Monday, July 16, 2012

இன் & அவுட் சென்னை - மாடு தின்னாத போஸ்டர்கள்!


நண்பா உனக்கொரு வெண்பா
------------------------------------------
நண்பா உனக்கு வெண்பா தெரியுமா என்றது ஒரு மின்னஞ்சல். தெரியாதுபா என்றேன் பதிலில். பரவால்ல இதைப் படிப்பா என்றது அடுத்த அஞ்சல்.

தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பருதி பரிமே லழகர் –திருமலையர்
மல்லர் பரிப்பெருமால் காளிங்கர் வள்ளுவர்நூற்
கெல்லையுரை செய்தா ரிவர்!

நாக்கு முக்க பாட்டு புரிகிற நமக்கு இதுவும் புரிந்துவிடும் என்று நம்புகிறேன். புரியாதவர்கள் தொடர்ந்து வரும் பாராவுக்கு அடுத்த பாராவுக்கு வந்து விளக்கம் கேட்கலாம். வரும்போது க்ரீன் டீயுடன் வாருங்கள். மழைக்காலம் ஆரம்பிச்சாச்சு அல்லவா. பருகிக் கொண்டே வெண்பாவுக்குள் டைவ் அடிக்கலாம்.

சில போஸ்டர்களை மாடு தின்பதில்லையே ஏன்?
-----------------------------------------------------------------------
போஸ்டர் பார்க்கிற கிக் சிறு வயதில் இருந்து ஒட்டிக்கொண்டிருக்கிறது. இன்னமும் வண்டியை செலுத்திக் கொண்டிருக்கும்போது சிலர் சந்து முனை பிள்ளையார்களுக்கு கன்னத்தில் போட்டுக் கொள்வது போல, நான் போஸ்டர் அமலாபால்களை ஒரு முறை கண்ணோடு கண் நோக்கிவிடுகிறேன். சமீபத்தில் கண்ணில் பட்டது வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் புத்தக வெளியீடு. ஆனந்தவிகடனில் தொடராக வந்த கதை (வந்து கொண்டிருக்கிற கதை) புத்தகமாக வந்திருக்கிறது என நினைக்கிறேன்.

செல்ஃபோன் நிறுவனங்கள், புடவைக் கடல் பேனர்கள் மற்றும் சினிமா போஸ்டர்களுக்கு இடையே வைரமுத்துவும் அவர் படைப்புகளும் போஸ்டர்களாக பளபளப்பது எனக்கு சந்தோஷமே. சென்னையில் கண்ட கண்ட இடத்தில் போஸ்டர் ஒட்ட தடை வந்துவிட்டது. அதனால் போஸ்டர்களும் அதைத் தின்னும் மாடுகளும் சென்னையில் அரிதாகிவிட்டன. மூலம், எய்ட்ஸ் போன்ற ரகசிய வியாதிகளுக்கு உடனடி நிவாரணம் தரும் பழுப்பு மஞ்சள் போஸ்டர்கள் கட்டணக் கழிப்பிடம் அல்லது இலவச வெளியிடம் எங்கும் காணப்படும்.

எல்லாவற்றையும் தின்கிற மாடுகள் இவற்றை தின்பதே இல்லை. எய்ட்ஸ் தொற்றும் என்ற பயமா? டேஸ்ட் சரியிருக்காதா? மாடுகளிடம் பேசும் பழக்கம் உள்ளவர்கள் கேட்டுச் சொல்லுங்கள். சமீபத்தில் அருகருகே ஒட்டியிருந்த இரு போஸ்டர்களை இரசித்தேன். வீடு வாங்க விற்க என்னை அணுகுங்கள் என்றது முதல் போஸ்டர். அருகிலேயே இன்னொரு போஸ்டர், இங்கு போஸ்டர் ஒட்டினால் தண்டிப்பேன் என்றது. இரண்டிலும் ஒரே நபர், ஒரே எண்.

வெண்பா எதற்கு? சுவாரசிய விளக்கம்.
ஒரு ஆப்பிளை பிடித்திருப்பது போல கையை வைத்துக் கொண்டு, இதுபோல கட்ச்சிக்கோன்னு சொல்ற மாதிரி வளைவாக இருக்கற இடத்துக்குப் பெயர்தான் கட்ச் வளைகுடா என்றார் ஆசிரியர். 35 வருடங்களுக்கு முன் அவர் சொன்னதை இன்னமும் மறக்க முடியவில்லை. இந்திய மேப்பில் கன்னியாகுமரியை தேடுவேன். ஆனால் கட்ச் வளைகுடாவை அவர் தந்த விஷீவல் விளக்கத்தால் மறக்காமல் சுட்டிக் காட்டுவேன்.

ஆனால் எனக்கு வந்த தமிழ் வாத்தியார்கள் சரியான கட்ச்சர்கள். இலக்கணம் எதுக்கு சார் என்றேன். காதை கடித்தாரா? திருகினாரா? என்று தெரியவில்லை. ஆம்புலன்ஸ் சிவப்பு விளக்குபோல பளீரென காது ஒளிர்ந்தது. சில ஆசிரியர்கள் அப்படித்தான். கேள்வி கேட்பதை விரும்புவதில்லை. ஆனால் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லத்தான் அவர்கள் இருக்கிறார்கள். என் நண்பர் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட சட்டத்துறையில் அரசுப் பணியில் இருக்கிறார். அவர் ஒரு நாள் வெண்பா எதற்கு என்று விளக்கம் சொன்னார். எளிமை மற்றும் சுவாரசியம்.

நண்பர்களின் பெயர்களையும், எண்களையும் மொபைல் போனில் சேமிப்பது போல, வரிசையாக சில பெயர்கள் அல்லது பொருள்களை தொகுத்து வைக்க வெண்பா பயன்படுகிறது என்றார்.

இப்போது முதல் பாராவில் இருக்கும் வெண்பாவை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். சில பெயர்கள் வரிசையாக தொகுக்கப்பட்டிருப்பதை தெரிந்து கொள்வீர்கள்.

அட போங்க சார் என அலுப்பவர்கள் அடுத்த பாராவுக்கும், மற்றவர்கள் முதல் பாராவுக்கும் எகிறிக் குதிக்கலாம்.

டைனோசரை விடப் பிரமாண்டமான ஈ
------------------------------------------------------
முதன் முதலில் டைனோசரை திரையில் பார்த்த வியந்த நான், ஒரு சிறிய ஈயைப் பார்த்தும் வியந்தேன். இயக்குனர் ராஜமௌலி ‘நான் ஈ‘ படத்தில் இதை சாதித்திருக்கிறார். பிரமாண்டத்திற்கு பெயர் பெற்ற சங்கர் இது வரை மல்டிபிளை உத்தியைத்தான் பயன்படுத்தியிருக்கிறார். 100 தொப்பைகளில் ரஜனி படம். மேம்பால டிராபிக் நெரிசலில் 1000 வாகனங்கள். என பார்த்து சலித்திருந்த நம்மை இதற்கு முந்தைய படமான மகதீராவிலேயே நிமிர்ந்து உட்கார வைத்தார். இதில் ஒரு ஈயை வைத்து அசத்திவிட்டார். ஒரு சிறிய ஈ கொடிய மனிதன் ஒருவனை வெல்ல முடியும் என்று நம்ப வைத்திருக்கிறார்.

அவருக்கு ஒரு சபாஷ் என்றால், அசுர உழைப்பை தந்திருக்கும் ஒளிப்பதிவாளர் செந்தில்குமாருக்கு சபாஷ் சபாஷ்! பெரிய பங்களா. ஆங்காங்கே நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. துளியூண்டு ஈ உயிருக்கு பயந்து ஓட, இரண்டு பருந்துகள் அதை விழுங்க துரத்துகின்றன. கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் பர பர சேஸ். இதில் ஸ்பெஷல் என்னவென்றால், துரத்தப்படும் ஈ, துரத்தும் பறவைகள், எரிக்கும் நெருப்பு எல்லாமே கிராபிக்ஸ். சேஸ் நடக்கும் கட்டிடம் மட்டும் உண்மை. எல்லாவற்றையும் கற்பனையில் வைத்துக் கொண்டு காமிராவை நகர்த்த வேண்டும். முதலில் தப்பி ஓடும் ஈயின் பார்வையில், பிறகு துரத்தும் பறவைகளின் பார்வையில், அதன்பின் இவற்றை கவனிக்கும் பார்வையாளர்களின் பார்வையில். ஆங்காங்கே அசத்தும் ஸ்லோமோஷன்களுடன் அரங்கம் அதிர்கிறது.

டிஜிட்டல் காமிரா பிரியர்களுக்காக சில தகவல்கள். Arri, Canon 5D மற்றும் Go-Pro காமிராக்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒரு வினாடியில் 2000 ஃபிரேம்களை விழுங்க வேண்டிய படுஸ்லோ மோஷன் காட்சிகளுக்கு Phantom காமிராக்களை பயன்படுத்தியுள்ளார்கள்.

டிஜிட்டலில் படம் எடுத்தால் பார்க்க நன்றாக இருக்காது என்று இன்னமும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் நான் ஈ பார்த்துவிட்டு தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளவும் என்று சிபாரிசு செய்கிறேன்.

ஓகேப்பா... மீண்டும் வெண்பா
------------------------------------------
வெங்காயம் தக்காளி வெள்ளரி பீக்கம்ப
ரங்கி புடலைவெண்டி அத்திமு -ருங்கைவாழை
கொத்தவரை கோசு குடைமிளகு பூசுணை
கத்தரி பீன்ஸ்பாகற் காய்!

இந்த வெண்பாவில், ஏதோ ஒரு ரெசிப்பி இருக்கிறது. அதற்கு தேவையான காய்கறிகளை தொகுத்திருக்கிறார்கள்.

இப்போது முதல் பாரா வெண்பாவை படியுங்கள். திருக்குறளுக்கு யார் யார் உரை எழுதியுள்ளார்கள் என்ற வரிசை அதில் உள்ளது.

இதை சொல்லிக் கொடுத்த நண்பரிடம் கேட்டேன். வெண்பா வழியாக பெயர்களை அடுக்க சொல்லித் தந்த நீ, உங்கள் அலுவலகத்தில் ஃபைல்களை அடுக்கி வைக்காமல் தேடிக் கொண்டிருப்பது ஏன் என்றேன். அவர் கிர்ர்ர்ர்ர்ர்... என்றார் நான் சர்ர்ர்ர் என புறப்பட்டேன்.

இதே பாணியில் நீங்களும் முயற்சிக்கலாம்.
தலைப்பு - நண்பன்
கடைசி வரி - ஃபேஸ்புக் நண்பனே தெம்பு!


No comments: