாக மாறியிருக்கும்.
இன்டர்ஸ்டெல்லார் திரைக்கதையிலும் மனிதர்கள் மற்றும் ஒரு ஜீவராசியைப் போலத்தான் காட்டப்படுவார்கள்.
பறவைப் பார்வையில் மண்ணில் என்ன நடக்கிறது என்பதைக் காட்டிவிடலாம். மண்ணில் ஒரு தூசு போலத் தவிக்கும் ஒரு மனிதனின் மனதில் என்ன நடக்கிறது என்பதையும் பறவைப்பார்வையில் காட்டுவதற்கு அசாத்திய நுண் கற்பனை வேண்டும்.
படம்பார்த்துவிட்டு வெளியே வரும்போது நாம் நம்மை தப்பி வந்த நஜீபாக உணர்கிறோம். படம் பார்த்து ஓரிரு தினங்களாவது அந்தப் பிரம்மாண்ட பாலையின் ஒரு மணல் துளியாகவும் நம்மை உணர்கிறோம்.
அணுவுக்குள் அணுவாக, அப்பாலுக்கு அப்பாலாக இந்த உணர்வுகளை நமக்குள் ஏற்படுத்தியதில் இயக்குநர் பிளெஸ்ஸி மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறார்.

No comments: